அன்று காலேஜ் டிராப்-அவுட்; இன்று கோடீஸ்வரர் - இது ‘பிசிக்ஸ்வாலா’ அலக் பாண்டே கதை!
மிகக் குறைந்த கட்டணத்தில், தரமான கல்வியை இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் உள்ள சாமானிய மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே PhysicsWallah-வின் அலக் பாண்டேவின் கனவு.
அசுர வளர்ச்சி, கோடிகளில் முதலீடு, வளர்ந்த வேகத்தில் வீழ்ச்சி... பெரும்பாலும் இப்படி ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் இந்தியாவின் கல்வித் தொழில்நுட்பத் துறையின் கதைகள்.
ஆனால், இந்த வழக்கமான திரைக்கதையை மாற்றி எழுதி, ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ஓர் ஆசிரியரின் எளிய வகுப்பறை. அதுதான் அலக் பாண்டே மற்றும் அவரது ‘பிசிக்ஸ்வாலா’ (PhysicsWallah) நிறுவனத்தின் அசாத்திய பயணம்.
கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்த நீண்ட பயணம் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டும் வகையில், பிசிக்ஸ்வாலா நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் முறைப்படி தடம் பதித்தது. அதன் ஐபிஓ வெளியீட்டு விலையை விட 42 சதவீத கூடுதல் பிரீமியத்தில் பங்குகள் பட்டியலிடப்பட்டு, ஏறக்குறைய 3,200 கோடி ரூபாய் திரட்டியது.
இந்த மாபெரும் வெற்றியின் மூலம், நொய்டாவைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான அலக் பாண்டே இந்தியாவின் மிக இளைய பில்லியனர் ஆனார். அவருக்கு வயது 33. அவருடன் இணைந்த அவரது பார்ட்னர் பிரதீக் பூப் கூட பில்லியனர் பட்டியலில் இணைந்தார்.
மேலோட்டமாகப் பார்த்தால் இது பங்குச்சந்தையின் மாபெரும் வெற்றி போலத் தோன்றலாம். ஆனால், ஆழமாகப் பார்த்தால், இது ஒரு சாதாரண ஆசிரியர், மாணவர்களுக்காகத் தேர்ந்தெடுத்த ஒரு மாற்றுப் பாதையின் அசாத்திய வெற்றியாகும்.

Physicswallah அலக் பாண்டே
அலக்கின் பயணம் தொடங்கிய கதை
அலக் பாண்டே ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது பயணத்தை ஆரம்பிக்கவில்லை. அவர் ஓர் எளிய வகுப்பறையில் இருந்துதான் தொடங்கினார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் வளர்ந்த அவர், பள்ளிப் பருவத்திலேயே குடும்பச் சூழ்நிலை காரணமாக மற்ற மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கத் தொடங்கினார். பின்னர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கச் சேர்ந்தபோதும் அவரது கற்பித்தல் பணி தொடர்ந்தது. ஆனால், குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாகத் தனது பொறியியல் படிப்பின் மூன்றாம் ஆண்டிலேயே கல்லூரியை விட்டு வெளியேறினார்.
கல்லூரியை விட்டு நின்றாலும், கற்பிக்கும் லட்சியத்தை அவர் கைவிடவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டில், "Physics Wallah - Alakh Pandey" என்ற ஹிந்தி யூடியூப் சேனலைத் தொடங்கி, இயற்பியல் பாடங்களை முற்றிலும் இலவசமாக நடத்த ஆரம்பித்தார்.
அலக் பாண்டேவின் கற்பித்தல் பாணி மிகவும் சுவாரசியமாகவும், நகைச்சுவை உணர்வுடனும், எளிய உதாரணங்களுடனும் இருந்ததால் மாணவர்களிடையே அது காட்டுத்தீ போலப் பரவியது.
குறிப்பாக, லட்சக்கணக்கில் பணம் கட்டி கோச்சிங் சென்டர்களுக்குச் செல்ல முடியாத ஏழை மாணவர்களுக்கு இவரது வீடியோக்கள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தன. காலப்போக்கில், இந்தச் சேனல் 14 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றது.
கடந்த 2020-ஆம் ஆண்டில், PenPencil என்ற கல்விச் செயலியை உருவாக்கியிருந்த தொழில்முனைவோர் பிரதீக் பூப் உடன் அலக் பாண்டே கைகோர்த்தார்.
“மிகக் குறைந்த கட்டணத்தில், தரமான கல்வியை இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் உள்ள சாமானிய மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்,” என்பதுதான் இவர்களின் எளிய நோக்கமாக இருந்தது.
ஜேஇஇ மற்றும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிகளுடன் தொடங்கிய இந்த தளம், பின்னர் பள்ளி அளவிலான கல்வி மற்றும் அரசுப் பணித் தேர்வுகளுக்கும் விரிவடைந்தது.

ஆன்லைன் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் ஆஃப்லைன் மையங்களையும் அவர்கள் தொடங்கினர். இவர்களின் நேர்மையான அணுகுமுறையைக் கண்டு வெஸ்ட் பிரிட்ஜ் கேபிடல், லைட்ஸ்பீட் வென்ச்சர்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்கள் பிசிக்ஸ்வாலாவில் 27 பில்லியன் ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்தன.
இந்த நிதியுதவியைக் கொண்டு, வெளிநாடு வாழ் இந்தியர்களைச் சென்றடைய ஐக்கிய அரபு அமீரகத்தின் நாலெட்ஜ் பிளானட் நிறுவனத்தையும், கேரளாவில் புகழ்பெற்ற Xylem Learning நிறுவனத்தின் 50 சதவீதப் பங்குகளையும் பிசிக்ஸ்வாலா அடுத்தடுத்துக் கைப்பற்றியது.
சமீபத்தில், ‘பிசிக்ஸ்வாலா’ மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் தனது உத்தியில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. அதன்படி, இனி நிறுவனம் தனது சொந்த இருப்புநிலைக் கணக்கிலிருந்து நேரடியாக கடன் வழங்காமல், ஒழுங்குமுறை கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) உடன் இணைந்து மாணவர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் கடன் தவறுதலால் ஏற்படக் கூடிய நிதி அபாயங்கள் மற்றும் இருப்புநிலைக் கணக்கு தொடர்பான ஆபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி கிடைப்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவதோடு, நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மையையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
‘ஹலோ பச்சோன்’ வெப் சீரிஸ்
ஒரு கல்லூரி டிராப்-அவுட் இளைஞர், இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரராக உயர்ந்த இந்த உத்வேகமூட்டும் கதை, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்ததால், அண்மையில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் ‘ஹலோ பச்சோன்’ என்ற பெயரில் 5 பாகங்கள் கொண்ட ஒரு வெப் தொடராக வெளியானது.

அலக் பாண்டே தனது வகுப்பைத் தொடங்கும்போது அன்போடு அழைக்கும் புகழ்பெற்ற வாசகமே இந்தத் தொடரின் தலைப்பாக வைக்கப்பட்டது.
அலக் பாண்டேயின் ஆரம்பக் கால வறுமை, நிறுவன வளர்ச்சியின்போது மற்ற போட்டி நிறுவனங்களால் ஆசிரியர்கள் மொத்தமாகப் பறிக்கப்பட்ட சவாலான தருணங்கள் மற்றும் ஆஃப்லைன் வகுப்பறைகளைக் கட்டமைத்த விதம் ஆகியவை இதில் அலசப்பட்டன.
இந்தத் தொடரில் அலக் பாண்டேயாக நடித்த வினீத் குமார் சிங்கின் எதார்த்தமான நடிப்பு மற்றும் ஆசிரியரின் தனித்துவமான மேடை மேனரிசம் ஆகியவை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டாலும், சில முன்னணி ஊடகங்கள் இந்தத் தொடர் பிசிக்ஸ்வாலா பிராண்டை விளம்பரப்படுத்துவது போல மேலோட்டமாக அமைந்துள்ளது என்றும் விமர்சித்தன.
எதிர்காலம் எத்தகையது?
‘இளம் கோடீஸ்வரர்’ என்ற மகுடம் அலக் பாண்டேவுக்குக் கிடைத்த ஒரு மைல்கல் மட்டுமே. அது அவரது இறுதி இலக்கு அல்ல. தற்போதும் தகுந்த தொழில்நுட்ப வசதிகளுடன், 100 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட 200-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது.
ஆனால், சாமானிய மாணவர்கள் இந்த பிரம்மாண்ட வணிக வெற்றியையோ அல்லது நிறுவனத்தின் பில்லியன் டாலர் மதிப்பையோ வைத்து பிசிக்ஸ்வாலாவை மதிப்பிடப் போவதில்லை.
ஆரம்பத்தில் அலக் பாண்டே கொடுத்த அதே வாக்குறுதியின்படி, ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் இப்போதும் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறதா, பாடங்களின் தரம் குறையாமல் இருக்கிறதா என்பதை வைத்துத்தான் இந்த வெற்றியைக் காலம் தீர்மானிக்கும்.
பங்குச்சந்தை நிலவரங்களை அறியாத, ஆனால் தங்களது வாழ்க்கையில் கல்வி ஒன்றையே நம்பியிருக்கும் இந்தியாவின் ஏதோ ஒரு கிராமத்து வகுப்பறையில்தான் ‘பிசிக்ஸ்வாலா’வின் உண்மையான எதிர்காலம் ஒளிந்திருக்கிறது.
Edited by Induja Raghunathan

