‘பிஹாரின் காளான் மனிதர்’ - 50,000+ விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் சஞ்சீவ் குமார்!
தனது சொந்த கிராமமான மொஹத்திப்பூரில் SABRI Spawn Lab என்ற விதைக்கூடத்தை நிறுவியுள்ள சஞ்சீவ் குமார், சிறு விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் காளான் மூலம் நிலையான வருமானத்தைப் பெற உதவி வருகிறார்.
பொறியியல் படிப்பு முடித்தவுடன் பெரும்பாலான இளைஞர்கள் நகரங்களை நோக்கி நல்ல வேலை தேடிச் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிஹார் மாநிலம் நலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமாருக்கும் இந்த வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர் நகரத்து வேலையைத் தேர்ந்தெடுக்காமல், தனது சொந்தக் கிராமத்தையும் விவசாயத்தையும் தேர்ந்தெடுத்தார்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சீவ், பொறியியல் படிப்பின் மூலம் பெற்ற தொழில்நுட்ப அறிவையும், குடும்பத்தின் பாரம்பரிய விவசாய அனுபவத்தையும் இணைத்து காளான் வளர்ப்பில் உள்ள வாய்ப்புகளை ஆராயத் தொடங்கினார்.
கடந்த 20 ஆண்டு காலப் பயணத்தில், காளான் உற்பத்தி மற்றும் பயிற்சியில் தொடங்கி, காளான் விதைகள் தயாரிக்கும் நிலையை அடைந்துள்ளார்.
தனது சொந்த கிராமமான மொஹத்திப்பூரில் SABRI Spawn Lab என்ற விதைக்கூடத்தை நிறுவினார். இன்று இவர் பிஹார் மக்களால் ‘பிஹாரின் காளான் மனிதர்’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

அடித்தளும் அசத்தல் பயணமும்
சஞ்சீவ் குமாரின் கூற்றுப்படி, பிஹாரின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50,000-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் விவசாயிகளுக்கு காளான் உற்பத்தி குறித்த பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
தற்போது காளான் விதைத் தயாரிப்பு திறனை அதிகரிப்பதுடன், ‘பட்டன்’ காளான்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் காளான் வளர்ப்பிற்குப் பின் எஞ்சும் கழிவுகளிலிருந்து கரிம உரம் தயாரிக்கும் திட்டத்திலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியாவில் காளான் உற்பத்தி மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சூழலில் இவரது முயற்சிகள் முடுக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசின் தோட்டக்கலை இயக்ககத்தின் திட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் காளான் உற்பத்தி 2016-ஆம் ஆண்டில் சுமார் 1.29 லட்சம் டன்னாக இருந்தது, 2024-ஆம் ஆண்டில் சுமார் 3.99 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதாவது, வெறும் எட்டே ஆண்டுகளில் உற்பத்தி மும்மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
நலந்தா மாவட்டத்தில் உள்ள பிந்த் ஒன்றியத்தின் மொஹத்திப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார், ராஞ்சி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் B.I.T. Sindri கல்லூரியில் மின் பொறியியல் பயின்றார். விவசாயக் குடும்பத்தில் வளர்ந்தவர் என்பதால், விவசாயம் அவருக்குப் புதிய ஒன்றாக இருக்கவில்லை.
பொறியியல் படிப்பு அவருக்குத் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ளும் பார்வையைக் கொடுத்தது. குடும்பத்தின் பின்னணி விவசாயத்தின் ஆரம்பக்காலப் புரிதலைக் கொடுத்தது. இந்த இரண்டும் இணைந்து காளான் உற்பத்திக்கான அடித்தளத்தை அமைத்தன.
2002-ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் பகுதியில் காளான் உற்பத்தி குறித்த பயிற்சியைப் பெற்றார். அதன்பின்னர், காளான் சாகுபடியைத் தொடங்கினார்.
போராட்டமும் லட்சியமும்
கிராமங்களில் படித்த இளைஞர்களுக்கு அரசு அல்லது தனியார் வேலைகளே பாதுகாப்பான வழியாகக் கருதப்பட்ட காலத்தில், விவசாயத்தை, அதுவும் காளான் போன்ற அரிதான பயிரைத் தொழிலாகத் தேர்ந்தெடுப்பது எளிய முடிவாக இருக்கவில்லை.
இது குறித்துப் பேசும் சஞ்சீவ், “தொடக்கக் காலத்தில் மக்கள் நம்பிக்கையைப் பெறுவதே எங்களுக்குப் பெரிய சவாலாக இருந்தது. காளான்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருந்தது. பிஹாரில் தயாரிக்கப்படும் விதைகளின் தரத்தையும் மக்கள் எளிதில் நம்பவில்லை.
"2002 முதல் 2008 வரை நான் கடுமையாகப் போராடினேன். நிதி நெருக்கடிகள் வந்தன, மக்களின் கேலிப் பேச்சுக்களையும் கேட்க வேண்டியிருந்தது. ஆனால், குடும்பத்தின் ஆதரவும், ‘ஆரோக்கியமான பிஹார், வளமான பிஹார்’ என்ற எனது லட்சியமுமே என்னை முன்னோக்கி நகரச் செய்தன,” என்கிறார்.
சஞ்சீவ் காளான் வளர்ப்பைத் தொடங்கியபோது, அது வெறும் சுய தொழிலாக மட்டுமே இருக்கக் கூடாது என்று நினைத்தார். சுற்றியுள்ள விவசாயிகளுக்கும் இதன் சாகுபடி குறித்துக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி நாளுக்கு நாள் விரிவடைந்தது.
50,000+ விவசாயிகளுக்கு பயிற்சி...
பிஹாரின் பல்வேறு மாவட்டங்களில் 50,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளதாகக் கூறும் சஞ்சீவ், பிஹார் மற்றும் ஜார்க்கண்டில் பல கட்டுப்பாடான சூழல் கொண்ட காளான் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளார்.
காளான் வளர்ப்பு கிராமப்புறக் குடும்பங்களுக்குக் கூடுதல் வருமானத்தை ஈட்டித் தரும் என்கிறார் சஞ்சீவ். இதற்குப் பெரிய நிலப்பரப்பு தேவையில்லை; நெல் வைக்கோல் போன்ற விவசாயக் கழிவுகளையே காளான் வளர்ப்பதற்கான ஊடகமாகப் பயன்படுத்தலாம். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும் (ICAR) காளான் உற்பத்தியைக் கிராமப்புறப் பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கான ஒரு சிறந்த வருவாய் வாய்ப்பாகக் கருதுகிறது.
“நாங்கள் ‘மக்களால் உற்பத்தி’ என்பதில் அதிக கவனம் செலுத்துகிறோமே தவிர, ‘ஒரே இடத்தில் அதிக உற்பத்தி’ என்பதில் அல்ல. சில பெரிய நிறுவனங்களில் மட்டும் அதிக காளான்களை உற்பத்தி செய்வது போதாது. அதிகமான மக்கள் அதைக் கற்றுக்கொண்டு, வருமானம் ஈட்டி, உணவிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கிராமங்களில் சிறு அளவிலான உற்பத்தி அதிகரித்தால், வேலைவாய்ப்புகள் அங்கேயே உருவாகி, உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறும்,” என்று சஞ்சீவ் தெளிவுபடுத்துகிறார்.
தினசரி 1,000 கிலோ நோக்கி...
சாகுபடி மற்றும் பயிற்சிகளுக்குப் பிறகு, காளான் விதைகள் தயாரிக்கும் நோக்கில் மொஹத்திப்பூர் கிராமத்தில் ‘சப்ரி ஸ்பான் லேப்’ (Systemic Agro Based Research Institute) என்ற மையத்தை நிறுவினார். இதுவே பிஹாரின் மிகப் பெரிய காளான் விதை உற்பத்தி மையம் என்று சஞ்சீவ் கூறுகிறார்.
கடந்த 3–4 ஆண்டுகளில், இந்த விதைக்கூடத்தின் உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 400 கிலோவில் இருந்து 600 கிலோவாக உயர்ந்துள்ளது. விரைவில் இதை நாளொன்றுக்கு 1,000 கிலோவாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு சிப்பி, பட்டன் மற்றும் பால் காளான்களுக்கான விதைகள் தயாரிக்கப்படுகின்றன. கட்டுப்பாடான சூழலில் பகுதி - தானியங்கி அமைப்புகள் மற்றும் ஆற்றல் சேமிப்புச் சாதனங்கள் மூலம் விதைகள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் ஏஐ ஆதரவு பெற்ற கட்டுப்பாட்டு அமைப்புகளை நிறுவ ஆலோசித்து வருகின்றனர்.
தற்போது இந்த விதைக்கூடத்தில் 10 பயிற்சி பெற்ற ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 7 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள்.
“பிஹாரில் விதைக்கூடத்தைத் தொடங்கியபோது, உள்ளூரிலேயே தரமான காளான் விதைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை விவசாயிகளிடம் ஏற்படுத்துவது கடினமாக இருந்தது. முன்பு பட்டன் காளான் விதைகள் பஞ்சாப், ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டன. ஆனால் இன்று, எங்கள் மையத்திலிருந்து பிஹார் மட்டுமின்றி ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா மற்றும் ஹரியானாவிற்கும் விதைகள் அனுப்பப்படுகின்றன. வியாபாரத்தை விட கிராமத்தில் இத்தகைய திறன் உருவாக்கப்பட்டுள்ளதே எனக்கு முக்கியமானது,” என்கிறார் சஞ்சீவ்.

‘கழிவிலிருந்து செல்வம்’
காளான் உற்பத்தியின் மற்றொரு முக்கிய அம்சம் விவசாயக் கழிவுகளின் பயன்பாடாகும். நெல் வைக்கோல் உட்படப் பல பயிர்க்கழிவுகள் காளான் வளர்ப்பிற்குப் பயன்படுகின்றன. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் சுமார் 600 மில்லியன் டன் பயிர்க்கழிவுகள் கிடைக்கின்றன. இது நாட்டில் கிடைக்கும் விவசாயக் கழிவுகளின் பிரம்மாண்டமான அளவைக் காட்டுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், பல்வேறு விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தி சிப்பிக் காளான்களை வளர்க்கும் சோதனைகளை ICAR மேற்கொண்டுள்ளது. உதாரணமாக, அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் பகுதியில் ஏலக்காய் கழிவுகளைப் பயன்படுத்திச் சிப்பிக் காளான்கள் வளர்க்கப்பட்டன.
இந்த ‘கழிவிலிருந்து செல்வம்’ மாதிரியில் சஞ்சீவ் பெரிய வாய்ப்புகளைக் காண்கிறார். காளான் வளர்ப்பிற்குப் பின் எஞ்சும் கழிவுகள் ‘ஸ்பென்ட் மஷ்ரூம் சப்ஸ்ட்ரேட்’ (SMS) என அழைக்கப்படுகின்றன. இவை உரம் தயாரிப்பிலும் பிற விவசாயப் பயன்பாடுகளிலும் மீண்டும் பயன்படுத்தப்படலாம்.
“நம்மிடம் பெருமளவிலான விவசாயக் கழிவுகள் உள்ளன. அதில் சிறிய அளவை காளான் உற்பத்தியில் பயன்படுத்தி, மக்கள் காளானை உணவில் சேர்த்துக் கொண்டால், வேலைவாய்ப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகிய இரண்டிலும் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இதற்கு உற்பத்தி மட்டுமல்லாமல், விழிப்புணர்வு, பதப்படுத்துதல், சேமிப்பு மற்றும் விநியோகச் சங்கிலியில் தீவிரமாகச் செயல்பட வேண்டும்,” என்கிறார்.
அணிவகுக்கும் திட்டங்கள்...
பிஹார் அரசு காளான் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் சூழலில் சஞ்சீவின் பயணம் தொடர்கிறது. அரசு மானியம் மற்றும் பயிற்சிகளுக்கு அப்பாற்பட்டு, தற்போது சந்தை, குளிர்பதனச் சங்கிலி, சேமிப்பு மற்றும் பதப்படுத்துதலில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சஞ்சீவ் நம்புகிறார்.
சப்ரி ஸ்பான் லேப் தனது வணிகத்தின் அடுத்த கட்டத்திற்குத் தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆண்டிற்கு 200 டன் உற்பத்தி திறன் கொண்ட ‘பட்டன் காளான்’ உற்பத்தி நிலையத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது உற்பத்திக்கு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கான பயிற்சி மையமாகவும் செயல்படும்.

ஆண்டின் இறுதிக்குள், காளான் உற்பத்திக் கழிவுகளிலிருந்து கரிம உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் நிலையத்தையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, பெண்கள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய குழுவுடன் காளான் பதப்படுத்தப்பட்ட பொருட்களைத் தயாரிக்கவும், Shiitake வகை காளான்களின் உற்பத்தியைத் தொடங்கவும் ஆயத்தமாகி வருகின்றனர்.
அரசு உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் ரயில்வே போன்ற நிறுவனக் கொள்முதல் செய்வோரிடம் காளான்களுக்கான தேவையை அதிகரிக்கும் வாய்ப்புகளையும் ஆராயலாம் என்கிறார் சஞ்சீவ்.
“காளான் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால் சில திட்டங்களில் வங்கி மற்றும் கடன் சார்ந்த நடைமுறைகள் சிறு விவசாயிகளுக்குக் கடினமாக இருக்கின்றன. சந்தை, சேமிப்பு, விநியோகச் சங்கிலி மற்றும் பதப்படுத்துதலில் அரசு கூடுதல் கவனம் செலுத்தினால், காளான் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்,” என்று சுட்டிக்காட்டுகிறார்.
காளான் உற்பத்தி, விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகத் துறைகளில் ஆற்றிய சேவைகளுக்காக சஞ்சீவ் குமார் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 2006-07-ஆம் ஆண்டில் பிஹார் அரசு வழங்கிய ‘கிசான் ஸ்ரீ’ விருது, 2021-ஆம் ஆண்டின் ‘நெல்சன் மண்டேலா அமைதி நோபல் விருது’, ‘நீலகண்ட் சம்மான்’, ‘சர்சார் படேல் சம்மான்’ மற்றும் ‘ஷியாம் நாராயண் சிங் சமூக நல்லிணக்க சம்மான்’ ஆகியவை இதில் அடங்கும்.
மேலும், விவசாயத் துறையில் அளித்த பங்களிப்பிற்காக அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டமும், MGGPF அமைப்பால் கௌரவப் பேராசிரியர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விருதுகளை விட அவரது கதையின் மிக முக்கிய அம்சம்...
இருபது ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் பட்டத்திற்குப் பின் நகரத்து வேலையைத் தேர்ந்தெடுக்காமல், கிராமத்திலேயே தங்கித் தொழில்நுட்பத்தை விவசாயத்தில் பயன்படுத்த அவர் எடுத்த முடிவுதான் அது!
இன்று, நாளொன்றுக்கு 1,000 கிலோ விதை உற்பத்தி, ஆண்டுக்கு 200 டன் பட்டன் காளான் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் மூலம் முழுமையான மதிப்புக் கூட்டப்பட்ட வணிகத்தை உருவாக்குவதே அவரது அடுத்த இலக்காக உள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள சிறு விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் காளான் மூலம் எந்த அளவிற்கு நிலையான வருமானத்தைப் பெற முடிகிறது என்பதிலேயே இந்த மாதிரியின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது. காளான் உற்பத்தி என்பது ஒரு சில பெரிய உற்பத்தியாளர்களின் வணிகமாக மாறாமல், கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு தொழிலதிபர்களின் வருமான ஆதாரமாக மாற வேண்டும் என்ற தனது ‘மக்களால் உற்பத்தி’ என்ற எண்ணத்தை முன்னோக்கிச் கொண்டு செல்லவே சஞ்சீவ் விரும்புகிறார்.
அரசு கொள்கைகள், மின்சார மானியம் ஆகியவை மாநிலத்தில் வேளாண் சார்ந்த தொழில்களுக்குப் புதிய கதவுகளைத் திறந்துள்ளதாக சஞ்சீவ் குமார் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.
Edited by Induja Raghunathan

