இந்திய மொழிகளில் குரல்வழி வங்கிச் சேவை - ஐஐடி மெட்ராஸ், ரிசர்வ் வங்கி கூட்டு முயற்சி!
சென்னை ஐஐடி ஆய்வு பூங்கா IIT Madras Research Park (IITMRP) மற்றும் சென்னை ஐஐடி இன்குபேஷன் மையம் ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கி புதுமையாக்க மையத்துடன் (RBIH இணைந்து, குரல் வழி சேவை சார்ந்த வங்கிச் சேவை புதுமையாக்கத்தை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அனைவருக்கும் நிதிச்சேவை அளிப்பதில் முக்கியத் தடையாக இருக்கும் மொழி வரம்புகளை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் இந்த சேவை உருவாக்கப்படுகிறது என ஐஐடி தெரிவித்துள்ளது.
குரல் வழி சார்ந்த வங்கிச்சேவை, ஆங்கிலம் தவிர, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளில் குரல்வழி கட்டளை மூலம் அடிப்படை வங்கிப் பரிவர்த்தனைகளை இயக்கும் வகையில் அமைகிறது.
பார்வைக் குறைபாடு கொண்ட மற்றும் போதிய கல்வியறிவு இல்லாத வாடிக்கையாளர்கள் வங்கிச்சேவை அணுக இது உதவும். வங்கிச்சேவைக்கு வெளியே உள்ளவர்கள், தங்கள் மொழியில் வங்கிச்சேவையை பெறவும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவைக்கான கூட்டு முயற்சியின் துவக்கத்தை குறிக்கும் வகையில், IITMRP, IITMIC, RBIH ஆகியவை, ஸ்டேட் வங்கி, ஆகிசிஸ் வங்கி, கோடக் மகிந்திரா ஆகிய வங்கிகளுடன் இணைந்து, சென்னை ஐஐடி ஆய்வு பூங்கா வளாகத்தில் குரல்வழி வங்கிச்சேவை ஹேக்கதானை ’வால்ட்டர் வாய்ஸ்’ (Vaulter Voice) எனும் பெயரில் நடத்தியது.
மாணவர்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் இளம் தொழில்முறையாளர்கள் இந்த ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குரல்வழி வங்கிச்சேவை தொடர்பான முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
சர்வதேச தாய்மொழி தினத்தில் இந்த ஹேக்கத்தான் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் தொழில்முறையாளர்களிடம் இருந்து 114 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களில் இருந்து 9 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, 6 மணிநேர ஹேக்கத்தானுக்கு அழைக்கப்பட்டனர். தாங்கள் உருவாக்கிய செயலிகளை பரிசோதித்ததோடு, வல்லுனர் குழு ஆலோசனைகளுக்கு ஏற்பவும் செயல்பட்டனர்.
“இந்தியாவில் டிஜிட்டல் வங்கிச்சேவை வசதி இல்லாத 600 மில்லியன் பேர் உள்ளனர். வங்கிச்சேவை பெறாத இவர்களில் பாதி பேருக்கு மேல், அடுத்த சில ஆண்டுகளில் குரல் வழி சேவை மூலம் வங்கிச்சேவை பெற வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என இந்த முயற்சி குறித்து, RBIH சி.இ.ஓ ராஜேஷ் பன்சால் கூறினார்.
“இந்தியாவில் குரல் வழி வங்கிச்சேவைக்கான களம் தயாராக உள்ளது. நம்முடைய பிராந்திய மொழித் தேவைகளை பூர்த்தி செய்யும் இந்திய நுட்பங்களை இப்போது உருவாக்க வேண்டும்.
அனைவருக்குமான நிதிநுட்ப நோக்கத்தின் ஒரு அங்கமாக, இன்று காட்சிப்படுத்தப்பட்ட தீர்வுகளை சிலவற்றை மேற்கொண்டு ஆதரித்து உருவாக்க இருக்கிறோம். அடுத்த 12-18 மாதங்களில் முன்னோட்ட திட்டம் தயாராக இருக்கும் என எதிர்பார்க்கிறோம், என சென்னை ஐஐடி ஆய்வு பூங்கா தலைவர் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா தெரிவித்தார்.
Edited by Induja Raghunathan