அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஐஐடி மெட்ராஸின் முதல் மையம் தொடக்கம்!
ஐஐடி மெட்ராஸின் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் டீப்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலகச் சந்தைகளுடன் நேரடியாக இணைக்கும் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் தனது முதல் அமெரிக்க மையத்தை மென்லோ பார்க் நகரில் அமைத்து, இந்தியாவின் டீப்-டெக் புதுமை மற்றும் ஆராய்ச்சி சூழலை உலகளவில் விரிவுபடுத்தும் முக்கிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்த மையம் 2026 மே 6 அன்று நடைபெற்ற SelectUSA Investment Summit நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச முதலீடுகளை ஊக்குவிக்கும் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக மாநாடுகளில் ஒன்றாக இந்த உச்சி மாநாடு கருதப்படுகிறது.
ஐஐடி மெட்ராஸின் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் டீப்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலகச் சந்தைகளுடன் நேரடியாக இணைக்கும் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த மையம் 2026 ஏப்ரல் 24 அன்று CA Startups உடன் இணைந்து செயல்பாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு அருகிலுள்ள இந்த மையம், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உலகளாவிய முதலீடு, தொழில்நுட்ப கூட்டாண்மை, வழிகாட்டுதல் மற்றும் சர்வதேச சந்தை அணுகலை வழங்கும் முக்கிய தளமாக செயல்பட உள்ளது. மேலும், டீப்-டெக் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வணிகமயமாக்கல் மற்றும் ஸ்டார்ட்அப் அடைகாத்தல் ஆகியவற்றிலும் இந்த மையம் கவனம் செலுத்தும்.
ஐஐடி மெட்ராஸின் வி.காமகோடி இது தொடர்பாகக் கூறுகையில்,
“இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஐஐடி மெட்ராஸின் நோக்கத்தின் இயல்பான அடுத்த கட்டமே அமெரிக்க விரிவாக்கம். இந்த மையம் உலக தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் முதலீட்டு சூழல்களுடன் ஆழமான ஒத்துழைப்பை உருவாக்கும்,” என்றார்.
இந்தத் திட்டத்திற்கு மொத்தம் 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 4.5 மில்லியன் டாலர் நேரடி முதலீடாக ஐஐடி மெட்ராஸ் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை வழங்குகிறது.
இந்த புதிய முயற்சி குறித்து ரகுநாதன் ரெங்கசாமி தெரிவித்ததாவது,
“இந்த மையம் இந்தியா–அமெரிக்கா தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், டீப்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும்,” என்றார்.
மேலும், பிரீத்தி அகலயம் கூறுகையில், இந்த முயற்சி இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே புதுமை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு புதிய வாயில்களை உருவாக்கும் என்றும், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் உலகளாவிய சூழலுடன் நேரடியாக இணைவதற்கு உதவும் என்றும் தெரிவித்தார்.
இதனுடன், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மேலும் ஒரு மையத்தை அமைக்கும் திட்டத்தையும் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை அறிவித்துள்ளது. இது நிதி, கொள்கை மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இந்திய டீப்-டெக் முயற்சிகளின் தொடர்புகளை விரிவுபடுத்தும் என கூறப்பட்டுள்ளது.
