மருத்துவக் கல்வியைத் தொடங்க ஐஐடி மெட்ராஸ் திட்டம் - விரைவில் MBBS, MD பட்டங்கள் வழங்கத் திட்டம்!
ஐஐடி மெட்ராஸ் ஏற்கெனவே மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மருத்துவ அறிவியல் பள்ளியை தொடங்கி, எம்பிபிஎஸ், எம்.டி., பிஎச்.டி. உள்ளிட்ட மருத்துவப் பட்டங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் கல்விக்கு உலக அளவில் புகழ்பெற்ற ஐஐடி மெட்ராஸ், தற்போது மருத்துவக் கல்வித் துறையிலும் கால் பதிக்கத் தயாராகி வருகிறது. மருத்துவ அறிவியல் பள்ளியை (School of Medical Sciences) தொடங்கி, எம்பிபிஎஸ், எம்.டி., பிஎச்.டி. உள்ளிட்ட மருத்துவப் பட்டங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி தெரிவித்துள்ளார்.
ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் ‘இந்தியா டுடே’வுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் கூறியதாவது:
“ஐஐடி மெட்ராஸ் நிச்சயமாக மருத்துவ அறிவியல் பள்ளியைத் தொடங்கும். மருத்துவப் பட்டங்களை வழங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அது இந்த நிறுவனத்தை மேலும் பெரியதாக மாற்றும் விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்றார்.
ஐஐடி மெட்ராஸ் ஏற்கெனவே மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு மே மாதம், மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை தொடங்கியது. இத்துறையின் கீழ் நான்கு ஆண்டுகள் கொண்ட இளநிலைப் படிப்பு வழங்கப்படுகிறது.
இந்தப் படிப்பில் பொறியியல் மற்றும் உயிரியல் ஆகிய இரு துறைகளிலும் பயிற்சி பெற்ற ‘ஹைபிரிட் பட்டதாரிகள்’ உருவாக்கப்படுகின்றனர். மருத்துவ சாதனங்கள், மருத்துவப் படமெடுப்பு அமைப்புகள், உடல் உறுப்புப் பொருத்திகள் மற்றும் சுகாதாரத் தொழில்நுட்ப மென்பொருட்களை உருவாக்குவதில் இவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
ஆனால் தற்போது திட்டமிடப்பட்டுள்ள மருத்துவ அறிவியல் பள்ளி இதைவிட ஒரு படி மேலே சென்று, நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்களை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் அவசியம் குறித்து பேராசிரியர் காமகோடி கூறியதாவது:
“எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனமும் மருத்துவப் பள்ளியைத் தொடங்க வேண்டும். இல்லையென்றால், ஒரு நாடாக நாம் மருத்துவச் சந்தையில் நிலைத்திருக்க முடியாது.”
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா உயர்தர மருத்துவ உபகரணங்களுக்காக வெளிநாடுகளை அதிகம் சார்ந்திருந்தது தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவிலேயே மருத்துவத் தொழில்நுட்பங்களை உருவாக்க, மருத்துவர்களும் பொறியாளர்களும் ஒரே இடத்தில் இணைந்து பயிற்சி பெற வேண்டும் என்பது ஐஐடி மெட்ராஸ் நிர்வாகத்தின் பார்வையாக உள்ளது. இதன் மூலம் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரு துறைகளின் அறிவையும் ஒருங்கிணைத்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்.
எனினும், ஐஐடி மெட்ராஸ் நேரடியாக எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்க முடியாது. இந்தியாவில் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் செயல்பாடுகளை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஒழுங்குபடுத்துகிறது. எனவே, எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளைத் தொடங்க NMC-யின் அனுமதி பெற வேண்டும்.
மேலும், மாணவர்களுக்கு நேரடி மருத்துவப் பயிற்சி வழங்குவதற்காக கற்பித்தல் மருத்துவமனை (Teaching Hospital) ஒன்றையும் அமைக்க வேண்டும்.
முன்னுதாரணமாக ஐஐடி கரக்பூர்
இதற்கு ஐஐடி காரக்பூர் முன்னுதாரணமாக உள்ளது. அந்த நிறுவனம் சொந்தமாக மருத்துவமனையை உருவாக்கி, முதுநிலை எம்.டி. படிப்பை நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. அதேவேளையில், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக அதன் எம்பிபிஎஸ் திட்டம் இன்னும் நிலுவையில் உள்ளது.
எனவே, ஐஐடி மெட்ராஸும் முதலில் தேவையான மருத்துவமனை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, அதன் பின்னர் ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெற வேண்டிய நிலை உள்ளது.
மருத்துவத் துறையில் புதிய முயற்சியை மேற்கொள்ள ஐஐடி மெட்ராஸிடம் ஏற்கெனவே வலுவான அடித்தளம் உள்ளது. வளாகத்தில் சுகாதாரத் தொழில்நுட்ப மையம், மூளை வரைபட ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், சென்னையில் உள்ள முன்னணி மருத்துவமனைகளுடன் ஐஐடி மெட்ராஸ் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளையும் மேற்கொண்டு வருகிறது.
பொறியாளர்களும் மருத்துவர்களும் ஏற்கெனவே இணைந்து பணியாற்றி வரும் நிலையில், எதிர்காலத்தில் இரு துறைகளிலும் ஒருங்கிணைந்த அறிவைப் பெற்ற மாணவர்களை உருவாக்குவதே புதிய மருத்துவப் பள்ளியின் நோக்கமாக இருக்கும்.
இந்தத் திட்டத்துக்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி கிடைத்து செயல்பாட்டுக்கு வந்தால், ஐஐடி மெட்ராஸின் கல்வி அடையாளத்தில் மட்டுமின்றி, மருத்துவத் தொழில்நுட்பம், புதுமை மற்றும் உள்நாட்டு மருத்துவ உபகரண உற்பத்தியில் இந்தியாவின் அணுகுமுறையிலும் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இது அமையலாம்.
