அமெரிக்க பல்கலை.க்கு ரூ.170 கோடி நன்கொடை அளித்த இந்திய வம்சாவளி தம்பதி!
ஏஐ ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தாங்கள் பயின்ற பல்கலைக்கழகத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனுராதா - விகாஸ் சின்ஹா தம்பதி ரூ.170 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தாங்கள் பயின்ற பல்கலைக்கழகத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனுராதா மற்றும் விகாஸ் சின்ஹா தம்பதி 2 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ.170 கோடி) நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் மேம்பட்ட தரவுப் பகுப்பாய்வு துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நன்கொடையைத் தொடர்ந்து, டெக்சாஸ் பல்கலைக்கழகமான நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகம் (UNT), ‘அனுராதா மற்றும் விகாஸ் சின்ஹா செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தரவுப் பகுப்பாய்வுக் கல்லூரி’ என்ற புதிய கல்லூரியை உருவாக்க உள்ளது.
ஏஐ, அறிவார்ந்த அமைப்புகள், தரவுப் பகுப்பாய்வு, இணையப் பாதுகாப்பு, தரவு அறிவியல், சுகாதார தகவலியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான மையமாக இந்தக் கல்லூரி செயல்படும்.
இந்த 2 கோடி டாலர் நன்கொடையின் மூலம் கல்லூரியின் நிர்வாகம், மாணவர் உதவித் தொகைகள், பேராசிரியர் பதவிகள், தொழில்முனைவு மற்றும் புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள், மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில் 6 நிரந்தர நிதியங்கள் உருவாக்கப்பட உள்ளன.
புதிய கல்லூரி இரண்டு கல்விப் பிரிவுகளைக் கொண்டிருக்கும். அறிவார்ந்த அமைப்புகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் ‘அப்ளைடு இன்டலிஜென்ஸ் அண்ட் இன்ஃபர்மேட்டிக்ஸ்’ பிரிவும், மனிதர்கள் மற்றும் நிறுவனங்களின் சூழலில் தகவல் மற்றும் அறிவார்ந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராயும் ‘இன்ஃபர்மேஷன் அண்ட் லேர்னிங் அப்ளிகேஷன்ஸ்’ பிரிவும் செயல்படும்.
மேலும், ஏஐ மற்றும் தரவு அறிவியல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கல்வியை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளுடன் இணைக்கும் ‘அப்ளைடு ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் இன்ஸ்டிடியூட்’ இந்தக் கல்லூரியின் கீழ் செயல்படும். இதன் மூலம் பல்துறை ஆராய்ச்சி, பகிரப்பட்ட ஆராய்ச்சி உள்கட்டமைப்பு, வெளிப்புற நிதியுதவி மற்றும் தொழில் நிறுவனங்களுடனான கூட்டாண்மை ஆகியவை மேம்படுத்தப்படும்.
அனுராதா மற்றும் விகாஸ் சின்ஹா தம்பதி 2024-ம் ஆண்டில் UNT-ல் தரவு அறிவியல் துறையை உருவாக்குவதற்காக நன்கொடை வழங்கினர். மாணவர் உதவித்தொகை, பேராசிரியர்கள், ஆராய்ச்சி உள்ளிட்டவற்றுக்கும் அவர்கள் நிதியுதவி அளித்தனர். 2025-ம் ஆண்டில் தரவு அறிவியலுக்கான ‘சின்ஹா இன்னோவேஷன் லேப்’ அமைப்பதற்கும் அவர்கள் குறிப்பிடத்தக்க நன்கொடை வழங்கினர்.
“கல்வி எங்களது வாழ்நாள் முழுவதும் பல வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துள்ளது. அந்தக் கதவுகளை மற்றவர்களுக்காகவும் திறந்து வைத்திருக்க விரும்புகிறோம்” என்று விகாஸ் சின்ஹா தெரிவித்தார்.
“அமெரிக்கக் கனவில் புலம்பெயர்ந்தவர்கள் பங்கேற்பவர்கள் மட்டுமல்ல; அந்தக் கனவை உருவாக்குவதிலும் அவர்கள் பங்களிக்கிறார்கள் என்பதை அங்கீகரிப்பதே இந்த நன்கொடையின் நோக்கம்” என்றும் அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு நமது தலைமுறையை வரையறுக்கும் முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்றாக இருக்கும் என்றும், ஏஐ-யை பயன்படுத்துவது மட்டுமின்றி, அதை உருவாக்கவும், புரிந்துகொள்ளவும், கேள்வி எழுப்பவும், நிர்வகிக்கவும், பொறுப்புடன் பயன்படுத்தவும் மாணவர்களை பல்கலைக்கழகங்கள் தயார்படுத்த வேண்டும் என்றும் விகாஸ் சின்ஹா தெரிவித்தார்.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற விகாஸ் மற்றும் அனுராதா, கர்னூலில் உள்ள ஜி. புள்ளா ரெட்டி பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்தனர். பின்னர் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற அவர்கள், புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றனர்.
விகாஸ் சின்ஹா பின்னர் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கல்வி பயின்று, 2023-ம் ஆண்டு நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
தற்போது பிராட்காம் நிறுவனத்தின் மெயின்ஃபிரேம் மென்பொருள் பிரிவின் துணைத் தலைவராக விகாஸ் சின்ஹா பணியாற்றி வருகிறார். 2023-ம் ஆண்டு முதல் UNT-ன் காலேஜ் ஆஃப் இன்ஃபர்மேஷன் லீடர்ஷிப் போர்டு உறுப்பினராகவும் அவர் உள்ளார்.
செயற்கை நுண்ணறிவு, நாம் பணியாற்றும் விதம், ஆராய்ச்சி மேற்கொள்ளும் முறை மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதம் ஆகியவற்றை வேகமாக மாற்றி வருவதாக UNT தலைவர் ஹாரிசன் கெல்லர் தெரிவித்தார்.
இந்த நன்கொடையின் மூலம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்கவும், ஆராயவும், நடைமுறைப்படுத்தவும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகம் ஒரு பொதுத்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாகும். டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் பகுதியில் உள்ள மிகப்பெரிய பல்கலைக்கழகமான UNT-ல் டென்டன் மற்றும் ஃபிரிஸ்கோ வளாகங்கள் மூலம் சுமார் 44,000 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 230 பட்டப்படிப்புகள் வழங்கப்படும் இந்தப் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 13,000-க்கும் மேற்பட்ட பட்டங்களை வழங்கியது.
Edited by Induja Raghunathan

