தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க புதுமையான ஸ்டார்ட் அப்கள் தேவை...
இந்தியாவில் உள்ள 600 மில்லியன் பேர் தீவிர தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். நாட்டின் விவசாயிகள் இந்த பிரச்சனையை இன்னும் தீவிரமாக எதிர்கொள்ளும் நிலையில், ஸ்டார்ட் அப்கள் இதற்கு எப்படி உதவலாம் என்று ஐதராபாத்தின் Kheyti வழி காட்டுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்ட குறும்பதிவில், கரும்பு விவசாயம் உள்ளிட்டவற்றில், சொட்டு நீர் பாசனம் போன்றவை மூலம் சிக்கனமான தண்ணீர் பயன்பாட்டை வலியுறுத்தியிருந்தார். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், குறிப்பாக சென்னை தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த குறும்பதிவு வெளியாகியுள்ளது. நித்தி ஆயோக் அமைப்பு நடத்திய ஆய்வில், போதுமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லாத காரணத்தால், 600 மில்லியன் தண்ணீர் சார்ந்த நெருக்கடியை எதிர்கொள்வதாகவும்,. ஆண்டுக்கு 2 லட்சம் பேர் மரணமடைவதாகவும் தெரிவிக்கிறது.
2030 ஆண்டில் இந்தியாவின் தண்ணீர் தேவை இருப்பை விட இருமடங்காகும் என்றும், இதனால் கோடிக்கணக்கான மக்கள் தண்ணீர் பற்றாகுறையை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் நாட்டின் ஜிடிபில் 6 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இந்தியாவின் 40 சதவீத தண்ணீர் தேவையை தீர்க்கும் நிலத்தடி நீ வேகமாக குறைந்து வருகிறது. விநியோகிக்கப்படும் தண்ணீரில் 70 சதவீதம் சுகாதாரமற்றும் இருப்பதால் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த தண்ணீர் பற்றாக்குறையின் மோசமான பாதிப்பை நாட்டின் விவசாயிகள் எதிர்கொள்கின்றனர்.
அரசு மற்றும் பிற அமைப்புகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வழிகளை நாடும் நிலையில், நம்முடைய ஸ்டார்ட் அப்கள் தரும் தீர்வுகளையும் மனதில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உதாரணமாக, ஐதராராபாத்தைச்சேர்ந்த சத்யா ரகு வி.மொகபதி கவுசிக் கப்பகண்டலு, சவும்யா மற்றும் ஆயுஷ் சர்மா, ஆகியோரால் துவக்கப்பட்ட ’கேய்டி’ (Kheyti ) விவசாயப் புரட்சிக்கான விதையை விதைத்துக்கொண்டிருக்கிறது.
தண்ணீர் சேமிக்கும் பெட்டி தான் இப்போதைய தேவை என்கிறார் சத்யா. அவர்கள் உருவாக்கியுள்ள தீர்வான, கிரீன்ஹவுஸ் இன் ஏ பாக்ஸ் (GIB), இந்த இலக்கை அடைய உதவும் என்கிறார் அவர்.
நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளை தங்கள் தீர்வு சென்றடைய வேண்டும் என விரும்பும் இந்த தொழில்முனைவோர், விவசாயிகள் எப்படி குறைவான தண்ணீரை பயன்படுத்தி, தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ள முடியும் என விளக்குகிறார்.
நேர்காணலில் இருந்து:
ஷரத்தா சர்மா: கேய்டி எப்படி விவசாயிகள் குறைவான தண்ணீரில் அதிக உற்பத்தி காண உதவுகிறது?
சத்யா ரகு: கேய்டி சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்துகிறது. இதில் ஆவியாதல் மூலம் தண்ணீர் இழப்பை கட்டுப்படுத்த நான்கு அடுக்குகள் உள்ளன. எனவே, தினமும் 1,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துவதன் மூலம், விவசாயிகள் காய்கறிகள் பயிரிட முடியும். இது ஒரு சராசரி குடும்பத்திற்கு போதுமான தண்ணீர் அளவாகும்.
வழக்கமான முறையுடன் ஒப்பிடும் போது, அதே அளவிலான பயிருக்கு கிரீன்ஹவுஸ் முறையில் 98 சதவீத தண்ணீர் மிச்சமாகிறது.
எஸ்.எஸ்: கிரீன்ஹவுஸ் இன் ஏ பாக்ஸ் (GIB) விலை என்ன?
எஸ்.ஆர்: இதன் விலை, அளவுக்கு ஏற்ப ரூ.1.6 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை ஆகும். எங்களுடைய சிறிய கிரீன்ஹவுஸ் அமைப்பு 2,000 சதுர அடியில் அமைகிறது. பெரிய அமைப்பு 5,000 சதுர அடியில் அமைகிறது. கிரீன்ஹவுஸ், சொட்டு நீர் பாசன கருவி, முதல் பருவத்திற்கான விதைகள் மற்றும் உரம் இதில் அடங்கும்.
எஸ்.எஸ்: இந்திய விவசாயிகளுக்கு கேய்டி சிறந்த தீர்வாகும் என எப்படி கருதுகிறீர்கள்?
எஸ்.ஆர்: இது சிறந்த தீர்வு என நாங்கள் கருத மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன.
1) சிறிய விவசாயிகள், கிரீன்ஹவுஸ் முறையில் காய்கறிகள் பயிரிட்டு, சீரான வருமானம் ஈட்டுவதற்கான பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற விவசாய தீர்வுகளை நாங்கள் மட்டுமே அளிக்கிறோம்.
2) மற்றவர்களுடன் ஒப்பிடும் போது ஆய்வு மூலம் செலவை 40 சதவீதம் குறைத்துள்ளோம். சந்தை விலையை விடன் 40 சதவீதம் குறைந்த விலையில், இந்த உயிர் காக்கும், வாழ்க்கையை மாற்றும் தொழில்நுட்பத்தை சிறிய விவசாயிகளுக்கு அளிக்கிறோம்.
3) மேலும், கிரீன்ஹவுஸ் சேவையுடன், வல்லுனர் ஆலோசனை, நிதி உதவி, பயிற்சி ஆகியவற்றையும் நாங்கள் மட்டுமே அளிக்கிறோம். இது விவசாயிகளுக்கு சீரான அனுபவத்தை வழங்குகிறது. சரியான தொழில்நுட்பம் மற்றும் விவசாய சேவைகள் வறுமையில் இருந்து வெளியேற வழிகாட்டும்.
எஸ்.எஸ்: இந்தியாவில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து உங்கள் கருத்து?
எஸ்.ஆ: இது உண்மையானது, இதை நாம் எதிர்கொண்டாக வேண்டும். பருவநிலை நிலை மாற்றம் காரணமாக இது மேலும் மோசமாக உள்ளது. விவசாயிகள் அவர்களுக்கு தேவையான நீரில் 20 சதவீதம் தான் கிடைக்கிறது. இந்த இடைவெளியை இரண்டு பக்கத்தில் இருந்தும் எதிர்கொள்ள வேண்டும். பாசனத் திட்டங்கள், தடுப்பணைகள் மற்றும் மழைநீர் சேமிப்பு போன்றவை மூலம் நிலைமையை சமாளிக்க வேண்டும்.
அதே நேரத்தில் கிரீன்ஹவுஸ், சொட்டுநீர் பாசனம் போன்ற நுட்பங்கள் மூலம் விவசாத்திற்கான தண்ணீர் தேவையை குறைக்க வேண்டும். விவசாய குழுக்கள் மூலம் சிறிய விவசாயிகளை சென்றடைய விரும்புகிறோம்.
அரசின் மானியம் இல்லாமல் எங்கள் வர்த்தக மாதிரியை உருவாக்கியுள்ளோம். இத்தகை தீர்வுகளுக்கு அரசு ஆதரவு அளித்தால், இலவசங்கள் இல்லாமலே நீடித்த தாக்கத்தை எற்படுத்த முடியும்.
எஸ்.எஸ்: விவசாயிகள் எவ்வளவு தண்ணீரை சராசரியாக பயன்படுத்துகின்றனர்? எஸ்.ஆர்:விவசாயிகள், காய்கறிகள் பயிர் செய்ய நாள் ஒன்றுக்கு, 50,000 லிட்டர் மற்றும் நெல் பயிருக்கு ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் பயன்படுத்துகின்றனர். சர்வதேச அளவில் 70 சதவீத நண்ணீர் விவசாயத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
எஸ்.எஸ்: உங்கள் தயாரிப்பால் எத்தனை விவசாயிகள் பயனடைந்துள்ளனர்?
எஸ்.ஆர்: 2018 டிசம்பரில் 15 கிராமங்களில் 150 விவசாயிகளிடம் இதைக் கொண்டு சென்றுள்ளோம். இதையடுத்து தற்போது மேலும் 500 விவசாயிகளை இணைத்துள்ளோம். 2025 ல் 1,00,000 விவசாய குடும்பங்களை சென்றடைய விரும்புகிறோம்.
எஸ்.எஸ்: இதன் விலை சிறு விவசாயிகளுக்கு அதிகம் இல்லையா?
எஸ்.ஆர்: விவசாயிகள் 10 சதவீத தொகையை செலுத்தினால் போதுமானது. எஞ்சிய தொகை வங்கி கடன் மூலம் கிடைக்கும்.
எனவே விவசாயிகள் ரு.10,000 முதல் 30,000 வரை தான் முதலீடு செய்ய வேண்டும். வழக்கமான முறை செலவைவிட இது குறைவு. ஆனால் இது ஒரு முறை செலவு. 15 ஆண்டுக்கு மேல் பலன் அளிக்கும்.
சத்யா சொல்வது சரி தான்.
“என்னிடம் 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. 15 ஆண்டுகளாக காய்கறிகள் பயிரிடுகிறேன். கேய்டி கிரீன் ஹவுஸ் குறைந்த நீர் பயன்பாட்டில் நல்ல பணம் தருகிறது. இதன் காரணமாக, நான் மூன்று மாதங்களில் ரூ.70,000 ஈட்டியுள்ளேன். கோடைக் காலத்தில் இந்த அளவு வருமானம் பார்த்ததில்லை,” என்கிறார் சித்திபேட்டை விவசாயி ஜி.வெங்கடஸ்வாமி தச்சாராம்.
இந்தியாவில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து நம் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டாக வேண்டும். அனைத்து ஸ்டார்ட் அப்களையும் ஆலோசனை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பகுதியில் யாரேனும் சிறப்பாக செயல்பட்டால் எங்களுக்கு தெரிவிக்கவும். நீங்கள் தண்ணீர் பிரச்சனைக்கான தீர்வு அளிக்கும் ஸ்டார்ட் அப் என்றால் எங்களுக்கு தெரிவிக்கவும்.
ஆங்கில கட்டுரையாளர்: ஷரத்தா சர்மா | தமிழில்: சைபர்சிம்மன்