“இந்தியாவில் முதலீடு செய்ய முந்துவீர்!” - நிறுவனங்களுக்கு பியூஷ் கோயல் அழைப்பு
“நமது முதலீட்டாளர்கள் தாமதமாவதற்கு முன்பு இப்போது செயலில் இறங்கி, முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரம் இது” என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்தார்.
முதலீட்டாளர்கள், வென்ச்சர் முதலீடு நிதிகள், வர்த்தக நிறுவனங்கள் தாமதமாவதற்கு முன் செயலில் இறங்கி, இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய முதலீடுச் சூழல் தயாராக இருக்கிறது என்றும், உள்ளூர் சந்தை விரிவானது என்றும், ஆதரவான கொள்கைகள் அமல் செய்யப்படும் நிலையில், சந்தை வாய்ப்புகளுடன் முதலீட்டாளர்கள் தொடர்பு கொள்ள அரசு உதவும் என்றும் அவர் கூறினார்.
“நமது முதலீட்டாளர்கள் தாமதமாவதற்கு முன்பு இப்போது செயலில் இறங்கி, முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரம். இந்திய குடும்ப நிறுவனங்கள், இந்திய வென்ச்சர் முதலீடு நிதிகள், இந்திய முதலீட்டாளர்கள், இந்திய வர்த்தக நிறுவனங்கள் என எல்லோரும் செயலில் இறங்க வேண்டும்.”
“சூழல் தயாராக உள்ளது. நம்முடைய ஸ்டார்ட்-அப்கள் பாராட்டத்தக்க வகையில் செயல்படுகின்றன. இந்தியாவில் சோதிக்கப்பட்டு, செயல்படும் மாதிரிகள் இருக்கின்றன. சந்தை பெரிதாக உள்ளது. உங்களை சந்தையுடன் இணைத்து வைக்க அரசு உதவும். அதற்கான கொள்கை வரைவு உள்ளது.
இது தொடர்பான ஆலோசனைகளை வரவேற்கிறோம். உலகிற்கு இந்தியா அளிக்கும் எதிர்காலத்தில் முதலீடு செய்யவும்” என்று பிரான்சில் நடைபெற்ற பாரத் இன்னவேட்ஸ் 2026 நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
உற்பத்தி துறையில் அவர்களுடன் கைகோர்த்து ஸ்டார்ட்-அப்களை முன்னேற்ற வேண்டும் என உள்நாட்டு நிறுவனங்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
“இதன் மூலம் இந்தியா உங்கள் (இந்திய நிறுவனங்கள்) உங்கள் அறிமுக மேடையாக அமைந்து, உலக சந்தை உங்கள் இறுதி இலக்காக அமையும்” என்று கூறிய அமைச்சர், “ஆய்வாளர்கள், கல்வி நிறுவனங்கள் இணைந்து ஆய்வு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
“இது அறிவியல் கண்டுபிடிப்பிற்கான காலத்தை மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பணிகளை சந்தைப்படுத்த தேவையான நேரத்தை குறைக்க இந்தியா உதவ வழிவகுக்கும்” என்றார்.
மேலும் அவர் கூறியது: “இந்தியாவில் ஸ்டார்ட்-அப் சூழலை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க ஸ்டார்ட்-அப் செயல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நிதிகளின் நிதி திட்டத்தின் இரண்டாம் கட்ட ரூ.10,000 கோடி நிதி முழுவதும் ஆழ்நுட்ப புதுமையாக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மை ஆண்டுகளில் இந்தியா இறுதி செய்துள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை தொழில்துறை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது தொடர்பான ஆலோசனைகளை வரவேற்கிறேன். வெளிநாடுகளில் செயல்படும் இந்திய ஸ்டார்ட்-அப்கள் நாடு திரும்பி இங்கே தங்கள் தொழிலை அமைக்க வேண்டும்.
வெளிநாடுகளில் செயல்படுபவர்கள் பலர் தாயகம் திரும்ப விரும்புகின்றனர். எங்களுக்கு ஆலோசனைகளை கூறுங்கள். நீங்கள் தாயகம் திரும்புவதற்கான பாதையை எப்படி அமைக்க முடியும் என தெரிவியுங்கள்.
தொழில்நுட்பங்களை உருவாக்க நாம் மற்றவர்களுக்காக பணியாற்றுகிறோம். அவர்கள் இந்தியா திரும்ப என்ன செய்ய வேண்டும். எதன் மூலம் அவர்களை ஈர்க்கலாம் என்பதையும் தெரிவிப்பீர்” என்றார்.
இதனிடையே, யுபிஐ சேவையை நைஸ் மசேனாவில் உள்ள லபயாட்டே காலரியில் அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம் செய்தார்.
“இந்தியாவின் உலகத் தரமான பேமென்ட் மேடையை பிரான்ஸின் முதன்மையான ரீடைல் மையத்திற்கு கொண்டு வருவது, யுபிஐ உலக விரிவாக்கத்தில் இன்னொரு முக்கிய படியாக அமைகிறது.
லைரா கலெக்ட் மற்றும் என்.ஐ.பி.எல் பங்கேற்பு மூலம் இந்த முயற்சி நம்பகமான, சீரான, தீர்வுகளை பெரிய அளவில் வழங்கும் இந்தியாவின் ஆற்றலை உணர்த்துகிறது” என்று அவர் சமூக ஊடக பதிவில் கூறியுள்ளார்.
யுபிஐ உலகம் முழுவதும் நாடப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை வழியாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
“இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா பரிவர்த்தனைகளும் யுபிஐ கொண்டு நிகழ்கிறது” என்றார் அமைச்சர் பியூஷ் கோயல்.
- பிடிஐ
Edited by Induja Raghunathan

