இஸ்திரி கடை உரிமையாளர்களை கேஸ் பயன்பாடு மூலம் அதிக வருமானம் ஈட்ட வழிகாட்டும் ’இஸ்திரி திட்டம்’
பல காலமாக, இஸ்திரி சேவையாளர்கள் கரித்துண்டுகள் கொண்டு இயங்கும் இஸ்திரி பெட்டிகளை பயன்படுத்தி வருகின்றனர். ‘உதயம் வியாபார்’ என்ற அமைப்பின் ‘இஸ்திரி திட்டம்’, அவர்களை எல்பிஜி கேஸ் பெட்டிகளுக்கு மாற வழிகாட்டி, அதில் அதிக வருவாய் ஈட்டு வழிசெய்து கொடுக்கிறது.
நாடு முழுவதும் அயனிங் கடை வைத்திருப்பவர்கள் நாள்தோறும் காலையில் ஒரே விதமான செயலை மேற்கொள்கின்றனர்: கணமான இஸ்திரி பெட்டியில் எரியும் கரித்துண்டுகளை நிரப்பி, அதன் அடிபாகம் துணிகளை அழுத்தி தேய்க்கும் அளவுக்கு சூடாகும் வரையில் காத்திருக்கின்றனர்.
பின்னர், மதிய இடைவேளைக்கு பிறகும் இதே போல செய்கின்றனர். இந்த செயல்முறைக்காக தினமும் அவர்கள் இரண்டு மணி நேரம் செலவிடுகின்றனர்.
“தினமும் காலையில் எழுந்ததும் உங்கள் லேப்டாப்பை திறந்து அது வேலை செய்ய ஒரு மணி நேரம் காத்திருந்து, அதன் பிறகு மதிய இடைவேளைக்கு பின்னரும் இதே போல காத்திருக்க வேண்டும் என்றால் எப்படி இருக்கும் என இப்போது கற்பனை செய்து பாருங்கள். இந்தியாவில் இஸ்திரி தொழில் செய்பவர்களின் நிலை இப்படி தான் இருக்கிறது," என்கிறார் 'உதயம் லேர்னிங் பவுண்டேஷன்' இணை நிறுவனர் மற்றும் 'உதயம் வியாபார்' இயக்குனர் கிருஷ்ணன் ரங்கநாதன்.
இந்த பிரச்சனைக்கு தான் 'இஸ்திரி திட்டம்' (Istri Project) தீர்வு காண முயல்கிறது.

உதயம் லேர்னிங் ஃபவுண்டேஷனின் அங்கமான உதயம் வியாபார் சார்பில் துவக்கப்பட்டுள்ள இஸ்திரி திட்டம், கரி கொண்டு இயங்கும் இஸ்திரி பெட்டிகளுக்கு பதிலாக மானிய விலையிலான எல்பிஜி –யில் இயங்கும் இஸ்திரி பெட்டிகளுக்கு மாறுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
”இந்த எல்பிஜி சார்ந்த இஸ்திரி பெட்டிகள் மூலம், தில்லி, சென்னை, ஜெய்பூர், பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த இஸ்திரி சேவையாளர்கள் தங்கள் எரிசக்தி செலவை பாதியாக குறைத்து, செயல்திறனை இரு மடங்காக்கி, முன்பை விட அதிக வருமானம் ஈட்டுகின்றனர்,” என்று ரங்கநாதன் கூறுகிறார்.
இந்த மாற்றம் காரணமாக பணி சூழலும் மாறி, அவர்கள் ஆரோக்கியம் மேம்படுகிறது, சுற்றுச்சூழல் மாசு குறைகிறது, என்கிறார்.
உதயம் லேர்னிங் ஃபவுண்டேஷன் தனது வியாபார் திட்டத்தை , மாதம் 30 ஆயிரத்துக்கும் குறைவாக சம்பாதிக்கும் குறும் தொழில்முனைவோர்கள் மேம்பாட்டிற்காக 2018ல் அறிமுகம் செய்தது. கிராமப்புறங்களில் பலரும் மாதம் ரூ.3000 என குறைவாக கூட சம்பாதிக்கின்றனர்.
தெரு வியாபாரிகள், டீக்கடை நடத்துபவர்கள், மொபைல் பழுது பார்ப்பவர்கள் மற்றும் இஸ்திரி சேவை வழங்குபவர்கள் இந்த பிரிவில் வருகின்றனர்.
தாக்கம்
2018ல் வியாபார் இஸ்திரி தொழிலாளர்களிடம் கவனம் செலுத்தலாம் என தீர்மானித்த போது, எல்பிஜி கொண்டு இயங்கும் இஸ்திரி பெட்டிகள் 2009 முதல் சந்தையில் கிடைத்தாலும் யாரும் அதை பயன்படுத்துவதில்லை என்பதை கவனித்தது.
இதையடுத்து, பெங்களூருவில் நான்கு இஸ்திரி உரிமையாளர்கள் மத்தியில் இந்த திட்டம் சோதனை முறையில் அமல் செய்யப்பட்டது.
“நான்கு பேரும் அந்த இஸ்திரி பெட்டிகளை பயன்படுத்திப் பார்த்து நல்ல கருத்து தெரிவித்தனர். பின்னர், 20 பேருக்கு விரிவாக்கம் செய்தோம். ஒரு மாதம் கழித்து அவர்கள் யாருமே கரித்துண்டுகளுக்கு மாற மாட்டோம் என கூறினர். இதன் பிறகே சந்தைக்கு ஏற்ற சேவை இது என உணர்ந்தோம்,” என்கிறார் ரங்கநாதன்.

ரங்கநாதன் மற்றும் சிரில் ஜோசப்
மேலும், எல்பிஜி பெட்டிகளுக்கு மாறியதால், அவர்கள் வருமானம் அதிகரிப்பதையும் உணர்ந்தார். இதனிடையே, கோவிட் பெருந்தொற்று தாக்குதலால் திட்டம் தடைப்பட்டது. 2021ல் மீண்டும் வேகம் பெற்றது.
கடந்த ஆறு ஆண்டுகளில் உதயம் வியாபார், இந்த திட்டத்தை ஐந்து நகரங்களுக்கு விரிவாக்கி, 8,300 இஸ்திரி சேவையாளர்கள் எல்பிஜி பெட்டிகளுக்கு மாற வைத்துள்ளது. இஸ்திரி சேவையாளர்கள் 25 சதவீதம் வருமானம் உயர்வதாக தெரிய வந்துள்ளது. மேலும், கரியமில வாயு வெளிப்பாடும் குறைந்துள்ளது, என்கிறார்.
இஸ்திரி சேவையாளர்களை சம்மதிக்க வைப்பது சவாலானது என்றால், அவர்கள் கைகளில் எல்பிஜி பெட்டிகளை கொண்டு சேர்ப்பது இன்னும் சவாலாக இருந்தது.
“முதலில் உற்பத்தி நிறுவனங்களை சம்மதிக்க வைத்து, அதிகம் உற்பத்தி செய்ய வைத்து, கடைகளில் இருப்பு வைக்க செய்ய வேண்டியிருந்தது,” என்கிறார்.
பல இஸ்திரி சேவையாளர்கள் இந்த பெட்டி இருப்பதை அறிந்திருக்கவில்லை. இதை அறிந்த பிறகு, புதிய தொழில்நுட்பம் மற்றும் கேஸ் சிலிண்டர் பயன்பாடு கண்டு அஞ்சினர். அவர்களிடம் காட்சி விளக்கம் அளித்து, பேசிய புரிய வைத்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியிருந்தது.
இந்த பெட்டிகளின் விலை ரூ.6,000 முதல் 8,000 என்பது, சிறிய அளவில் வருமானம் ஈட்டும் இப்பிரிவினருக்கு பெரும் தொகையாக அமைந்தது. இதற்காக உதயம், மானியம், கடன் வசதி போன்றவற்றை அறிமுகம் செய்தது. பின்னர், அதிகரிக்கும் வருமானம் இதற்கு ஈடு செய்தது என்றாலும், ஆரம்ப நிதி உதவி முக்கியமாக அமைந்தது.
கண்ணுக்குத்தெரியாத தடை
இடைப்பட்ட காலத்தில் இன்னொரு தடையையும் உணர்ந்தனர். விற்பனைக்கு பிந்தைய சேவையாக அது அமைந்தது. எல்பிஜி பெட்டிகளை பயன்படுத்தும் போது சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டால், அது தொடர்பாக சேவை பெற அதிக வழியில்லாததால் பலரும் வேறு வழியில்லாமல் கரிப்பெட்டிக்கே திரும்பும் நிலை உண்டானது.
சேவை இல்லை என்றால், இந்த திட்டம் தோல்வி அடையும் என உணர்ந்து, உதயம் விரிவான விற்பனைக்கு பிந்தைய சேவை வசதியை அறிமுகம் செய்தது. இதற்காக சில நகரங்களில் ரீடைல் மையங்கள் சேவை மையங்களாக மாறின, ஒரு சில நகரங்களில் இஸ்திரி சேவையாளர்களே, பழுது பார்க்கும் சேவையும் வழங்கி கூடுதல் வருமானம் ஈட்டினர்.
“சென்னையில் கரிப்பெட்டியில் இருந்து எல்பிஜி பெட்டிகளுக்கு மாற ஏற்பாடு செய்த பிறகு, மூன்று மாதத்தில் ஒரு சர்வே மேற்கொண்டோம். 97 சதவீத பயனாளிகள் எல்பிஜி பெட்டிகளை தொடர்ந்து பயன்படுத்தினர் என்பது ஊக்கம் அளித்தது. இந்த விகிதம் முக்கியமானது. 3 சதவீதம் பேர் மட்டுமே கரிப்பெட்டிக்கு திரும்பினர் அல்லது அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது,” என்கிறார் ரங்கநாதன்.

“நான் கரியை தான் பயன்படுத்தி வந்தேன். எல்பிஜி பெட்டி பற்றி தெரிந்ததும் முயன்று பார்த்து மாறிவிட்டேன். மேலும் கரித்துண்டுகள் விலையும் அதிகரித்துள்ளது. அதற்கு நேரமும் அதிகமாகிறது. இப்போது ஒரு நாளின் 150 துணிகள் வரை இஸ்திரி செய்ய முடிகிறது,” என்று சென்னையை சேர்ந்த விஜயகுமார் கூறுகிறார்.
பிராந்திய சவால்கள்
இந்த திட்டம் தென்னிந்தியாவில் இருந்து வட இந்தியாவுக்கு விரிவான போது புதிய சவால்கள் உண்டாயின. டில்லி மற்றும் ஜெய்பூரில் மிகவும் எடை கொண்ட இஸ்திரி பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், அவரள் பித்தளையை விட காஸ்ட் உலோகத்தை விரும்பினர்.
வட இந்திய சந்தைக்கு ஏற்ப உற்பத்தி நிறுவனத்திடம் மாற்றம் செய்ய கேட்டுக்கொண்டாலும் அடுத்ததாக பருவ காலம் எனும் சவால் உண்டானது.
“குளிர்காலத்தில் தில்லியில் ஒரு சிலர் கரிப்பெட்டிக்கு மாறினர். இந்த பெட்டியின் உஷ்ணம் அவர்களுக்கு ஏற்றதாக இருந்தது. மேலும், குளிர் காலத்தில் இஸ்திரி தேவையும் குறைந்தது. குளிர் காலம் முடிந்த பின் அவர்கள் மீண்டும் எல்பிஜிக்கு மாறும் நிலை இருந்தது,” என்கிறார் திட்ட தலைவரான சிரில் ஜோசப்.
“இந்த போக்கு தொடர்கிறதா அல்லது ஆண்டு முழுவதும் எல்பிஜி பெட்டிகள் ஆதரவு வழங்கும் தேவை இருக்கிறதா என தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம் என்கிறார்.
தில்லியைச் சேர்ந்த மாயா தேவி, 1992 முதல் இஸ்திரி செய்கிறார். இப்போது அவர் மருமகளும் இணைந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அவர் தங்கள் பகுதியில் முதல் நபராக எல்பிஜி பெட்டிக்கு மாறியுள்ளனர்.
“ஆரம்பத்தில் தயங்கினேன். ஆனால் இப்போது மீண்டும் பழைய முறைக்கு செல்ல விரும்பவில்லை. எல்பிஜி 3 மடங்கு மலிவாக உள்ளது. நேரம் மிச்சமாகிறது. புகை இல்லை. கரியை பயன்படுத்தும் போது, நெருப்பு மிக முக்கியம். நேரத்தில் சாப்பிட கூட முடியாது. ஆனால் இப்போது அந்த பிரச்சனை இல்லை,” என்கிறார்.
இதற்கு முன் அவர் மாதம் கரிக்கு ரூ.6000 செலவு செய்தார். இப்போது கேஸ் செலவு ரூ.1000 ஆகிறது. மிச்சமாகும் 5,000 ரூபாயை முதலீடு செய்ய அல்லது வங்கியில் போட்டு வைக்க இருப்பதாகவும் கூறுகிறார். இஸ்திரி வருமானம் மூலம் அவர் தன் பிள்ளைகளை படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
வலைப்பின்னல் கூட்டு
பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து உதயம் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. சென்னை மற்றும் பெங்களூருவில் விழிப்புணர்வை ஏற்படுத்த இஸ்திரி சேவையாளர்கள் சங்கங்களை நாடுகிறது.
தில்லியில் அயேஷா பவுண்டேஷன் எனும் அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது. ஐதராபாத்தில் ரோட்டரி அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது. பெங்களூருவில் சிட்பியுடன் இணைந்து 200 பேருக்கு எல்பிஜி பெட்டிகள் வழங்கியுள்ளது.
உதயம், ஐஓசிஎல், பிபிசிஎல், எசிபிசிஎல் போன்ற நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுகிறது.
“இந்நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்கட்டமைப்பு கொண்டுள்ளன. ஏற்கனவே சிலிண்டர்கள் வழங்குகின்றன. இந்த சேவை அவர்கள் வர்த்தகத்துடன் தொடர்பு கொண்டது. மதுரையில் ஒரு முன்னோட்ட திட்டம் செயல்படுத்தி வருகிறோம். இது சரியாக செயல்பட்டால் மேலும் விரிவாக்குவோம்,” என்கிறார் ஜோசப்.
ஒரு சில கிராமங்கள் பஞ்சாயத்துகள் இஸ்திரி சேவையாளர்களுக்கு உதவுகின்றன.
ஐந்து நகரங்களில் உள்ள இஸ்திரி சேவையாளர்கள் 2025 செப்டம்பர் வரை மொத்தமாக ரூ.100 கோடி கூடுதல் வருமானம் ஈட்ட இத்திட்டம் உதவியுள்ளதாக ரங்கநாதன் கூறுகிறார்.
இந்த முன்னேற்றத்தை மீறி, நிதி திரட்ட மிகவும் கடினமான திட்டமாக அமைந்துள்ளது.
“எங்களிடம் தாக்கம் தொடர்பான தரவுகள் உள்ளது. சராசரியாக 27 சதவீத வருமானம் உயர்வுக்கான் மூன்றாம் தரப்பு உறுதியும் உள்ளது. கிராமப்புறங்களில் மாதம் ரூ.3000 ஈட்டுபவர்கள் மற்றும் நகரங்களில் ரூ.10,000 முதல் 15,000 ஈட்டும் மிகவும் தேவை கொண்டவர்களை இலக்காக கொண்டுள்ளோம். செலவு குறைந்துள்ளது நன்றாக தெரிகிறது. எனினும், சீரான நிதி திரட்டல் கடினமாக உள்ளது,” என்கிறார் அவர்.
ஆறு ஆண்டுகளாக உதயம், இந்த திட்டத்தை ஒவ்வொரு நகரங்களாக விரிவாக்கியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் நிதி திரட்டி, அங்கு குழுக்களை நியமித்து அல்லது பங்குதாருடன் இணைந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த திட்டத்திற்கு அதிக நிதி தேவைப்படுவதாலும், பூகோள நோக்கில் கட்டுப்பாடுகள் இருப்பதை மீறி, இன்னும் இஸ்திரி சேவையாளர்களை சென்றடையும் தேவை இருக்கிறது.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

