ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓவுக்கு ஒப்புதல்; வெள்ளிக்கிழமை செபியிடம் வரைவு ஆவணங்கள் தாக்கல்!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 49வது ஆண்டு பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, 27 கோடி ஈக்விட்டி பங்குகள் வரை புதியதாக வெளியிடப்படும் இந்த ஐபிஓ தொடர்பான வரைவு DRHP வெள்ளிக்கிழமை செபியிடம் தாக்கல் செய்யப்படும் என்றார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (ஐபிஓ) வரைவு ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
27 கோடி ஈக்விட்டி பங்குகள் வரை புதியதாக வெளியிடப்படும் இந்த ஐபிஓ தொடர்பான வரைவு ரெட் ஹெர்ரிங் புராஸ்பெக்ட் (DRHP) வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் (SEBI) தாக்கல் செய்யப்படும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 49வது ஆண்டு பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி,
"ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இயக்குநர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட வரைவு சிவப்பு விளக்க அறிக்கை வெள்ளிக்கிழமை செபியிடம் தாக்கல் செய்யப்படும்," என்று தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட ஐபிஓவில் முகப்பு மதிப்பு ரூ.10 கொண்ட 27 கோடி பங்குகள் வரை புதியதாக வெளியிடப்படும். பங்குகளின் இறுதி விலை செபி விதிமுறைகளின்படி, “புக் பில்டிங்”(Book Building) முறையின் மூலம் நிர்ணயிக்கப்படும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், குழுமத்தின் தொலைத்தொடர்பு, டிஜிட்டல் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப வணிகங்களை உள்ளடக்கியதாகும். இந்த வெளியீட்டின் விலை வரம்பு அல்லது மொத்த மதிப்பு குறித்து நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை. இறுதி பங்கு விலை மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகளைப் பொறுத்து அதன் அளவு தீர்மானிக்கப்படும்.
"ஜியோ ஐபிஓ இந்த ஆண்டின் மிக முக்கியமான மதிப்பு உருவாக்க நிகழ்வாக இருக்கும். இது ரிலையன்ஸ் பங்குதாரர்களுக்கான மதிப்பை வெளிக்கொண்டு வருவதுடன், புதிய முதலீட்டாளர்களுக்கு ஜியோவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கும்," என்று அம்பானி கூறினார்.
மேலும், "ஜியோவின் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் மதிப்பு உருவாக்கத்தை எனது வாரிசுகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி மற்றும் அனந்த் அம்பானி ஆகியோர் முன்னின்று வழிநடத்துவார்கள்," என்றும் தெரிவித்தார்.
"ஜியோவின் முன்மொழியப்பட்ட பங்குச் சந்தை பட்டியலிடுதல், உலகளாவிய அளவு, திறன் மற்றும் மதிப்பைக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியாவால் உருவாக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபிக்கும்," என்றும் அவர் கூறினார்.

"இந்த ஆண்டின் மிக முக்கியமான மதிப்பு உருவாக்கும் மைல்கல்லாக இருக்கும் இந்த பட்டியலிடுதல், ரிலையன்ஸ் பங்குதாரர்களுக்கு மிகுந்த மதிப்பை திறந்து விடுவதோடு, மற்ற முதலீட்டாளர்களுக்கும் கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பை வழங்கும்," என்றும் அம்பானி தெரிவித்தார்.
ஐபிஓ அறிவிப்புடன் ஜியோவின் அடுத்த கட்ட விரிவாக்கத்திற்கான ஐந்து முக்கிய மூலோபாய முன்னுரிமைகளும் அறிவிக்கப்பட்டன. 2030ஆம் ஆண்டுக்குள் தனது முழு வாடிக்கையாளர் தளத்தையும் ஜியோ ட்ரூ 5ஜி சேவைக்கு மாற்றுவதை இலக்காகக் கொண்டு, 6ஜி தரநிலைகள் உருவாக்கத்தில் இந்தியாவின் பங்களிப்பை மேம்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளது.
ஜியோ ஏர்ஃபைபர் மூலம் அதிவேக பிராட்பேண்ட் சேவையையும் விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவல்கள் 24 மணி நேரத்திற்குள் நிறைவு செய்யப்படுகின்றன. தினமும் 60,000 வரை புதிய வீட்டு பிராட்பேண்ட் இணைப்புகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
செட்-டாப் பாக்ஸ் வழியாக வழங்கப்படும் கிளவுட் கணினி சேவையான ஜியோபிசி போன்ற தயாரிப்புகள் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை டிஜிட்டல்மயமாக்கும் முயற்சிகளையும் நிறுவனம் தொடரும். நுகர்வோர் சேவைகள், நெட்வொர்க் செயல்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் 5ஜி, நிலையான வயர்லெஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் மற்றும் கட்டமைப்புகளை பயன்படுத்தி தனது சொந்த தொழில்நுட்ப தளங்களை சர்வதேச சந்தைகளிலும் வணிகமயமாக்க ஜியோ திட்டமிட்டுள்ளது.
"உயர்தர 5ஜி சேவைகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகள் மற்றும் நிறுவன தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயனாளர் ஒன்றுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது," என்றார் அம்பானி.
மேலும், "உங்களுக்கும், ஜியோவில் புதிதாக முதலீடு செய்ய உள்ள அனைவருக்கும் ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை நான் உறுதியளிக்கிறேன்," என்றும் அவர் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜியோ, குறைந்த கட்டணங்கள் மற்றும் இலவச குரல் மற்றும் டேட்டா சேவைகள் மூலம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் இணையப் பயன்பாடு வேகமாக வளர்ந்ததோடு, தொலைத்தொடர்பு துறையில் பல நிறுவனங்களின் ஒருங்கிணைப்புக்கும் வழிவகுத்தது.
கடந்த ஒரு தசாப்தத்தில் ஜியோ, இணைப்பு சேவைகள், கிளவுட் சேவைகள், நிறுவன தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகளில் செயல்படும் விரிவான டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் தனது திட்டங்களின் மையமாக ஜியோவை ரிலையன்ஸ் நிறுவனம் நிலைநிறுத்தி வருகிறது. 2023ஆம் ஆண்டு, என்விடியா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவுக்கான செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பு மற்றும் மொழி மாதிரிகளை உருவாக்கும் முயற்சியை ரிலையன்ஸ் தொடங்கியது. 2026ஆம் ஆண்டு முதல் அடுத்த ஏழு ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முயற்சிகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்ய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் திட்டமிட்டுள்ளதாக அம்பானி முன்னதாக தெரிவித்திருந்தார்.
செயற்கை நுண்ணறிவு சேவைகளை மிகப்பெரிய தரவு மையங்கள் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங் வசதிகள் மூலம் விரிவுபடுத்தும் நோக்கில் ஜியோ இன்டெலிஜென்ஸ் என்ற முழுமையாக ஜியோவுக்கு சொந்தமான துணை நிறுவனத்தையும் நிறுவனம் தொடங்கியுள்ளது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற நிதி திரட்டலில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் 20 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்தது. இதில் மெட்டா, கூகுள், கேகேஆர், சில்வர் லேக் மற்றும் ஜெனரல் அட்லாண்டிக் உள்ளிட்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. அப்போது ஜியோவின் மதிப்பு 57 பில்லியன் முதல் 65 பில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிப்பிடப்பட்டது.
தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸில் 66.43 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு 5.7 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டின் மூலம் பெற்ற மெட்டா நிறுவனம் 9.99 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் முதன்மை பங்குச் சந்தை வெளியீடுகள் சாதனை அளவில் வளர்ச்சி கண்டிருந்தாலும், சமீபத்தில் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக முதலீட்டாளர்களின் மனநிலை சற்று பலவீனமடைந்துள்ளது. இதன் காரணமாக போன்பே, கியூர்ஃபுட்ஸ் மற்றும் சிஃபி இன்ஃபினிட் ஸ்பேஸ் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் தங்களின் பங்குச் சந்தை பட்டியலிடும் திட்டங்களை தாமதப்படுத்தியுள்ளன அல்லது மறுபரிசீலனை செய்து வருகின்றன.

