'எலி பிடிக்க ரூ.1.38 கோடி சம்பளம்' - வேலைக்கு விண்ணப்பிக்க நியூயார்க் நகரம் அறிவிப்பு!
எலி பிடிக்கும் வேலைக்கு ரூ.1.38 லட்சம் சம்பளமாக வழங்கப்படும் என்ற விநோதமான அறிவிப்பு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
வீட்டில் எலிகள் சுற்றித் திரிந்தால் என்ன செய்வோம்?
கூண்டுகள் அல்லது எலி மருந்து வைத்து அவற்றை ஒழிக்கப் பார்ப்போம். சமீப காலமாக பசை போன்ற எலி பேட்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. கடையில் இருந்து வாங்கினோமா, எலி இருக்குற இடத்துக்கு பக்கத்துல வச்சோமா... அவ்வளவு தான் எலியோட ஜோலி முடித்தது.
ஆனால், பீட்டா போன்ற அமைப்புகள் அவற்றை பயன்படுத்தக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
GluTraps மூலம் எலிகளைப் பிடிப்பது மிகவும் கொடூரமான முறையாகும் என்றும், எலிகள் அவற்றுடன் ஒட்டிக்கொண்டு கடுமையான வலி மற்றும் துன்பத்தை அனுபவிப்பதாகவும் கூறுகின்றனர். இந்த செய்தி வெளியான அதே சமயத்தில் ‘எலி பிடிக்க ஒரு கோடி சம்பளம்’ என்ற செய்தியும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அப்படி எலியை பிடிப்பதற்காக கோடிகளில் சம்பளத்தை அறிவித்துள்ள நிறுவனம் எது, எதற்காக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என பார்க்கலாம்...
எலி பிடிக்க கோடி ரூபாய் சம்பளம்:
“நீங்கள் எலிகளை வெறுக்கிறீர்களா?’ ‘நீங்கள் எலிகளை கொல்ல வேண்டும் என்ற வெறி பிடித்தவரா?’ அப்படியானால் நீங்கள் தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஆள்... உடனே இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள்...”
இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிரபல நிறுவனமோ, பெரும் பணக்கார குடும்பத்தினரோ அல்ல. நியூயார்க் நகர் நிர்வாகம் தான் இந்த விநோதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சிகாகோவிற்கு அடுத்தபடியாக எலித்தொல்லை அதிகமுள்ள இரண்டாவது நகரமாக நியூயார்க் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் எலித்தொல்லை தொடர்பாக 21 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் குவிந்துள்ளன. சாலையோரங்கள், பூங்காக்கள் ஆகிய இடங்களில் சர்வ சாதாரணமாக வலம் வரும் எலிகளால் அப்பகுதி மக்கள் கடும் நொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் பொறுமையிழந்த நியூயார்க் நிர்வாகம், எலி ஒழிப்பை தலைமையேற்று நடத்த புதிய பதவியையே உருவாக்கியுள்ளது. ‘எலிகளை ஒழிப்பதற்கான இயக்குநர்’ (Director of rodent mitigation) என்ற வித்தியாசமான பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.
தகுதி மற்றும் சம்பளம் என்ன?
ரத்த தாகமும், நகைச்சுவை உணர்வும் கொண்டவர்கள் எலி பிடிக்கும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எலியை பிடிப்பதற்காக புதிய யுக்திகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்றும், 5 முதல் 8 ஆண்டுகள் வரை எலி பிடிப்பதில் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேம்படுத்துதல், தரவு சேகரிப்பு, தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் பெரிய அளவில் எலிகளைக் கொல்வது உள்ளிட்ட எலிகளைக் கையாள்வதற்கான ஒவ்வொரு வழிக்கும் ஒரு தீர்வு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் செய்ய வேண்டிய வேலை என்பதால் பணிக்கு விண்ணப்பிப்போர் அதிக ஸ்டாமினா கொண்டவராக இருக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் நியூயார்க் மக்கள் எலிகள் சுற்றித்திரியும் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்வதால் வேறு வழியில்லாமல் நகர நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'பல்ப் மாற்ற 28 லட்சம் ரூபாய் சம்பளம்; 2 நாள்தான் வேலை’- நெட்டிசன்கள் மத்தியில் வைரலான வீடியோ!