Jodi365 vs Jodii: முத்திரை வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லும் Matrimony.com
‘Jodii’ என்ற பெயரை Matrimony.com பயன்படுத்துவதால் வாடிக்கையாளர்கள் குழப்பமடைவதாக கூறி Jodi365 நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், Jodii என்ற முத்திரையைப் பயன்படுத்த Matrimony.com-க்கு நிரந்தரத் தடை விதித்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது மேட்ரிமோனி.காம்
திருமண பொருத்த தளமான Jodi365, 12 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், பிரபல மேட்ரிமோனி.காம் நிறுவனம், Jodii என்ற கிட்டத்தட்ட அதே பெயரில் ஒரு தளத்தை அறிமுகப்படுத்தியதால், தங்களின் வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும் மற்றும் பெயர் குழப்பம் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டி, Matrimony உடனே அந்த பெயர் முத்திரையை ரத்து செய்யக்கூறி லீகல் நோட்டிஸ் ஒன்றை அனுப்பியிருந்தது Jodi365. இது குறித்து, யுவர்ஸ்டோரிக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றிலும் தெரிவித்திருந்தார் அதன் நிறுவனர் அனீல் குமார். அப்போது வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தது.
அதன் பின்னர், கடந்த வாரம் Matrimony.com பயன்படுத்திய ‘Jodii’ வர்த்தக முத்திரை, Jodi365 நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட ‘Jodi365’ முத்திரையுடன் குழப்பம் ஏற்படுத்தும் அளவுக்கு ஒத்ததாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கூறி, Jodii என்ற பெயர் முத்திரையைப் பயன்படுத்த Matrimony.com-க்கு நிரந்தரத் தடை விதித்தது.
திருமணத் தகவல் பரிமாற்ற தளமான Matrimony.com, ‘Jodii’ என்ற வர்த்தக முத்திரையைப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
அதேவேளையில், ‘Jodi’ என்பது திருமணத் தகவல் பரிமாற்றத் துறையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல் என்றும், அதற்கு ஒரு நிறுவனத்தால் மட்டுமே உரிமை கோர முடியாது என்றும் Matrimony.com வாதிட்டுள்ளது.

சர்ச்சை தொடங்கியது எப்படி?
2021 அக்டோபரில் இந்த விவகாரம் தொடங்கியது. அப்போது Matrimony.com ‘Jodii’ என்ற திருமணத் தகவல் பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியதைத் தான் அறிந்ததாக அனீல் குமார் கூறினார்.
“கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக Jodi365-ஐ நடத்தி வந்தேன். அந்தப் பெயரைச் சுற்றி கணிசமான நம்பிக்கையையும் வணிக மதிப்பையும் உருவாக்கியிருந்தோம்,” என்று அவர் தெரிவித்திருந்தார்.
செயலி அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது காலத்திலேயே Jodi365 நிறுவனம் Matrimony.com-க்கு பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியதாக அனில் குமார் கூறினார்.
இதற்கு பதிலளித்த Matrimony.com, ‘Jodi’ என்பது திருமணத் தகவல் பரிமாற்ற சேவைகளுடன் பொதுவாக தொடர்புபடுத்தப்படும் ஒரு விளக்கச் சொல் என்றும், அதற்கு ஒரு நிறுவனம் மட்டும் பிரத்யேக உரிமை கோர முடியாது என்றும் வாதிட்டது.
இதையடுத்து, Jodii வர்த்தக முத்திரையைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பொருட்களை ஒப்படைக்க வேண்டும், மேலும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் Jodi365 வழக்குத் தொடர்ந்தது.
இரு நிறுவனங்களின் பெயர்களிலும் காணப்படும் ஒற்றுமையால் பயனர்கள் குழப்பமடைந்ததாக Jodi365 தரப்பில் வாதிடப்பட்டது. நம்மிடம் முன்பு பேசியபோது, Jodi365 நிறுவனத்துக்கும் Matrimony.com-ன் Jodii தளத்துக்கும் இடையே பயனர்கள் குழப்பமடைந்த பல சம்பவங்களைத் தங்கள் நிறுவனம் பதிவு செய்திருப்பதாக அனீல் குமார் தெரிவித்திருந்தார்.
“சிலர் தவறுதலாக எங்கள் நிறுவனத்துக்குப் பதிலாக Matrimony.com-ஐ தொடர்புகொண்டனர். சில வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களுக்கு தவறான நிறுவனத்திடம் தீர்வு கேட்டனர். மேலும், Jodi365-ல் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளையும் Jodii தளத்திலிருந்து வந்த அழைப்புகளையும் பயனர்கள் குழப்பிக்கொண்ட சம்பவங்களும் இருந்தன. சந்தையில் உண்மையான குழப்பம் ஏற்பட்டிருப்பதையும், அது எங்கள் நிறுவனத்தின் வணிகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் இந்தச் சம்பவங்கள் தெளிவாகக் காட்டுகின்றன என்று நாங்கள் கருதினோம்,” என்று அனீல் குமார் கூறினார்.
Matrimony.com-ன் தாய் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Jodii’ செயலி, ஆங்கிலம் பேசாத பயனர்களை இலக்காகக் கொண்டது. குறைந்தது 10 இந்திய மொழிகளில் செயல்படும் இந்தச் செயலி, BharatMatrimony உள்ளிட்ட நிறுவனத்தின் முக்கிய தளங்களுடன் இணைந்தது.

Jodi365 நிறுவனர் அனீல் குமார்
2022-ல் தனி நீதிபதி வழங்கிய உத்தரவை ஆகஸ்ட் 11-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாற்றியமைத்தது. சென்னைையைச் சேர்ந்த FreeElective Network நிறுவனம் நடத்தும் Jodi365-க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
Matrimony.com பயன்படுத்திய ‘Jodii’ வர்த்தக முத்திரை, Jodi365 நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட ‘Jodi365’ முத்திரையுடன் குழப்பம் ஏற்படுத்தும் அளவுக்கு ஒத்தாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கூறியது. இதையடுத்து ‘Jodii’ முத்திரையைப் பயன்படுத்த Matrimony.com-க்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. எனினும், Jodi365 கோரிய ரூ.1 கோடி இழப்பீட்டை நீதிமன்றம் வழங்கவில்லை.
இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தை அணுக இருப்பதாக மேட்ரிமோனி தெரிவித்திருந்தது.
“உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை (SLP) தாக்கல் செய்துள்ளோம். அதன் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்போம்,” என்று Matrimony.com நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி முருகவேல் ஜானகிராமன், மனி கண்ட்ரோலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்கைத் தொடர்ந்து நடத்தத் தங்கள் நிறுவனம் தயாராக இருப்பதாக Jodi365 நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அனீல் குமார் தெரிவித்துள்ளார்.
அடுத்து என்ன நடக்கும்?
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் வரை, உயர் நீதிமன்றத் தடை உத்தரவில் இருந்து பாதுகாப்பைப் பெறுவதே Matrimony.com-ன் முதல் நோக்கமாக இருக்கும், என நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்பதாலேயே உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்கும் என்று அர்த்தமில்லை, என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.
முதலில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும். Matrimony.com-க்கு உடனடியாக முக்கியமான விஷயம், உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்குமா என்பதுதான், என்று அவர் கூறினார்.
Matrimony நிறுவனர் முருகவேல் ஜானகிராமன்
‘Jodi’ என்ற சொல்லுக்கு வர்த்தகப் பாதுகாப்பு கிடைக்குமா?
Matrimony.com-ன் ‘Jodii’ செயலி பெயரும் ஃப்ரீ எலெக்டிவ் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட ‘Jodi365’ வர்த்தக முத்திரையும் குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஒத்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு கருதியுள்ளது. இதன் மூலம், ‘Jodi’ என்பது வெறும் விளக்கப் பொருளைக் கொண்ட சொல் மட்டுமே என்று 2022-ல் தனி நீதிபதி வழங்கியிருந்த தீர்ப்பு மாற்றப்பட்டுள்ளது.
சில பொதுவான சொல்லை ஒரு நிறுவனத்துக்கு மட்டும் சொந்தமாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில் கூறியது. அதனால், ‘Jodi’ என்ற சொல்லை உச்ச நீதிமன்றம் எவ்வாறு அணுகப் போகிறது என்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தால், Matrimony.com தனது ‘Jodii’ பிராண்டை கைவிட வேண்டிய நிலை ஏற்படலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி நடந்தால்,
“மேட்ரிமோனி நிறுவனம் அந்த வர்த்தக முத்திரையின் பயன்பாட்டை நிறுத்துவதுடன், அதனுடன் தொடர்புடைய வர்த்தக முத்திரை விண்ணப்பங்களையும் திரும்பப் பெற வேண்டியிருக்கும். பயனர்களை புதிய பிராண்டுக்கு மாற்ற வேண்டிய சூழலும் உருவாகலாம்,” என்கின்றனர்.
வணிக ரீதியாகப் பார்த்தால், தற்போதைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையிலும், Jodi365 நிறுவனத்துடன் மீண்டும் பிரச்சினை ஏற்படாத அளவுக்கு போதுமான வித்தியாசம் கொண்டதாகவும் புதிய பிராண்டை அறிமுகப்படுத்துவது சிறந்த அணுகுமுறையாக இருக்கும், என்றும் கூறுகின்றனர்.
"சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமான வந்ததை அடுத்து, நாங்கள் எங்கள் சட்டக் குழுவை பலப்படுத்தியுள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கினை உறுதியுடன் அணுக தயாராக உள்ளோம்,” என்று ஜோடி365 நிறுவனர் அனீல் குமார் தெரிவித்துள்ளார்.
கட்டுரை தொகுப்பு உதவி: முத்துகுமார்

