கேரளாவில் ‘பிரியதர்ஷினி’ திட்டம் - பெண்கள், திருநங்கைகளுக்கு பேருந்து சேவை இலவசம்!
இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் இயங்கும் சாதாரண கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இது ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
கேரளாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணத் திட்டமான ‘பிரியதர்ஷினி’ எனும் பெயரில் முதல்வர் வி.டி. சதீசன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் தம்பானூர் கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் திட்டத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் இயங்கும் சாதாரண கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இது ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். தினசரி வேலைக்குச் செல்லும் லட்சக்கணக்கான பெண்களுக்கு இந்தத் திட்டம் பெரும் நிவாரணமாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது.
திட்டத் தொடக்க விழாவில் பேசிய முதல்வர் வி.டி. சதீசன்,
“இலவச பேருந்து பயணம் என்பது கேரளப் பெண்களுக்கு செலுத்தப்படும் மரியாதையாகும். பெண்களை மதிக்க வேண்டும் என்ற செய்தியையும் இது சமூகத்துக்கு எடுத்துரைக்கிறது,” என்றார்.
மேலும் அவர்,
“இந்த இலவசப் பயணத்தை பெண்களுக்கு வழங்கப்படும் தர்மமாகக் கருதக் கூடாது. இது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மீனவப் பெண்கள், வீட்டு வேலை செய்பவர்கள், மாணவிகள், பணியாற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் இதனால் பயனடைவார்கள். அவர்கள் இதுவரை பயணத்திற்காக செலவிட்ட பணத்தை முக்கிய தேவைகளுக்காக பயன்படுத்த முடியும்,” என்று கூறினார்.
திட்ட அறிமுகத்தின் ஒரு பகுதியாக, முதல்வர் சதீசன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி. ஜான், பட்டியல் சாதி, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.ஏ. துளசி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் தம்பானூர் பேருந்து நிலையத்திலிருந்து தலைமைச் செயலகம் வரை கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் பயணம் செய்தார். அந்த பேருந்தை பெண் ஓட்டுநர் இயக்கியதுடன், டிக்கெட் வழங்கும் பணியையும் பெண் நடத்துநர் மேற்கொண்டார்.
‘இந்திரா கேரண்டிகள்’ எனப்படும் ஐந்து முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து வயதினரான பெண்கள் மற்றும் திருநங்கைகள் வருமானம், சமூக நிலை அல்லது பிற தகுதிகள் எதுவும் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்காக முன்பதிவு, விண்ணப்பம் அல்லது ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.
எனினும், கேஎஸ்ஆர்டிசிக்கு செலவுத் திருப்பிச் செலுத்துதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்காக, பயணிகள் மின்னணு டிக்கெட் இயந்திரம் (ETM) மூலம் நடத்துநரிடமிருந்து பூஜ்ஜிய மதிப்புடைய ‘பிரியதர்ஷினி’ டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தச் சலுகை தற்போது கேஎஸ்ஆர்டிசி இயக்கும் 3,125 சாதாரண பேருந்துகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.
