சட்ட ஆலோசனையில் ஏஐ: Dell-NVIDIA உடன் இணைந்து சட்டச் சேவையில் பிரபல லஷ்மிகுமரன் & ஸ்ரீதரன் அட்டார்னீஸ்!
சட்டத் துறையில் நம்பகத்தன்மை, துல்லியம் மற்றும் வேகம் மிகவும் முக்கியமானவை என்பதால், எல்.கே.எஸ். தனது பல ஆண்டுகளாகச் சேகரித்துள்ள சட்ட அறிவு, ஒழுங்குமுறை அறிவிப்புகள், நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சட்டப் பிரிவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தனியுரிமை கொண்ட ஏஐ சட்ட ஆராய்ச்சி உதவியாளரை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி முழுமையான சட்ட நிறுவனங்களில் ஒன்றான 'லஷ்மிகுமரன் & ஸ்ரீதரன் அட்டார்னீஸ்' (Lakshmikumaran & Sridharan Attorneys - LKS.), டெல் டெக்னாலஜீஸ் மற்றும் NVIDIA ஆகிய நிறுவனங்களின் ஏஐ உள்கட்டமைப்பை பயன்படுத்தி, சட்டச் சேவைகளை வழங்கும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டத் துறையில் நம்பகத்தன்மை, துல்லியம் மற்றும் வேகம் மிகவும் முக்கியமானவை என்பதால், எல்.கே.எஸ். தனது பல ஆண்டுகளாகச் சேகரித்துள்ள சட்ட அறிவு, ஒழுங்குமுறை அறிவிப்புகள், நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சட்டப் பிரிவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தனியுரிமை கொண்ட ஏஐ சட்ட ஆராய்ச்சி உதவியாளரை உருவாக்கியுள்ளது.
இந்த அமைப்பு வழக்கறிஞர்களுக்கு தேவையான சட்டத் தகவல்களை விரைவாகவும், ஆதார மேற்கோள்களுடன் கூடிய துல்லியமான பதில்களாகவும் வழங்குகிறது. இதன் மூலம், முன்னுதாரணங்கள், சட்ட விளக்கங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை தேடும் பணிகளில் செலவாகும் நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது.
சட்ட ஆராய்ச்சி மற்றும் தகவல் தேடலுக்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டிய நிலை குறைந்ததால், வழக்கறிஞர்கள் தற்போது சட்டப் பகுப்பாய்வு, வாதத் திறன் மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர்களுக்கான தரமான ஆலோசனைகள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்த முடிகிறது.
இந்த ஏஐ அமைப்பு முழுமையாக நிறுவன வளாகத்திற்குள் (On-Premise) நிறுவப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர் தகவல்கள் மற்றும் சட்ட ஆவணங்கள் மீது முழுமையான கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இதற்கான அடிப்படை உள்கட்டமைப்பாக Dell PowerEdge XE-Series சேவையகங்கள், NVIDIA துரிதக் கணினி தளம், டெல் பவர்சேல் சேமிப்பு வசதி மற்றும் டெல் பவர் சுவிட்ச் நெட்வொர்க் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக, அறிவுசார் சொத்துரிமை (IP) ஆராய்ச்சி, அலுவலகப் பணிச்சூழல் நுண்ணறிவு, வாடிக்கையாளர் தகவல் சார்ந்த பணிச்செயல்முறைகள் மற்றும் இயற்கை மொழி பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு தன்னாட்சி ஏஐ (Agentic AI) பயன்பாடுகளை எல்.கே.எஸ். அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, அதன் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவில் வாரத்திற்கு சுமார் 2,000 மின்னஞ்சல்கள் செயல்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் இப்பணிகளை ஏஐ முகவர்கள் தானாகவே புரிந்து, வகைப்படுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தன்னியக்கமாக்கும் திட்டமும் உள்ளது.
இதுகுறித்து எல்.கே.எஸ். நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான எல்.பத்ரி நாராயணன் கூறுகையில்,
“சிக்கலான, கட்டமைக்கப்படாத சட்டப் பிரச்சினைகளுக்கு விரைவாகவும் ஒரே தரத்தில் உள்ள ஆலோசனைகளையும் வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. டெல் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன், பாரம்பரிய ஆராய்ச்சி முறைமையிலிருந்து நுண்ணறிவு சார்ந்த சட்ட ஆலோசனை முறைமைக்குத் தாங்கள் முன்னேறி வருகிறோம்,” என்றார்.
மேலும், டெல் டெக்னாலஜீஸின் இந்திய உள்கட்டமைப்பு தீர்வுகள் பிரிவு தலைவர் வெங்கட் ஸ்ரீராம் கூறுகையில்,
“துல்லியம், நம்பிக்கை மற்றும் வேகம் இன்றைய தொழில்முறை சேவை நிறுவனங்களுக்கு அத்தியாவசியமாகிவிட்டன. ஏஐ-யை பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை டெல் ஏஐ தொழிற்சாலை வழங்குகிறது,” என்று தெரிவித்தார்.

