வாழைக் கழிவில் தோல் பொருட்கள்: மாற்றி யோசித்த ‘Banofi’-யின் வெற்றிக் கதை!
ஆடை, வாழ்க்கை முறை மற்றும் வாகனத் துறைகளில் 150-க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடன் முன்னோடி திட்டங்களை பனோஃபி செய்துள்ளது.
பெரும்பாலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைப் போலவே, ‘பனோஃபி’ (Banofi) பயணமும் ஒரு சிறிய ஏமாற்றத்தில் இருந்தே தொடங்கியது. ஜினாலி மோடி என்ற பெண்ணுக்குத் தாராளமாக வாங்கக் கூடிய அளவில் ஒரு நல்ல தோல் பை தேவைப்பட்டது. ஆனால், அவர் கண்டதோ கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளை உண்டாக்கும் விலங்குத் தோல்கள் அல்லது ‘பசுமை’ என்ற போர்வையில் பிளாஸ்டிக்கால் செய்யப்படும் செயற்கைத் தோல்கள் என்ற இரு தேர்வுகளுக்கு இடையே சிக்கியிருந்த ஒரு தொழில் முறையைத்தான். அதனால், அவரே தனக்கான ஒரு தீர்வை உருவாக்கத் தொடங்கினார்.
பனானா மற்றும் ஃபைபர் ஆகிய வார்த்தைகளை இணைத்து பிறந்த ‘பனோஃபி’ என்ற நிறுவனம்தான் அதன் விளைவு.
இந்தியாவின் மிகுதியான விவசாயக் கழிவுகளில் ஒன்றைப் பயன்படுத்தி, அசல் விலங்குத் தோலைப் போன்ற தோற்றம், தொடு உணர்வு மற்றும் மணத்தைக் கொண்ட ஓர் அதிநவீனப் பொருளை உற்பத்தி செய்யும் காலநிலைத் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ‘பனோஃபி’ இயங்கி வருகிறது.

‘பனோஃபி’யின் தொடக்கப் புள்ளி...
தோல் தொழிற்சாலை நீண்ட காலமாகவே மாசுபாடு, அதிக அளவிலான நீர் பயன்பாடு மற்றும் நெறிமுறை சார்ந்த கவலைகளுக்குப் பெயர்பெற்றதாக உள்ளது. ஒட்டுமொத்த ஆடை மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை உலகின் மூன்றாவது பெரிய உற்பத்தித் துறையாகும். இது உலகளாவிய கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தில் 8% வரை பங்களிக்கிறது.
இந்தியாவில் வளர்ந்த ஜினாலி மோடி, இந்தப் பிரச்சினையை மிக அருகிலிருந்து பார்த்தார். உயிரித் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்கு ஏற்ற மிகச் சிறந்த அனுபவப் பின்னணி அவருக்கு இருந்தது. மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் உயிரி வேதியியல் பட்டம், மெக்கின்சி அண்ட் கோ நிறுவனத்தில் ஆலோசனை அனுபவம் மற்றும் யேல் சுற்றுச்சூழல் பள்ளியில் முதுகலைப் பட்டம் எனப் பல தளங்களில் அவர் தடம்பதித்தார்.
அவரது சிந்தனை மிகவும் எளிமையானது:
வாழைத் தோட்டங்கள் பெருமளவிலான தண்டுப் பகுதியைச் சாகுபடிக்குப் பின் கழிவுகளாகப் பெறுகின்றன. விவசாயிகள் அதை வழக்கமாக எரிக்கின்றனர் அல்லது தூக்கி எறிகின்றனர். அந்தக் கழிவுகளையே மூலப்பொருளாக மாற்றினால் என்ன என்ற கேள்விதான் ‘பனோஃபி’யின் தொடக்கப் புள்ளி.
2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா அருகே இயங்கி வரும் பனோஃபி, வெறும் நிலையான தயாரிப்பை மட்டும் உருவாக்கவில்லை. விநியோகச் சங்கிலியின் ஆரம்பப் புள்ளியில் இருக்கும் மக்களின் பொருளாதார முறையையே மாற்றி அமைக்கிறது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பனோஃபியின் ஆரம்பக் கால விவசாயி ஒருவர், முன்பு வாழைத் தண்டுகளை எரிக்க வேண்டிய ஒரு சுமையாகவே பார்த்தார். ஆனால், இப்போது அவற்றை விற்று கூடுதல் வருமானம் ஈட்டுகிறார். இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளுக்குப் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க உதவியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் சுற்றுச்சூழல் சார்ந்த பயன்களும் வியக்கத்தக்க வகையில் உள்ளன.
வழக்கமான தோலை விட தங்களது செலுலோஸ் சார்ந்த தயாரிப்பு 93% குறைந்த நீர் மற்றும் 97% குறைந்த கார்பன் டை ஆக்சைடை மட்டுமே பயன்படுத்துவதாகவும், பூஜ்ஜிய கழிவுநீரையே வெளியேற்றுவதாகவும் பனோஃபி கூறுகிறது.
சர்வதேச அங்கீகாரம்
பனோஃபி நிறுவனத்தைப் பற்றித் தனியாக ஆய்வு செய்த ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), 95% நீர் பயன்பாட்டுக் குறைப்பையும், 90%-க்கும் அதிகமான கார்பன் உமிழ்வுக் குறைப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வணிகத்தின் பொருளாதாரத் தன்மை ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று வலுசேர்க்கும் அரிதான ஒரு தயாரிப்பாக இது திகழ்கிறது.
ஏப்ரல் 2022-ல் யேல் ஸ்டார்ட்-அப் போட்டியில் இந்த யோசனையின் ஆரம்ப வடிவத்தைச் சமர்ப்பித்த ஜினாலி மோடி, $25,000 மதிப்பிலான Sustainable Venture Prize வென்றார். இந்தத் தொகை பனோஃபியின் ஆரம்பக் கால உருவாக்கத்திற்கு உதவியது.
யேலின் Tsai Center for Design and Innovation, பனோஃபிக்கு முதல் ஆர்டராக நோட்புக்குகளைச் செய்து தரக் கேட்டுக்கொண்டது.
2023-ம் ஆண்டு நிறுவனத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. உலகம் முழுவதிலுமிருந்து 40,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மிகப் பெரிய போட்டியில், பனோஃபி $1 மில்லியன் மதிப்பிலான Hult Prize வென்றது. பாரிஸில் நடைபெற்ற விழாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஸ்டெல்லா மெக்கார்ட்னி இந்த விருதை அறிவித்தார்.

ஜினாலி மோடியுடன் அவரது குழு உறுப்பினர்களான மேகி போரஹாம் மற்றும் இசோபெல் கேம்ப்பெல் ஆகியோரும் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர். அதே ஆண்டில், சுழற்சிப் பொருளாதாரம் சார்ந்த உலகளாவிய Wege Prize-ல் $30,000 மதிப்பிலான முதலிடத்தையும் பனோஃபி கைப்பற்றியது.
வாழை மரம் காய்த்தவுடன், புதிய மரம் வளர்வதற்காக அதன் முழுத் தண்டையும் வெட்டி அகற்ற வேண்டும். இந்தத் தண்டு தாவரத்தின் எடையில் சுமார் 80% ஆகும். உலகின் மிகப் பெரிய வாழை உற்பத்தியாளரான இந்தியா, ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் டன் வாழைத் தண்டுக் கழிவுகளை உருவாக்குகிறது.
உற்பத்தி முறையும் வளர்ச்சியும்
பனோஃபி இந்தத் தண்டுகளிலிருந்து செலுலோஸ் நிறைந்த நாரைப் பிரித்தெடுத்து, அதை இயற்கை பிணைப்பான்கள் மற்றும் மாவுச்சத்துடன் கலந்து தாள்களாக அழுத்துகிறது. பின்னர் விலங்கு தோலின் அமைப்பு மற்றும் நெசவைப் போன்ற தோற்றத்தைப் பெற இவை தகுந்த முறையில் முடிக்கப்படுகின்றன. வழக்கமான தோல் பதனிடுதல் முறைகள் தவிர்க்கப்படுவதால், கழிவுநீரை நஞ்சாக்கும் குரோமியம் மற்றும் பிற உலோகங்கள் இதில் பயன்படுத்தப்படுவதில்லை.
பனோஃபியின் முதல் தயாரிப்பு கடினமான தோல் பொருட்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. பின்னர் அக்குழு மென்மையான பொருட்களுக்கான பதிப்பையும் உருவாக்கியது. இது அவர்களின் சந்தை வாய்ப்பை கணிசமாக விரிவாக்கியது. இந்த முன்னேற்றம் இரண்டு பெரிய சொகுசு பிராண்டுகள் மற்றும் ஒரு பிரெஞ்சு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வழிவகுத்ததாக ஜினாலி மோடி தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தின் வளர்ச்சி பரவலாக உள்ளது.
ஆடை, வாழ்க்கை முறை மற்றும் வாகனத் துறைகளில் 150-க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடன் முன்னோடி திட்டங்களை பனோஃபி செய்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து மானியமும் பெற்றுள்ளதுடன், யேல் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ எழுதுபொருள் கூட்டாளியாகவும் இயங்கி வருகிறது. இதன் தயாரிப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தரவுத் தளமான Tracxn கூற்றுப்படி, மார்ச் 31, 2025 நிலவரப்படி,
பனோஃபியின் ஆண்டு வருவாய் தோராயமாக ரூ.1.63 கோடியாக இருந்தது. இதன் குழுவில் சுமார் 16 பேர் பணியாற்றுகின்றனர்.

தற்போதைய நடவடிக்கைகளில் பெரும்பாலானவை பெரிய பிராண்டுகளுடனான முன்னோடித் திட்டங்களாகவே உள்ளன. இவை பொதுவாகப் பெரிய உற்பத்தி ஒப்பந்தங்களுக்கு முன்னோடியாக அமையும்.
பிட்ச்புக் தரவுகளின்படி, இந்நிறுவனம் இதுவரை சோஷியல் ஆல்ஃபா, எம்.ஐ.டி சால்வ், ஹல்ட் ஃபண்ட் மற்றும் மாஸ்சேலஞ்ச் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து $1.14 மில்லியனைத் திரட்டியுள்ளது.
ஐ.நா.வின் அங்கீகாரமும் எதிர்காலப் பாதையும்
செப்டம்பர் 2025-இல், நியூயார்க்கில் நடைபெற்ற காலநிலை வாரத்தின்போது, அப்போதைய 28 வயதான ஜினாலி மோடி ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் Young Champions of the Earth விருதை வென்ற மூவரில் ஒருவராகத் தேர்வானார். ஒவ்வொரு வெற்றியாளருக்கும் $20,000 பரிசுத்தொகை, வழிகாட்டல் மற்றும் சர்வதேச தளம் கிடைத்தது.
பனோஃபியைப் பொறுத்தவரை, இந்த அங்கீகாரங்கள் எதைக் குறிக்கின்றன என்பதே மிக முக்கியமானது. விவசாயிகள் எரிக்கப் பயன்படுத்திய கழிவுகளிலிருந்து வருமானம் ஈட்டுகிறார்கள். பிராண்டுகளுக்குச் சுற்றுச்சூழலைப் பாதிக்காத சொகுசு ரக தோல் பொருள் கிடைக்கிறது. புவியும் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது.
ஆப்பிள், கற்றாழை மற்றும் காளான்களில் இருந்து தயாரிக்கப்படும் மாற்றுத் தோல்களின் நெரிசலான சந்தையில், ஹல்ட் பரிசு, ஐ.நா. விருது மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆதரவோடு கூடிய இந்த மூன்று வழியிலான நன்மையே பனோஃபியின் மிகப் பெரிய பலமாக உள்ளது.
Edited by Induja Raghunathan

