பாதியில் விட்ட 10ம் வகுப்பு: 37 ஆண்டுகள் கழித்து தேர்வு எழுதி பாஸ் செய்த கல்பானா!
குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய பெண் ஒருவர், இரவு நேரத்தில் தனது கணவன் மற்றும் மகன்களுக்கு கூட தெரியாமல் படித்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய பெண் ஒருவர், இரவு நேரத்தில் தனது கணவன் மற்றும் மகன்களுக்கு கூட தெரியாமல் படித்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
இந்திய பெண்களைப் பொறுத்தவரை சில சமயங்களில் குடும்பத்தில் நிலவும் வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கோ அல்லது திருமணம் செய்து கொண்டோ செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் சொற்ப அளவிலானவர்களுக்கு மட்டுமே மீண்டும் கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஆனால், பலர் குடும்பம், குழந்தைகள் என அடுத்தடுத்து சொந்த வாழ்க்கையில் பிசியாகிவிடுகின்றனர்.
இந்நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக 37 ஆண்டுகளுக்கு முன்பு பாதியில் விட்ட படிப்பை, கணவன் மற்றும் மகன்களுக்கு கூட தெரியாமல் வெற்றிகரமாக மீட்டெடுத்தவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இரவு பள்ளி வகுப்பில் சக மாணவர்களுடன் பயிலும் கல்பனா...
கல்வி கனவை நனவாக்கிய கல்பனா:
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 53 வயது பெண் கொலேட்கர் கல்பனா அச்யுத், குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி 37 ஆண்டுகளுக்குப் பிறகு 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதுமட்டுமல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அவர் 79.60 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளது அனைவரது பாராட்டுக்களையும் குவிக்க முதல் காரணமாக அமைந்துள்ளது.
தனது அம்மாவின் கல்விக்கான வேட்கை எவ்வாறு வெற்றி பெற்றது என்பது குறித்து மாஸ்டர்கார்டில் சீனியர் மென்பொருள் பொறியாளராக உள்ள மகன் பிரசாத் ஜம்பலே லிங்கிடு இன் தளத்தில் எழுதிய பதிவின் மூலமாக சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளது.
கல்பனாவிற்கு படிப்பின் மீது ஆர்வத்தை தூண்டியது எது?
கொலேட்கர் கல்பனா அச்யுத், தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு வீட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், 16 வயதிலேயே பள்ளியை விட்டு வெளியேறி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். தனது வருமானத்தின் மூலமாக தன்னுடன் பிறந்தவர்களை படிக்க வைத்துள்ளார்.
அதன் பின்னர், திருமணம், குடும்பம், பிள்ளைகள் என வாழ்க்கையை நடத்தி வந்த கல்பனாவிற்கு பாதியில் கைவிட்ட எஸ்.எஸ்.எல்.சியை மீண்டும் தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜம்பலே தனது லிங்கிடு இன் பதிவில்,
“கடந்த வருடம் என் அம்மா அரசுப் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஆசிரியை அவளிடம் படிப்பைப் பற்றிக் கேட்டார், அவர் எஸ்எஸ்சி தேர்ச்சி பெறவில்லை என்று தெரிந்ததும், படிக்காதவர்கள் புதிய அரசுத் திட்டம் இருப்பதாக அம்மாவிடம் தெரிவித்தார். மேலும், அதன் மூலம் அவர் எஸ்எஸ்எல்சி தேர்வை மீண்டும் படித்து எழுதலாம்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் பயிற்சிக்கான செலவு, படிக்கத் தேவையான புத்தகங்கள் என அனைத்தும் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. எனவே கல்பனா இரவு பள்ளிக்குச் சென்று மீண்டும் 10ம் வகுப்பு படிக்க ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து தனது குடும்பத்தினரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.
தினந்தோறும் மாலை வேளைகளில் வாக்கிங் செல்வதாக சொல்லிவிட்டு, கல்பனா பள்ளிக்குச் சென்று படித்து வந்துள்ளார். ஆனால், இந்த உண்மையை அவரால் வெறும் ஒரு மாதத்துக்கு மட்டுமே கணவன் மற்றும் மகன்களிடம் இருந்து மறைக்க முடிந்துள்ளது. ஏனெனில் கல்பனாவிற்கு திடீரென வாக்கிங் மீது ஏற்பட்ட ஆர்வம் அனைவரையும் சந்தேகம் கொள்ளவைத்துள்ளது.
மாலை நேர பள்ளி வகுப்பில் தனது தாயார் தான் முதலிடத்தில் இருந்ததாக தெரிவித்துள்ள ஜம்பலே,
"நான் இந்தியாவுக்குத் திரும்பியபோது, அம்மா தனது நோட்புக்கை என்னிடம் காட்டினாள், அவர் அல்ஜீப்ரா மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக தேர்ச்சி பெற்றிருப்பதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். பல வருடங்களுக்குப் பிறகும் எனது அம்மாவால் படிப்பில் எல்லாவற்றையும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அது மட்டுமல்ல. இதனிடையே, எனது திருமணம் பிப்ரவரி மாதம் நடந்தது, ஆனால் அம்மாவின் பொதுத்தேர்வு மார்ச் மாதம். இருப்பினும் அவர்கள் எல்லா வேலையையும் சிறப்பாக முடித்துவிட்டு, தேர்வுக்கும் தயாரானார்,” எனக்குறிப்பிட்டுள்ளார்.
கல்பனா மராத்தியில் 83, ஆங்கிலத்தில் 52, கணிதத்தில் 65, அறிவியலில் 88, சமூக அறிவியலில் 82 ஆகிய மதிப்பெண்களை எடுத்துள்ளார். ஆக மொத்தம் 398 மதிப்பெண்கள் ஆகும். 37 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி தேர்வை எழுதினாலும் கில்லியாக சொல்லி அடித்த கொலேட்கர் கல்பனா அச்யுத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஆங்கிலத்தில் - தி குவிண்ட் | தமிழில் - கனிமொழி

