'குக்கிராமம் டு NVIDIA' - ஆண்டிற்கு ரூ.2.6 கோடி சம்பளம் வாங்கும் கர்நாடகா இளைஞரின் வைரல் பதிவு!
கர்நாடகாவில் மாட்டு வண்டி மட்டுமே பிரதான போக்குவரத்தாக உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இன்று முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Nvidia-வில் முக்கிய பொறுப்பில் உள்ள பிரித்விராஜ் என்ற இளைஞரின் பதிவு இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு, அவர்களது வாழ்க்கைதரத்தை உயர்த்துவதற்கான ஏணி கல்விதான். அதனால்தான் மருத்துவத்தைப் போலவே பெரும்பாலான நாடுகளில் கல்வியும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
மதிப்பெண்கள் மட்டுமே எதிர்காலத்தை நிர்ணயிப்பதில்லை என்றாலும், மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் கல்வியைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பதற்கு நம்முடன் வாழும் உதாரணங்களாக பலர் உள்ளனர்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கர்நாடகாவைச் சேர்ந்த பிருத்விராஜ் என்ற இளைஞர். கர்நாடகாவில் மாட்டு வண்டிகள் மட்டுமே பிரதான போக்குவரத்தாக உள்ள ஒரு குக்கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவரான அவர், இன்று தனது கல்வியின் மூலம் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றானNVIDIA-வில் பணி புரிந்து வருகிறார். அவரது ஆண்டு வருமானம் ரூ.2.6 கோடி எனக் கூறப்படுகிறது.
மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், கல்வி மூலம் வாழ்க்கையில் தான் ஜெயித்தக் கதையை, தனது லிங்க்டு இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிருத்விராஜ். அவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

குக்கிராமம் டு என்விடியா வரை
கர்நாடகாவின் சித்ரதுர்காவுக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவரான பிரித்விராஜ், மாட்டு வண்டிகளே முக்கிய போக்குவரத்தாக இருந்த அந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்து, பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் (PES) பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் பொறியியல் (Electronics Engineering) பயின்றுள்ளார். பெரிய நிறுவனங்கள் தன்னைத் தேடி வரும் அளவிற்கு, பொருளாதாரச் சூழல், ஐஐடி பட்டம் என சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லாவிட்டாலும், தன்னம்பிக்கையுடன் தொடர்ச்சியான இண்டர்ன்ஷிப்கள் மற்றும் முயற்சிகள் மூலம் இந்த நிலையை அவர் அடைந்துள்ளார்.
வகுப்பறையைத் தாண்டி தொடர்ந்து கற்றுக் கொள்வதிலும், தனது திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் தான் காட்டிய ஆர்வமே, தன்னை கலிபோர்னியாவில் உள்ள என்விடியா தலைமையகம் வரை கொண்டு சேர்த்திருப்பதாக தெரிவித்துள்ளார் பிரித்விராஜ்.
மேலும், உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை இயக்கும் மேம்பட்ட சிப்களை (chips) உருவாக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும், அவர் தற்போது ஆண்டுக்கு சுமார் ரூ.2.6 கோடி ஊதியம் பெறுவதாக அந்தப் பதிவுவில் கூறப்பட்டுள்ளது.

வெற்றியை தீர்மானிக்கும் கருவிகள்
ஒருவரின் வெற்றி என்பது அவர் எங்கிருந்து தொடங்குகிறார் என்பதை விட, விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் கற்றுக்கொள்வதில் உள்ள அர்ப்பணிப்பு ஆகியவற்றாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது பிரித்விராஜின் இந்தப் பதிவு.
கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், கல்விப் பின்னணி மற்றும் முந்தைய வாழ்க்கைச் சூழல் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதனை வென்றுவிட முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக பிரித்விராஜின் வெற்றி அமைந்துள்ளது.
“கனவுகளைத் துரத்திக் கொண்டிருப்பவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். தயவுசெய்து அதை நிறுத்தி விடாதீர்கள்... தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்; அமைதியாக இருங்கள், கொஞ்சம் கொஞ்சமாக இலக்குகளை நோக்கி நகருங்கள். இன்று முடியவே முடியாததாக தோன்றும் விசயங்கள் நிச்சயம் நாளை உங்கள் வெற்றிக் கதையாக மாறும். ஆம்.. நான் NVIDIA-வில் இருப்பது போல்.. உங்களாலும் முடியும்,” என தனது பதிவை இவ்வாறு பிரித்விராஜ் முடித்துள்ளார்.
சுமார் 11 மாதங்களுக்கு முன்பு அவர் வெளியிட்டுள்ள இந்த லிங்க்டு இன் பதிவு, தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
உண்மையிலேயே ஊக்கமளிக்கும் கதை!
முன்னணி கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களால் மட்டுமே, சர்வதேச அளவில் தொழில்நுட்ப துறையில் சாதிக்க முடியும் என்ற கண்ணோட்டத்தை மாற்றி இருப்பதாக, பிரித்விராஜின் பதிவிற்கு பாராட்டு தெரிவித்து மற்றப் பயனர்கள் கமெண்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
“சமூகப் படிநிலைகளிலிருந்து விடுபட்டு உயர் பொருளாதார நிலையை அடைவதற்கான ஒரு நுழைவாயிலாக, பலருக்கும் கல்வி விளங்குகிறது. செயற்கை நுண்ணறிவால் (AI) கல்விக்கு என்ன நேரும் என்பது குறித்து நாம் விவாதித்து வந்தாலும், கல்வியின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும் தொடர்ந்து நிலைத்திருக்கும்," என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “உண்மையிலேயே இது ஊக்கமளிக்கிறது! பின்னணியை விட அர்ப்பணிப்பு, கற்றல் மற்றும் விடாமுயற்சி ஆகியவைதான் முக்கியம் என்பதை இது நிரூபிக்கிறது. பெரிய கனவுகளைக் காணும் ஒவ்வொரு மாணவருக்கும் இது ஒரு பெருமைக்குரிய தருணம். வாழ்த்துகள் மற்றும் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள்," எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ‘தங்கள் இலக்குகளை அடையப் போராடும் மாணவர்களுக்கும், இளம் தொழில்முறை நிபுணர்களுக்கும் இப்பதிவு ஒரு உத்வேகமாக அமைவதாக’வும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

