பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் MEFTAL Spas வலி நிவாரணி; மருத்துவர்கள் சொல்லும் விளக்கம் என்ன?
MEFTAL வலி நிவாரணி எடுத்துக் கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும் என ஏன் இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது? உண்மையிலேயே இந்த மருந்து மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா? என்பது குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு மருத்துவர்களின் தெளிவான விளக்கம் இதோ...
பெரும்பாலான மக்கள் தாங்களே சென்று மெடிக்கல் ஷாப்களில் வாங்கிப் பயன்படுத்தும் முக்கிய வலி நிவாரணியான MEFTAL SPAS பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மருந்து என இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே செல்போனாய் கைக்குள் சுருங்கிவிட, பெரும்பாலான நோய்களுக்கு மக்களே சுயமாய் மருத்துவம் பார்த்துக் கொள்ளும் அபாயமும் சமீபகாலமாய் அதிகரித்து வருகிறது. தலைவலி தொடங்கி சமயங்களில் பெரிய உடல் உபாதைகளுக்குக்கூட கூகுளில் மருந்து தேடி, தாங்களே மெடிக்கல் ஷாப்களில் மருந்து வாங்கி சாப்பிட்டு விடுகின்றனர் சிலர். தங்களுக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும்கூட தாங்களே மருந்துகளின் பெயரை கூறி சுயமாக மருந்துகளை வாங்கித் தரும் அதிமேதாவிகளும் நம்மூரில் அதிகம்.
ஆனால், இப்படியெல்லாம் மருந்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை சுயமாக மருந்துக்களை வாங்கிச் சாப்பிடுவது எந்தளவிற்கு உடல்நலத்திற்கு ஆபத்தானது என்பது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு போதிய அளவு இல்லை. அதனால்தான் இந்திய மருந்தியல் ஆணையம், சுயமாக எந்தெந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என அவ்வப்போது எச்சரித்து வருகிறது.
MEFTAL எச்சரிக்கை
அந்தவகையில் தற்போது, வலி நிவாரணிகளில் பிரபலமான ஒன்றான MEFTAL-ஐ மருத்துவர்களின் ஆலோசனையின்றி, வலி ஏற்படும் போதெல்லாம் மக்களே தாங்களாக வாங்கிச் சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
மாதவிடாய் வலி, முடக்குவாதம், வீக்கம், பல்வலி போன்ற வலிகளுக்கு நிவாரணியாக வழங்கப்பட்டு வரும் மருந்துகளில் ஒன்றுதான் இந்த MEFTAL. நீண்டகாலமாக இந்த மருந்து புழக்கத்தில் உள்ளதால், மக்களே மெடிக்கல் ஷாப்களில் இந்த மருந்தை தாங்களாக வலி ஏற்படும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால், இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால் 2 முதல் 8 வாரத்திற்கு பின் தோல் அரிப்பு, காய்ச்சல் போன்ற மோசமான பின்விளைவுககள் ஏற்படுவதாக இந்திய மருந்தியல் ஆணையம் தற்போது எச்சரித்துள்ளது. மேலும் இந்த மாத்திரையானது உட்கொண்டு ஓரிரு வாரங்களுக்குப் பிறகே இந்த மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும், அதனால் மக்களுக்கு அதுபற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்தை அடிக்கடி சாப்பிடக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்தியல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு மக்களை குழப்பமடைய வைத்திருக்கிறது. எனவே, இது குறித்த தெளிவான விளக்கங்களைப் பெற மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் பொதுநல மருத்துவர்களிடம் தமிழ் யுவர்ஸ்டோரிக்காகப் பேசினோம்.
பயப்பட வேண்டியதில்லை
சென்னை தாம்பரத்தில் உள்ள பாபு’ஸ் மெட்டர்னிட்டி ஹாஸ்பிடலைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரான டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகா தேவி கூறுகையில்,
“அடிவயிறு வலி, குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிறு வலிகளுக்கு கடந்த 30 வருடங்களாக இந்த மருந்தைத்தான் நான் பரிந்துரைத்து வருகிறேன். மாதவிடாயின் முதல் நாள் அல்லது இரண்டாம் நாளில் இந்த மாத்திரையை வலியின் அளவைப் பொறுத்து, நாளொன்றிற்கு ஒன்று அல்லது இரண்டு வரை எடுத்துக் கொள்ளலாம். எனது இத்தனை வருட அனுபவத்தில் இதுவரை இந்த மாத்திரை சாப்பிட்டதால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக யாருமே என்னிடம் கூறியதில்லை,” என்றார்.
இப்போது மார்க்கெட்டில் நிறைய மருந்து கம்பெனிகள் வந்து விட்டன. அவற்றிற்கிடையேயான தொழில் போட்டி காரணமாகக்கூட இந்த மாதிரி அறிவிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.
முன்பு இப்படித்தான் அபார்ஷன் ஆகாமல் இருப்பதற்காக நாங்கள் பரிந்துரைக்கும் மாத்திரை ஒன்று காது கேளாமை உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக எல்லாம் கூறினார்கள். ஆனால், இன்று பார்த்தால், மார்க்கெட்டில் அந்த மருந்தை மட்டும் சுமார் 25க்கும் மேற்பட்ட கம்பெனிகள் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றன.
பொதுவாக அலோபதியில் எல்லா மருந்துகளுக்குமே பின்விளைவுகள் என்பது இருக்கத்தான் செய்யும். மற்ற மருத்துவமுறைகள் சைக்கிளில் செல்வது போல் என்றால், அலோபதி என்பது விமானத்தில் செல்வதுபோல், விரைவான பலனைத்தரும். அப்படிப்பட்ட மருந்துகள் பக்கவிளைவுகள் இல்லாமல் எப்படி இருக்கும்.
“நெஞ்செரிச்சல், அசிடிட்டி, வயிறு உப்புசம், வாந்தி வரும் உணர்வு என எல்லா மருந்துகளுக்குமே ஒரு பக்கவிளைவு இருக்கும். அது மாதிரிதான் இதுவும் என்பதே என் கருத்து.”
மாதவிடாய் வலி என வருபவர்கள் அனைவருக்குமே நாங்கள் இந்த வலி நிவாரணிகளைப் பரிந்துரைப்பதில்லை. வீட்டில் இருக்கும் வெந்தயத்தை வைத்துக்கூட அதனை சரி செய்து கொள்ளலாம். பொறுக்கமுடியாத வலி, வாந்தி, பேதி என சிரமப்படுபவர்களுக்கும், ஸ்கேன் உள்ளிட்ட பல டெஸ்ட்களை எடுத்துப் பார்த்து, அவற்றில் எல்லாம் நார்மலாக இருக்கிறது என்றால் மட்டும்தான், மாதந்தோறும் வலி ஏற்படும்போது இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கிறோம்.
முடக்குவாதம் போன்ற பிரச்சினைகளுக்கு தினமும் ஒன்று அல்லது இரண்டு என நீண்டகாலமாக சாப்பிடுபவர்களுக்கு இந்த பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும் எனக் கூறுகிறார்கள். மற்றபடி, மாதவிடாய் வலிக்காக மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் பயப்பட வேண்டியதில்லை” என்கிறார்.
இதேபோல், சென்னையில் உள்ள மதர்ஹுட் மருத்துவமனையின் மகளிர் நல மருத்துவர் டாக்டர் இர்ஃபானா ஷாஹுல் ஹமீது இது குறித்து கூறுகையில்,
“மாதவிடாய் வலி மட்டுமின்றி பல வலிகளுக்கு நிவாரணியாக இந்த மருந்தைத்தான் இதுவரை பரிந்துரைத்து வருகிறோம். எனது அனுபவத்தில் இதுவரை யாரும் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகக் கூறவில்லை. ஒருவேளை இந்திய மருந்தியல் ஆணையம் கூறியிருப்பதுபோல், சில வாரங்களுக்குப் பிறகு பக்கவிளைவுகள் ஏற்படுவதால், இந்த மருந்துதான் அதற்குக் காரணம் என்ற தெளிவு நோயாளிகளுக்கு தெரியாமல்கூட இருக்கலாம்.”
இந்த மருந்து பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேயே மெடிக்கல் ஷாப்களில் வாங்க முடியும். அதனாலேயே மக்கள் மருந்துவர்களின் கவனத்திற்கு வராமலேயே அதிகமாக இதனை எடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
தற்போது வலி நிவாரணி என்றால் இதுமட்டும் இல்லை. இன்னும் நிறைய காம்பினேஷன்கள் இருக்கின்றன. இப்போதைக்கு MEFTAL-ஐ தவிர்த்துவிட்டு, மற்ற வலி நிவாரணிகளை பரிந்துரைப்பதுகூட நல்லது. ஏனென்றால் ஏன் மருந்தியல் ஆணையம் இதனை அறிவுறுத்தியுள்ளது என்பதை நாம் பொறுத்திருந்து, அவர்கள் விரிவான ஆய்வு அறிக்கை தந்த பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும், என்கிறார்.
இத்தனை மாத்திரைகள் வரை எடுத்துக் கொள்ளலாம், அதற்கு மேல் சென்றால் ஆபத்து என்றெல்லாம் இதனைக் கூற முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு நோயாளியின் வயது மற்றும் அவரது மெடிக்கல் ஹிஸ்ட்ரியைப் பொறுத்து பக்கவிளைவுகளும் மாறுபடும். ஆனால் இதுவரை இந்த மருந்தை எடுத்துக் கொண்டதால், பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக யாரும் என்னிடம் சிகிச்சைக்கு வரவில்லை.
”இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளைப் பார்த்து மக்கள் பயப்படத் தேவையில்லை. இது, அவர்களது உடல் நலப் பாதுகாப்புக்கு ஒன்றாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். பயமா? பாதுகாப்பா? என்று பார்த்தால் பாதுகாப்புதான் முக்கியம்,” என்கிறார்.
மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணை ஆலோசகரான, டாக்டர் பரத் சிலுவேரி இது குறித்து கூறுகையில்,
“MEFTAL என்றில்லை, பொதுவாக டாக்டர்களின் ப்ரிஸ்கிரிப்சன் இல்லாமல் மக்கள் தாங்களாக எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் ஒரு மருந்தை எந்த நேரத்தில், எவ்வளவு கொடுக்கலாம் என்பதை அவர்களது உடல்நிலை மற்றும் வயது என பல காரணிகளைப் பார்த்துதான் நாங்கள் பரிந்துரைப்போம்.”
ஏனென்றால், மருந்துகளின் பக்கவிளைவுகளால் வெறும் காய்ச்சல், வயிறு உப்புசம் போன்ற சின்னப் பிரச்சினைகள் மட்டுமின்றி, ஹார்ட் அட்டாக், உடல் உறுப்புகள் செயலிழத்தல் உள்ளிட்ட பெரிய பிரச்சினைகளுக்கு ஆளானவர்களுக்குக்கூட நான் சிகிச்சை அளித்திருக்கிறேன். நன்றாக ஆரோக்கியமாக இருந்தவருக்கு திடீரென இப்படியான பிரச்சினைகள் ஏற்படுகிறதென்றால், அவரது மெடிக்கல் ஹிஸ்டரியை ஆராய்ந்து பார்த்தால் இதுபோன்ற மருந்துகளை அவர்கள் சமீபத்தில் எடுத்துக் கொண்டது தெரிய வருகிறது. அதனை தெரிந்து கொண்டு, உடனடியாக சிகிச்சை அளித்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவோம்.
”வலி நிவாரணி என்பது ஒரு தற்காலிகமாக வலியில் இருந்து விடுபடுவதற்கான ஒரு மருந்துதானே தவிர, அது அந்த உடல்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைத் தராது. உடலின் ஒரு பாகத்தில் வலி உண்டாகிறதென்றால், அதனை நரம்புகள் மூலம் மூளை தெரிந்து கொள்ளும். இந்த வலி நிவாரணிகள் அந்த வலி உணர்ச்சியை மூளைக்கு கடத்த விடாமல் நரம்புகளைத் தடுக்கும் வேலையைத்தான் செய்கின்றன.”
எனவே, எப்போது, எங்கு வலி என்றாலும், மக்கள் சுயமாக MEFTAL போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளாமல், அந்த வலிக்கான காரணம் என்ன என்பதை, மருத்துவர்களின் உதவியோடு தேவையான டெஸ்ட்டுகளை எடுத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைச் சாப்பிட்டாலே குணமாகி விடலாம், என்கிறார்.