பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பதிவை நீக்கிய விவகாரம்: மன்னிப்புக் கோரிய Meta
இந்த விவகாரம் தொடர்பாக மெட்டாவின் உலகளாவிய அதிகாரிகள் வியாழக்கிழமையும் இந்தியாவில் தங்கி மேலும் ஒரு கட்ட விசாரணையில் பங்கேற்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் ஃபேஸ்புக் பதிவு தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா (Meta) மன்னிப்பு கேட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்த மெட்டாவின் உயர்மட்ட நிர்வாகிகள், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் (Child Sexual Abuse Material), டீப் ஃபேக் (Deepfake) காணொளிகள் மற்றும் பணம் பெற்று குறிப்பிட்ட வகை உள்ளடக்கங்களை அதிகளவில் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கும் விளக்கம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெட்டாவின் உலகளாவிய பொது விவகாரத் தலைவர் ஜோயல் கப்லான், "பிரதமர் மோடியின் பதிவை தவறுதலாக கட்டுப்படுத்திய சம்பவத்திற்காக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மெட்டா நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பு கேட்டேன்," என்று எழுத்துப்பூர்வமான அறிக்கையில் தெரிவித்தார்.
அதேவேளையில், அரசு வட்டாரங்களின் தகவலின்படி, இந்த விவகாரத்தில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் சார்பிலும் மன்னிப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மெட்டாவின் உலகளாவிய அதிகாரிகள் வியாழக்கிழமையும் இந்தியாவில் தங்கி மேலும் ஒரு கட்ட விசாரணையில் பங்கேற்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தச் சந்திப்பில் மெட்டாவின் தொழில்நுட்பக் குழு நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ் நிர்வாகத்தில் வெள்ளை மாளிகை கொள்கைப் பிரிவு துணைத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய ஜோயல் கப்லான், பின்னர் 2011-ஆம் ஆண்டு மெட்டாவில் இணைந்தார். கடந்த ஜூலை 23-ஆம் தேதி, தேர்வுத் தாள் கசிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களிடம் உறுதியளித்த பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பதிவு ஏன் தற்காலிகமாக நீக்கப்பட்டது என்பதை விளக்குமாறு இந்திய அரசு அவரை அழைத்தது. அவர் முதலில் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணனை சந்தித்த பின்னர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்தார். சந்திப்பின் போது,
"பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களை முன்னிறுத்த மெட்டா நிறுவனம் பணம் பெற்றதா?" என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரடியாகக் கேள்வி எழுப்பியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ஐ சுட்டிக்காட்டி, இடைநிலைத் தளமாக (Intermediary) வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பைப் பெற நிறுவனங்கள் தங்களது சட்டப்பூர்வ கடமைகளை முறையாக நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்றும், அதில் தவறினால் அந்தப் பாதுகாப்பு நீக்கப்படலாம் என்றும் அரசு எச்சரித்ததாக கூறப்படுகிறது.
அரசு வட்டாரங்களின் தகவலின்படி, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள், டீப் ஃபேக் பதிவுகள் மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவதில் தங்களது அமைப்புகளில் குறைபாடுகள் இருப்பதை மெட்டா அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "குறிப்பிட்ட வகையான உள்ளடக்கங்களை அதிகளவில் பரப்புவதற்காக பெருமளவு பணம் செலுத்தப்பட்டது," என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டதாக அரசு தரப்பு கூறியுள்ளது. இந்தக் கருத்து, குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களுடன் தொடர்புடையதாக இருந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், "சட்டவிரோதமான அளவுக்கு அதிகமான உள்ளடக்கங்களை எங்களது தற்போதைய அமைப்புகளால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை, என்று மெட்டா அதிகாரிகள் தெரிவித்ததாக அரசு வட்டாரங்கள் கூறின. எனினும், ஜோயல் கப்லான் அல்லது மெட்டாவின் பிற அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை அதிகாரப்பூர்வமாக ஏற்கவோ, இதுகுறித்து கருத்து தெரிவிக்கவோ இல்லை.
பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பதிவு தற்காலிகமாக நீக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள மெட்டாவின் உலகளாவிய நிர்வாகிகளை மத்திய அரசு நேரில் அழைத்து விளக்கம் கேட்டது. மேலும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் மார்க் ஸக்கர்பெர்க் மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்டாவின் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள், டீப் ஃபேக் காணொளிகள், சரிபார்க்கப்பட்ட மற்றும் முக்கியப் பிரபலங்களின் கணக்குகளுக்கான பாதுகாப்பு, அல்காரிதம் சார்ந்த பாரபட்சம் மற்றும் இந்தியச் சட்டங்களுக்கு இணங்க செயல்படுவது போன்ற விவகாரங்கள் குறித்து விளக்கம் கோரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், "பயனர்கள் பதிவேற்றும் தகவல்களை வெறுமனே சேமித்து வைக்கும் இடைநிலைத் தளமாக மெட்டா செயல்படவில்லை. அதன் அல்காரிதங்கள் எந்த உள்ளடக்கம் யாருக்கு செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. எனவே, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இடைநிலைத் தளங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை மெட்டா கோர முடியாது," என்ற நிலைப்பாட்டையும் மத்திய அரசு நிறுவனத்தின் உலகளாவிய நிர்வாகத்திடம் எடுத்துரைத்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் பணம் செலுத்தி வெளியிடப்பட்ட விளம்பரங்களில் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் ஜூலை 23-ஆம் தேதியிட்ட ஃபேஸ்புக் பதிவு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி வடிகட்டும் அமைப்பின் தவறால் நீக்கப்பட்டதாக பின்னர் மெட்டா விளக்கம் அளித்து, பதிவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததுடன் மன்னிப்பும் கேட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன்,
"மெட்டாவின் அமைப்புகள் ஏன் தோல்வியடைந்தன, அவை எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, இந்தியாவின் சட்டத் தேவைகளை அவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டு அதற்கு இணங்க செயல்படப் போகிறார்கள் என்பதைக் கண்டறிவதே அரசின் நோக்கம்." என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த விளக்கம் போதுமானதல்ல என்று மத்திய அரசு கருதியதாகவும், இது வெறும் தொழில்நுட்பப் பிரச்சினை மட்டுமல்ல; தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குடன் தொடர்புடைய முக்கியமான விவகாரம் என்றும் வலியுறுத்தியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

