EV சார்ஜிங்: 'இந்தியாவில் 45% வீடுகளுக்கு பாதுகாப்பான மின்சார மேம்பாடு அவசியம்' - அறிக்கையில் தகவல்
இந்த ஆய்வு, இந்தியாவின் முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அமைந்துள்ள 80,000-க்கும் அதிகமான குடியிருப்பு மின் வாகன சார்ஜர் நிறுவல்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான EV சார்ஜிங்கிற்காக நாட்டின் சுமார் 45% வீடுகளில் மின்சார அமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியில், EV சார்ஜிங் மற்றும் எரிசக்தி மேலாண்மை தளமான kazam மற்றும் Alliance for an Energy Efficient Economy (AEEE) இணைந்து வெளியிட்ட “The Net-Zero Transition Starts at Home: Enabling EV-Ready Residences in India” என்ற அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வு, இந்தியாவின் முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அமைந்துள்ள 80,000-க்கும் அதிகமான குடியிருப்பு மின் வாகன சார்ஜர் நிறுவல்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், முறைசாரா குடியிருப்புகள் மற்றும் வாடகை வீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான குடியிருப்புகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
“இந்திய வீடுகளில் கிட்டத்தட்ட 45 சதவீதம் பாதுகாப்பாக EV-களை சார்ஜ் செய்ய தேவையான மின்சார மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ற EV சார்ஜிங்கை உறுதி செய்ய ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்ச மின்சார தரநிலைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவின் மின்சார வாகனப் புரட்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருந்தாலும், வீட்டு சார்ஜிங் வசதிகளுக்கான அணுகல் இன்னும் சமமாக இல்லை, என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தற்போது EV வாங்க விரும்புவோரில் 55 சதவீதம் பேருக்கு மட்டுமே வீட்டு சார்ஜிங் வசதி கிடைக்கிறது.
மேலும், EV சார்ஜிங்கால் ஏற்படும் மின்சார நுகர்வு 2024-ஆம் ஆண்டில் தேசிய மின் தேவையின் 0.2 சதவீதமாக இருந்த நிலையில், 2035-ஆம் ஆண்டுக்குள் அது சுமார் 6 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார உள்கட்டமைப்பு குறைபாடுகள், குடியிருப்பு வசதிகளின் சவால்கள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் செலவினத் தடைகள் காரணமாக பல பயனர்கள் பொதுவான மின்சார சாக்கெட்டுகள், தற்காலிக நீட்டிப்பு கம்பிகள் மற்றும் நீண்ட நேர EV சார்ஜிங்கிற்காக வடிவமைக்கப்படாத பகிரப்பட்ட மின் இணைப்புகளை பயன்படுத்துகின்றனர்.
“இத்தகைய நடைமுறைகள் தீ விபத்து மற்றும் மின்சார பாதுகாப்பு அபாயங்களை உருவாக்குவதோடு, சார்ஜிங் நம்பகத்தன்மையைக் குறைத்து, சாதன சேதம் மற்றும் பேட்டரியின் ஆயுட்காலம் விரைவாக குறைவதற்கும் வழிவகுக்கலாம்,” என்று அறிக்கை எச்சரித்துள்ளது.
பாதுகாப்பான EV சார்ஜிங்கை உறுதி செய்வதற்காக, போதுமான அங்கீகரிக்கப்பட்ட மின் சுமை திறன், தனித்துவமான சார்ஜிங் மின்சுற்று, தரநிலைக்கு உட்பட்ட வயரிங் மற்றும் எர்த்திங் வசதிகள், பாதுகாப்பான சார்ஜர் அமைப்பு மற்றும் தீ பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுதல் ஆகியவை அவசியம், என அறிக்கை பரிந்துரைக்கிறது.
அதேபோல், சரியான திறன் கொண்ட மினி சர்க்யூட் பிரேக்கர்கள் (MCB), எர்த்-லீக்கேஜ் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் EV சார்ஜிங்கிற்கென தனி சான்றளிக்கப்பட்ட மின்சார மீட்டர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

