2047-க்குள் ‘இந்திய உயிரியல் பொருளாதாரத்தை 2.6 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு’ - நிதி ஆயோக் அறிக்கை
இந்த அறிக்கையின்படி, இலக்கை மையமாகக் கொண்ட தீவிரமான தேசிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால், இந்தியாவின் உயிரியல் பொருளாதாரம் 2035-க்குள் 691 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2047-க்குள் 2.6 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும் வளர முடியும்
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் உயிரியல் பொருளாதாரத்தை (BioEconomy) 2.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு உயர்த்தும் இலக்கை அடைய, சிதறிக்கிடக்கும் முயற்சிகளிலிருந்து ஒருங்கிணைந்த தேசிய செயலாக்க அமைப்புக்கு நாடு மாற வேண்டும் என்று நிதி ஆயோக் (NITI Aayog) வலியுறுத்தியுள்ளது.
'2035-க்குள் இந்தியாவை முன்னணி உயிரியல் பொருளாதார வல்லரசாக உருவாக்குவதற்கான சாலைவரைபடம்' (Roadmap for Building India as a Leading BioEconomy Powerhouse by 2035) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புதுப்பிக்கத்தக்க உயிரியல் வளங்களைப் பயன்படுத்தி உணவு, ஆற்றல் மற்றும் உற்பத்திப் பொருட்களை உருவாக்கும் பொருளாதார மாதிரியே உயிரியல் பொருளாதாரம் என விளக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இலக்கை மையமாகக் கொண்ட தீவிரமான தேசிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால், இந்தியாவின் உயிரியல் பொருளாதாரம் 2035-க்குள் 691 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2047-க்குள் 2.6 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும் வளர முடியும். இதன் மூலம், 3 கோடிக்கும் அதிகமான உயர்மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், உலகின் முதல் மூன்று உயிரித் தொழில்நுட்ப வல்லரசுகளில் இந்தியா இடம்பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக முன்னுரிமைத் துறைகளில் தேசிய அளவிலான BioMissions திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், பல்வேறு அமைச்சகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை உறுதி செய்ய அதிகாரம் பெற்ற குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது.
மேலும், பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியபடி அனுமதி நடைமுறைகளை விரைவுபடுத்தும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள், உயிரியல் அறிவியல் துறையில் தலைமைத்துவம் மற்றும் திறமையான மனிதவளத்தை உருவாக்கும் நடவடிக்கைகள், புதுமை, தொழில்நுட்ப விரிவாக்கம், உள்கட்டமைப்பு மற்றும் உயிரியல் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.50,000 கோடி மதிப்பிலான BioEconomy Growth Fund அமைப்பதும் அவசியம், என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) நடவடிக்கைகளிலிருந்து செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவு கொண்ட உயிரித் தொழில்நுட்பம் மற்றும் அடுத்த தலைமுறை உயிரியல் உற்பத்தி (Biomanufacturing) நோக்கி இந்தியா முன்னேற வேண்டும் என்றும், இதற்காக அமைச்சகங்கள், துறைகள், கல்வி நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இடையே ஆழமான ஒத்துழைப்பு தேவை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த அறிக்கையில்,
"இந்தியா ஆரம்பத்திலேயே உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால், இந்த மாற்றத்தில் வெறும் பங்கேற்பாளராக மட்டுமல்லாமல், உயிரியல் யுகத்தின் உலகளாவிய விதிமுறைகள், சந்தைகள் மற்றும் தளங்களை வடிவமைக்கும் நாடாகவும் உருவெடுக்க முடியும். இந்த மாற்றம் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திய மாற்றத்துக்கு இணையானதோ அல்லது அதைவிடப் பெரியதோ ஆக இருக்கக்கூடும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா போன்ற நாடுகள் உயிரித் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக தீவிரமான நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டு வருகின்றன என்றும், அடுத்த கட்ட உயிரித் தொழில்நுட்ப வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், கணினி உயிரியல் மற்றும் உயிரியல் உணரிகள் (Biosensors) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் அமையும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் கோபர்தன் தாஸ்,
"இந்தியாவின் உயிரியல் பொருளாதாரம் தற்போது வேகமான மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனை பலரும் 1970-களின் கணினிப் புரட்சிக்கு ஒப்பான உயிரியல் துறையின் பொற்காலம் என்று அழைக்கின்றனர்," என்றார்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் உயிரியல் பொருளாதாரம் 2014-இல் இருந்த 10 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2025-இல் 195.3 பில்லியன் அமெரிக்க டாலராக, அதாவது, 16 மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், தற்போது அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4.8 சதவீத பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

