500 நாய்களுக்கு உணவளித்து திருமணத்தைக் கொண்டாடிய ஒடிசா தம்பதி!
ஒடிசாவின் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த யுரேகா ஆப்தா, ஜோனா வாங் தம்பதி தங்கள் திருமணத்தைக் கோயிலில் எளிமையாக முடித்துக்கொண்டு 500 நாய்களின் பசியைப் போக்கியுள்ளனர்.
திருமணங்கள் என்றாலே பிரம்மாண்டம்தான். குறைந்த பட்ஜெட்டில் நடைபெறும் திருமணங்களுக்குக்கூட இது பொருந்தும். உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக மணமக்களை வாழ்த்துவார்கள். ஒரே கொண்டாட்டமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவரவர் வயதினரோடு ஒன்றுகூடி உற்சாகமாக நேரம் செலவிடுவார்கள். காலம் காலமாக இப்படித்தான் நடந்து வருகிறது.
இந்த பாரம்பரிய முறைக்கு முட்டுக்கட்டையாக வந்தது கொரோனா பெருந்தொற்று. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் அதிகம் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருமணங்கள் நடைபெறும் முறை மாறியுள்ளது. எளிய முறையில் நடைபெறுகின்றன. மணமக்களே முகக்கவசம் அணிந்துகொண்டு, இடைவெளி விட்டு அமர்ந்துகொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
ஒடிசாவின் புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்த யுரேகா ஆப்தா, ஜோனா வாங் தம்பதியும் தங்களது திருமணத்தை வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளனர். இவர்கள் 500 நாய்களுக்கு உணவளித்துள்ளனர்.
இவர்கள் தங்கள் திருமணத்தைக் கொண்டாடும் வகையில் Animal Welfare Trust Ekamra என்கிற விலங்குகள் பராமரிப்புக் குழுவுடன் இணைந்து 500 நாய்களுக்கு உணவளித்துள்ளனர். அதுமட்டுமின்றி விலங்குகள் காப்பகம் ஒன்றிற்கும் இவர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர்.
“எங்கள் திருமணம் செப்டம்பர் மாதம் 25ம் தேதி ஏற்பாடானது. சமூக நலனிற்காக ஏதாது செய்ய விரும்பினோம். Animal Welfare Trust Ekamra மற்றும் அதன் நிறுவனர் பூர்வி உடன் இணைந்து புவனேஸ்வர் பகுதியில் உள்ள 500 விலங்குகளுக்கு உணவளிக்கத் திட்டமிட்டோம். அவரது காப்பகத்திற்காக ஒரு சிறு தொகையையும் உணவு, மருந்துகள் போன்றவற்றையும் கொடுத்தோம்,” என்று ஜோனா ஏஎன்ஐ இடம் தெரிவித்தார்.
இந்தத் தம்பதி எளிதாக கோயிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு நகர் முழுவதும் உள்ள நாய்களுக்கு உணவளித்துள்ளனர்.
“இந்த ஆண்டு தொடக்கத்தில் விபத்தில் அடிபட்ட ஒரு நாயை மீட்டோம். அப்போதுதான் விலங்குகள் தங்குமிடத்திற்கு முதல் முறையாக சென்றோம். அங்கே காயம் பட்ட விலங்குகளின் நிலையைப் பார்த்தபோது வருத்தமாக இருந்தது. அப்போதுதான் விலங்குகளுக்கு உதவவேண்டும் என்று தீர்மானித்தோம்,” என்று யுரேகா ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் தெரிவித்தார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது உணவின்றி தவிக்கும் விலங்குகளுக்கு இந்தத் தம்பதி உதவியுள்ளனர். அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் இவர்கள் இருவரும் வீட்டில் உணவு சமைத்து நாய்களுக்கு கொடுத்தார்கள்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு, தங்குமிடம் போன்றவை அவசியம். இவர்களைப் போன்ற நல்லுள்ளங்கள் இவற்றுடன் அன்பையும் சேர்த்து ஊட்டுவது நெகிழ்ச்சியான செயல்.
கட்டுரை: THINK CHANGE INDIA