சட்ட சிக்கல்களுக்கு மத்தியில், சம்பள புகார், டீலர்கள் முறையீடுகளால் தடுமாறும் 'Okinawa Autotech'
ஃபேம் இந்தியா திட்டத்தின் நெறிமுறைகளை மீறியதற்காக நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டு வரும் ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம், பிப்ரவரி மாதம் முதல் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இரு சக்கர மின் வாகன தயாரிப்பு நிறுவனம் 'ஒகினவா ஆட்டோடெக்' (Okinawa Autotech) எதிர்கொண்டு வரும் நிதி மற்றும் செயல்முறை சவால்களுக்கு நடுவே அதன் பிரச்சனைகளை தீவிரமாக்கும் வகையில் முன்னாள் ஊழியர்கள் சம்பள பாக்கி மற்றும் தவறான டெலிவரி தொடர்பான விநியோகிஸ்தர்கள் முறையீடுகள் அதிகரித்துள்ளன.
ஒகினவா ஊழியர்களில் ஒருவரான பிரீத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மூன்று மாதங்களுக்கான சம்பளம் வரவில்லை, என்கிறார். பிப்ரவரி மாதம் சம்பளம் டெபாசிட் செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பாக நிறுவனம் எந்த தகவலும் அளிக்கவில்லை, என்கிறார்.

மாதந்தோறும் 7ம் தேதி சம்பளம் வரும். ஆனால், கடந்த ஆண்டு, நவம்பர் சம்பளம் டிசம்பரில் வந்த பிறகு இது நின்றது. அப்போது முதல் பிரச்சனை ஆரம்பம் என்று யுவர்ஸ்டோரியிடம் பிரீத்தி கூறினார்.
பிப்ரவரி மாதம் சம்பளம் பற்றி அறிய மனித வள மேம்பாட்டுத்துறையை தொடர்பு கொண்டு போது இ-மெயில்களுக்கு பதில் இல்லை. மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் ஏப்ரலில் அவர் பதவி விலகினார்.
“இன்னமும் எனக்கு, நிலுவைத்தொகை மற்றும் முழு செட்டில்மண்ட் கிடைக்கவில்லை," என்கிறார்.
யுவர்ஸ்டோரியிடம் பேசிய பல முன்னாள் நடுநிலை நிர்வாகிகள், பணப் பிரச்சனை காரணமாக பல மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை, எனக் கூறினர். ஒரு முன்னாள் ஊழியர் கடந்த நவம்பர் மாத முழு சம்பளம் இன்னும் அளிக்கப்படவில்லை, என்கிறார். மற்ற இரண்டு ஊழியர்கள் கடந்த 3 மாத சம்பளம் வரவில்லை, என்கின்றனர்.
பிரீத்தி சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றாலும், இன்னொரு ஊழியர் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு போட உள்ளார். இந்த பிரச்சனைகள் தவிர, டீலர்கள் தரப்பிலும் பிரச்சனை உள்ளது. சில டீலர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை, என முன்னாள் டீலர் ஒருவர் கூறினார்.
“டீலர்களுக்கு நிறுவனம் பழுதான வாகனங்களை அனுப்பியது. அவற்றை சரி செய்து விற்க பாகங்கள் கேட்டால், கையிருப்பு இல்லை, என பதில் வந்ததாக," டீலர் ஒருவர் கூறினார்.
ஒரு சில வாகனங்கள் திராட்டில் அல்லது ஆக்சிலேட்டர் இல்லாமல் வந்ததாக கூறுகிறார். டீலர்கள் சில நேரங்களில் தாங்களே பாகங்களை தருவித்து பயன்படுத்தியுள்ளனர், என்கிறார்.
“எங்கள் வாடிக்கையாளர் ஒருவரின் ஒகினவா ஸ்கூட்டர் வீட்டில் தீப்பிடித்தது,” என்கிறார்.
பணத்தை திருப்பி கேட்கும் அல்லது தவறான வாகனங்களை விற்பனை செய்ததாக முறையிடும் ஆவேசமான வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக டீலர் உரிமையாளர் கூறுகிறார்.
இதன் விளைவாக, அவர் டிசம்பர் மாதம் டீலர்ஷிப்பில் இருந்து விலகினார். ஒகினவாவில் டீலர்கள் எதிர்கொள்ளும் நிலை கவலை அளிக்கிறது, என்கிறார். இந்த புகார்கள் தொடர்பான யுவர்ஸ்டோரி கேள்விகளுக்கு ஒகினவா பதில் அளிக்கவில்லை. ஒகினவா நிறுவனம் 2015ல், ஜீதேதந்தர் சர்மா மற்றும் ரூபால் சர்மாவால் துவங்கப்பட்டது.

FAME பிரச்சனைகள்
இந்திய அரசு, மின்வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மின் போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம் (EMPS) மற்றும் மின் வாகன வேகமான ஏற்பு மற்றும் தயாரிப்பு (FAME) திட்டம் மூலம் மானியம் அளிக்கிறது. இந்த மானியங்கள் மின்வாகன நிறுவனங்கள் எரிபொருள் வாகனங்கள் போட்டியை சமாளிக்க உதவுகின்றன.
ஒகினவா முதலில் ஃபேம் திட்டத்தில் தகுதி பெற்றிருந்தது. ஆனால், அண்மையில் நடைபெற்ற விசாரணையில் நிறுவனம், ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் வேறு சில நிறுவனங்கள் ஒரு சில பாகங்களை இறக்குமதி செய்வது தெரிய வந்தது. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விலை குறைந்த இறக்குமதியை கட்டுப்படுத்த அரசு விதித்த தகுதிகளில் இதுவும் ஒன்று.
இந்த நிறுவனங்கள் நெறிமுறைகளை மீறியதால் அரசு ரூ.469 கோடி மானியத்தை திரும்பி செலுத்த நோட்டீஸ் அனுப்பியது. ஒரு சில நிறுவனங்கள் ஓரளவு தொகையை திரும்பி செலுத்திய நிலையில், குருகிராமைச் சேர்ந்த ஒகினவா, ஹிரோ எலெக்ட்ரிக், பென்லிங் இந்தியா உள்ளிட்டவை இதை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
போதிய நிதி இல்லாததால், நிறுவனம் உற்பத்தியை தொடர முடியவில்லை என்றும், எனவே ரொக்க வரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தனது மனுவில் தெரிவித்துள்ளது.
எனினும், மானிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரூ.116.84 கோடியை நிறுவனம் திரும்ப செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, இதன் துணை நிறுவனம் ஒகினவா ஸ்கூட்டர்ஸ், மே 9ம் தேதி 2.04 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. இதன் சந்தை மதிப்பீடு 97.9 மில்லியன் டாலர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக Tracxn தெரிவிக்கிறது.
அதிகரிக்கும் பிரச்சனைகள்
சட்டப் பிரச்சனைகள் இத்துடன் முடியவில்லை. 2023 டிசம்பர் மாதம், டயர் நிறுவனம் ரேல்சான் இந்தியா, ஒகினவா ஸ்கூட்டர்கள் துணை நிறுவனம் ஒகினவா ஸ்கூட்டர்ஸ் அண்ட் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு எதிராக, பண பரிவர்த்தனை அளிக்கப்படாததை எதிர்த்து, அவர்கள் மீது திவால் கோரிக்கை மனுவை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்திடம் தாக்கல் செய்துள்ளது.
இந்த திவால் கோரிக்கை ஏற்கப்பட்டால், ஒகினவாவின் வர்த்தக செயல்பாடுகள், ரிசல்யூஷன் அதிகாரிகள் வசம் வந்துவிடும் மற்றும் இயக்குனர் குழு செயலற்று போகும் என்கிறார் லீகஸி குரோத் நிறுவனர், நிர்வாக பாட்னர் சூரஜ் மாலிக். இந்த வழக்கு, அடுத்த 29ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பாய இணையதளம் தெரிவிக்கிறது.
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி , தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

