PhonePe-யின் புதிய தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக ஸ்ரிஜோன் பிஸ்வாஸ் நியமனம்!
ஸ்ரிஜோன் பிஸ்வாஸ் பல ஆண்டுகளாக போன்பேயில் பணியாற்றி வருகிறார். நிறுவனத்தின் பல்வேறு பொறியியல் அணிகளை வழிநடத்தியதுடன், கோடிக்கணக்கான பயனர்களுக்கு சேவை வழங்கும் வகையில் போன்பேயின் தொழில்நுட்ப கட்டமைப்பை விரிவுபடுத்துவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
PhonePe தனது புதிய தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) ஸ்ரிஜோன் பிஸ்வாஸை நியமித்துள்ளது. புதிய பொறுப்பில், அவர் நிறுவனத்தின் முழு பொறியியல் அமைப்பை வழிநடத்துவார்.
ஸ்ரிஜோன் பிஸ்வாஸ் பல ஆண்டுகளாக போன்பே-யில் பணியாற்றி வருகிறார். நிறுவனத்தின் பல்வேறு பொறியியல் அணிகளை வழிநடத்தியதுடன், கோடிக்கணக்கான பயனர்களுக்கு சேவை வழங்கும் வகையில் போன்பேயின் தொழில்நுட்ப கட்டமைப்பை விரிவுபடுத்துவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். புதிய பொறுப்பிலும் அவர், போன்பே இணை நிறுவனர் ராகுல் சாரிக்கு நேரடியாக அறிக்கை அளிப்பார்.
இந்த நியமனம் குறித்து ராகுல் சாரி கூறுகையில்,
“போன்பே தொடர்ந்து தனது சேவைகளையும் செயல்பாடுகளையும் விரிவுபடுத்தி வரும் நிலையில், தொழில்நுட்பத் தலைமையை மேலும் வலுப்படுத்துவது இயல்பான அடுத்த கட்டமாகும். ஸ்ரிஜோனின் நியமனம் மூலம் பொறியியல் திறன்களில் தொடர்ந்து முதலீடு செய்வதோடு, டிஜிட்டல் இந்தியாவின் எதிர்காலத்தை இயக்கும் தொழில்நுட்ப தளங்களை உருவாக்கும் எங்கள் முயற்சியும் மேலும் வலுப்பெறும்,” என்றார்.
நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஒரு பகுதியாக, ராகுல் சாரி இனி தலைமை தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாக செயல்படுவார். இந்தப் பொறுப்பில், தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளுடன், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு, தரவு அறிவியல் மற்றும் பகுப்பாய்வு (Data Science & Analytics), வாடிக்கையாளர் அனுபவம் உள்ளிட்ட பிரிவுகளையும் அவர் தொடர்ந்து மேற்பார்வையிடுவார். மேலும், போன்பே குழுமத்தின் பல்வேறு முக்கிய தந்திரோபாய முயற்சிகளுக்கும் தலைமை வகிப்பார்.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஸ்ரிஜோன் பிஸ்வாஸ் கூறுகையில்,
“போன்பேயின் வளர்ச்சிப் பயணத்தில் மிக முக்கியமான இந்தக் கட்டத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பேற்பது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்யும் தயாரிப்புகளை உருவாக்கும் பணியில், புதுமை, நம்பகத்தன்மை மற்றும் மிகப்பெரிய அளவிலான தொழில்நுட்பத் திறனை மேலும் உயர்த்துவதற்காக எங்கள் திறமையான அணியுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளேன்,” என்றார்.
போன்பே வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிட்டல் நிதிச் சேவைகள் மற்றும் நுகர்வோர் வணிகங்களின் விரிவடைந்து வரும் சேவைகளை ஆதரிக்கும் வகையில், தொழில்நுட்பம், பொறியியல் திறமைகள் மற்றும் தொழில்நுட்ப தளங்களில் நிறுவனம் தொடர்ந்து அதிக முதலீடு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு அறிமுகமான போன்பே செயலி தற்போது 70 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களையும், 5 கோடிக்கும் மேற்பட்ட வணிகர்களை உள்ளடக்கிய டிஜிட்டல் கட்டண ஏற்றுக்கொள்ளும் வலையமைப்பையும் கொண்டுள்ளது. நுகர்வோர் மற்றும் வணிகர் கட்டண சேவைகள், கடன் மற்றும் காப்பீட்டு விநியோகம், பங்கு வர்த்தகம் மற்றும் பரஸ்பர நிதி தளம், இண்டஸ் ஆப் ஸ்டொர் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சேவைகளையும் நிறுவனம் வழங்கி வருகிறது.

