சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் மின்சார வாகனங்களுக்கான சிறப்பு மையம்: Raptee.HV தொடக்கம்
உலக மின்சார வாகன தினத்தையொட்டி, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் 3,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், Raptee.HV நிறுவனத்தின் ‘Raptee.HV Academy’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் முக்கிய முயற்சியாகும்.
மின்சார வாகனத் துறைக்குத் தேவையான அடுத்த தலைமுறை பொறியாளர்களை உருவாக்கும் வகையில், Raptee.HV நிறுவனம், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியுடன் இணைந்து மின்சார வாகன இயக்கத்துக்கான சிறப்பு மையத்தை (Centre of Excellence) தொடங்கியுள்ளது.
உலக மின்சார வாகன தினத்தையொட்டி தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தை, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் துணைத் தலைவர் எஸ். அபய் மேகநாதன் திறந்து வைத்தார். 3,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், Raptee.HV நிறுவனத்தின் ‘Raptee.HV Academy’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் முக்கிய முயற்சியாகும்.
இதற்கிடையே, மின்சார வாகனத் துறையில் நீண்டகால ஒத்துழைப்புக்காக Raptee.HV மற்றும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதன் மூலம் மாணவர்களுக்கு தொழில்துறைப் பயிற்சி, தொழிற்சாலை மற்றும் நிறுவனப் பார்வையிடல்கள், விருந்தினர் விரிவுரைகள், இன்டர்ன்ஷிப், தொழில்துறை சார்ந்த பாடங்கள் மற்றும் கூட்டு ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

ரூ.50 லட்சம் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தில் Raptee.HV T30 மின்சார மோட்டார்சைக்கிள், மின்சார வாகனங்களின் முக்கிய உதிரிபாகங்கள், டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பம் கொண்ட மோட்டார்சைக்கிள், ஊடாடும் கற்றல் சாதனங்கள் மற்றும் செய்முறைப் பயிற்சி, முன்மாதிரி உருவாக்கத்துக்கான வசதிகள் இடம்பெற்றுள்ளன.
மின் பொறியியல், மின்னணுவியல் மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் மாணவர்கள் பேட்டரி பேக், மின்சார மோட்டார், பவர் எலக்ட்ரானிக்ஸ், சார்ஜிங் கட்டமைப்பு, வாகனத் தகவல் தொடர்பு மற்றும் நிகழ்நேர வாகனக் கண்டறிதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் நேரடிப் பயிற்சி பெற இந்த மையம் உதவும்.
இதுகுறித்து Raptee.HV நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி தினேஷ் அர்ஜுன் கூறியதாவது,
“எதிர்கால மின்சாரப் போக்குவரத்தை உருவாக்கும் பொறியாளர்கள், ஒரு பேட்டரி செலில் இருந்து மென்பொருள் வரை முழு இயந்திரத்தையும் புரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும். அந்தப் புரிதலை வகுப்பறையில் மட்டும் உருவாக்க முடியாது. மாணவர்கள் நேரடியாகச் செயல்பட்டு, அமைப்புகளைப் பிரித்து பார்த்து, அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதை ஆராய்ந்து, பரிசோதித்து மீண்டும் உருவாக்க வேண்டும். அந்த அனுபவத்தை பொறியியல் கல்விக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியே இந்த HV Lab,” என்றார்.
இந்த ஆய்வகத்திலிருந்து வெளியேறும் சில மாணவர்களாவது அடுத்த தலைமுறைக்கான சிறந்த EV தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தைப் பெற்றால், எங்களது நோக்கம் நிறைவேறியதாகக் கருதுவோம், என்றும் அவர் தெரிவித்தார்.
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் துணைத் தலைவர் அபய் மேகநாதன் எஸ். கூறியதாவது,
”மின்சார வாகனத் தொழில்நுட்பம் போக்குவரத்தின் எதிர்காலத்தை மாற்றி வருகிறது. அதற்கேற்ப பொறியியல் கல்வியும் மாற வேண்டும். வகுப்பறையில் கற்றுக்கொள்ளும் அறிவுடன், நிஜ உலகத் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை நடைமுறைகளின் அனுபவமும் இணைந்தால்தான் மாணவர்கள் சிறப்பாகக் கற்றுக்கொள்ள முடியும்,” என்றார்.
“Raptee.HV உடனான இந்தக் கூட்டாண்மை மற்றும் மின்சார வாகன இயக்கத்துக்கான சிறப்பு மையத்தின் தொடக்கம் அந்த நோக்கில் முக்கியமான நடவடிக்கையாகும். இந்த மையத்தின் மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் மேம்பட்ட EV தொழில்நுட்பங்களில் பயிற்சி பெறுவதுடன், தொழில்துறை சார்ந்த திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளையும் பெறுவார்கள்,” என்றார்.
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவு, மருத்துவப் படமெடுத்தல், மெஷின் விஷன், MEMS மற்றும் மைக்ரோஃப்ளூயிடிக்ஸ், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தரவு அறிவியல், டிஜிட்டல் உற்பத்தி, IoT உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய மின்சார வாகன மையத்தின் மூலம் தொழில்துறை இணைப்புடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் மாணவர்களின் நடைமுறைத் திறன் மேலும் மேம்படும், என கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

