நகைக்கடனுக்கு புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? - ஆர்பிஐ திட்டம் | YS தமிழ் Explainer
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75% மட்டுமே கடன் வழங்கப்படும் என புதிய வரைவு விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைக்கடன் பெறுவதில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முன்மொழிந்துள்ளது. இதனால் நகைக்கடன் பெறுவதில் மக்களுக்கு உள்ள சாதகம், பாதகம் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தப் புதிய வரைவு விதிமுறைகள் வங்கிகள் மற்றும் வங்கி சாரா தனியார் நிதி நிறுவனங்களுக்கு பொருந்தும் என ஆர்பிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கக் நகைக்கடன் வழங்கும் நடைமுறைகளில் சமச்சீரான தன்மையைக் கொண்டுவரவும், கடன் பெறுபவர்களுக்கு அதன் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புதிய வரைவு விதிமுறைகள் தங்க நகைக்கடன் சார்ந்த நிபந்தனைகளை கடன் பெறுபவர்களுக்கு தெளிவாக விவரிக்கும் வகையில் இருக்கும் என உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் தங்க நகைக்கடன் பிரிவின் தேசிய மேலாளர் சாஹில் குமார் நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஆர்பிஐ முன்மொழிந்துள்ள புதிய வரைவு விதிமுறைகள் என்ன?
தங்க நகைக்கடன் தொகை மீதான வரம்பு, மதிப்பீடு மற்றும் வழங்க வேண்டிய ஆவணங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
நகை மதிப்பில் 75% வரை மட்டுமே கடன்: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75% மட்டுமே கடன் வழங்கப்படும் என புதிய வரைவு விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.1000 மதிப்புள்ள தங்க நகையை ஒருவர் அடமானம் வைத்தால் அவருக்கு அதில் 75% அதாவது ரூ.750 மட்டுமே கடன் தொகையாக வழங்கப்படும்.
கொரோனா தொற்று பாதிப்பின் போது தங்க நகைக்கடன் மீதான வரம்பு மொத்த நகை மதிப்பில் 80% சதவீதம் வரை கடன் வழங்கும் வகையில் மாற்றப்பட்டது. தற்போது அது மீண்டும் 75% என மாற்றப்பட்டுள்ளது.
தங்கம் தங்களுடையது என்பதற்கான ஆதாரம் அவசியம்: தங்க நகையை அடமான வைத்து கடன் பெற விரும்புவோர் அந்த நகை தங்களுடையது தான் என்பதற்கான ஆதாரத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் வாங்கிய போது கடையில் கொடுக்கப்பட ரசீதை சமர்ப்பிக்கலாம். அது இல்லாத பட்சத்தில் அது தங்களுடையது தான் கடன் பெறுபவர்கள் உறுதி சான்று அளிக்க வேண்டும். அப்போது தான் தங்க நகைக்கடன் பெற முடியும்.
தங்கத்தின் தரம் மீதான சான்று: தங்கத்தின் தரம், அதன் மொத்த எடை, கழிவுகள் (Wastage), புகைப்படம் மற்றும் தங்கத்தின் மதிப்பு ஆகியவற்றை விவரிக்கும் சான்றினை கடன் வழங்குபவர்கள் கடன் பெறுபவர்களுக்கு வழங்க வேண்டும்.
நகைக்கடன் குறித்த விவரம் மற்றும் நிபந்தனை, ஏல நடைமுறை குறித்த விவரம், நோட்டீஸ் பீரியட், கடனை திரும்ப செலுத்துவது தொடர்பான விவரம், கடன் தொடர்பான கட்டணங்கள் என அனைத்து விவரங்களும் நகைக்கடன் தொடர்பான ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் என புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
22+ காரட் உள்ள தங்க நகை, ஆபரணம் மற்றும் நாணயங்களுக்கு மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவர் 18 காரட் தங்கத்தை அடமானம் வைத்தாலும் அது 22 காரட் தங்கமாக தரத்தில் கருதப்படும்.
நகைக்கடனை வாடிக்கையாளர் திரும்ப செலுத்திய 7 நாட்களுக்குள் நகையை வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் வழங்க வேண்டும். அதில் தவறும் பட்சத்தில் நாளொன்றுக்கு ரூ.5,000 பணத்தை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவருக்கு வழங்க வேண்டும்.
தங்கம் மட்டுமல்லாது வெள்ளி நகை, ஆபரணம் மற்றும் நாணயம் மீதும் நகைக்கடன் பெற முடியும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெறும் வெள்ளியின் மினிமம் பியூரிட்டி 925 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
நகைக்கடன் பெறுகின்ற நபர் 1 கிலோ வரை தங்கத்தை அடமானம் வைக்க முடியும். 50 கிராம் வரை தங்க நாணயங்களை ஒருவர் அடமானம் வைக்க முடியும்.

அண்மையில் தான் நகைக்கடன் சார்ந்த புதிய விதிமுறைகளை ஆர்பிஐ அமலுக்கு கொண்டுவந்தது. இந்தச் சூழலில் இந்த புதிய வரைவு விதிமுறைகள் நகைக்கடன் பெறுவது சார்ந்து மேலும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, இந்த நகைக்கடன் விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகளும், கட்சிகளும் ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வருகின்றனர். இந்த விதிமுறைகளால் ஏழை, எளிய மக்கள் வெகுவாக பாதிப்பர் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
தமிழக அரசு எதிர்ப்பு:
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.
குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும். அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.
அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் ஆர்பிஐ கொண்டு வந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். ஆர்பிஐ உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Induja Raghunathan

