$234 மில்லியன் முதலீடு திரட்டி இந்தியாவின் மிகப்பெரிய ஏஐ யூனிகார்ன் நிறுவனம் ஆனது Sarvam Ai
இந்தியாவின் ஏஐ தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் ஆன Sarvam Ai, 234 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியதன் மூலம் 1.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டி யூனிகார்ன் ஆகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றாக சர்வம் ஏஐ உருவெடுத்துள்ளது.
Sarvam AI நிறுவனம் 234 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை சீரிஸ்-பி நிதிச்சுற்றின் முதல் கட்டத்தில் திரட்டியதன் மூலம் 1.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டி யூனிகார்ன் ஆகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றாக சர்வம் ஏஐ உருவெடுத்துள்ளது.
இந்த முதலீட்டுச் சுற்றுக்கு ஹெச்.சி.எல் டெக் தலைமை தாங்கியதுடன், உலகளாவிய துணிகர முதலீட்டு நிறுவனமான பெஸ்சிமீர் வென்ச்சர்ஸ் மற்றும் ஏற்கனவே முதலீடு செய்திருந்த கோஸ்லா வென்ச்சர்ஸ், Peak XV Partners ஆகிய நிறுவனங்களும் இதில் பங்கேற்றன.
உலகளவில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதற்கான போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியா தனது உள்நாட்டு ஏஐ திறன்களை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்தச் சூழலில், பெங்களூருவைச் சேர்ந்த சர்வம் ஏஐ நிறுவனத்தின் இந்த நிதி திரட்டல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2023ஆம் ஆண்டு விவேக் ராகவன் மற்றும் பிரத்யுஷ் குமார் ஆகியோரால் தொடங்கப்பட்ட சர்வம் ஏஐ, இந்திய மொழிகள் மற்றும் உள்ளூர் தேவைகளுக்கேற்ற பெரிய மொழி மாதிரிகள் (LLM), பேச்சுத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஏஐ உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
புதிய முதலீட்டை பயன்படுத்தி அடுத்த தலைமுறை முன்னணி ஏஐ மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கும், முகவர் அடிப்படையிலான ஏஐ (Agentic AI), குறியீட்டு அமைப்புகள் மற்றும் இணைய பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சியை விரிவுபடுத்துவதற்கும், கணினி உள்கட்டமைப்பை அதிகரிப்பதற்கும், நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளில் ஏஐ பயன்பாடுகளை வேகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முதலீட்டில் ஹெச்எல்டெக்கின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், ஒரு பெரிய தொழில்நுட்ப சேவை நிறுவனம் மற்றும் அடிப்படை ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்கும் தொடக்க நிறுவனம் இணைவது இந்திய ஏஐ துறையில் புதிய கட்டத்தை உருவாக்கும், என பார்க்கப்படுகிறது. இந்த கூட்டாண்மை மூலம் சர்வம் ஏஐ-யின் ஏஐ மாதிரிகள் மற்றும் உள்கட்டமைப்பை, ஹெச்எல்டெக்கின் பொறியியல் திறன்கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர் வலையமைப்புடன் இணைப்பதே நோக்கமாக உள்ளது.
சர்வம் ஏஐ இணை நிறுவனர் விவேக் ராகவன் கூறுகையில்,
“இந்தியாவின் தேவைகளை மிகப்பெரிய அளவில் பூர்த்தி செய்யும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதே நிறுவனத்தின் இலக்காகும். இந்த புதிய முதலீடு, இந்தியாவில் இருந்து உலகத் தரத்திலான ஏஐ திறன்களை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சிகளை விரைவுபடுத்துவதோடு, உள்ளூர் தேவைகளையும் பூர்த்தி செய்ய உதவும்,” என்றார்.
ஆங்கில மொழிக்காக மட்டுமே மேம்படுத்தப்பட்ட ஏஐ மாதிரிகளை உருவாக்கும் பல உலகளாவிய நிறுவனங்களிலிருந்து மாறுபட்டு, சர்வம் ஏஐ இந்திய மொழிகள் மற்றும் குரல் வழியிலான தொடர்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிராந்திய மொழிகளை பயன்படுத்தும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குரல் தொழில்நுட்பம் இயல்பான இடைமுகமாக இருப்பதால் இந்த அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது.
விவேக் ராகவன் முன்பு ஆதார் போன்ற இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு திட்டங்களில் பணியாற்றியவர். பிரத்யுஷ் குமார் இந்திய மொழி தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் AI4Bharat திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய ஏஐ ஆய்வாளராக அறியப்படுகிறார். இவர்களின் அனுபவம், பொது பயன்பாட்டுக்கான பெரிய டிஜிட்டல் அமைப்புகள் மற்றும் மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சியை ஒருங்கிணைக்கும் வகையில் சர்வம் ஏஐயை நிலைநிறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கான சாட்பாட்களை மட்டும் உருவாக்குவதை தாண்டி, அடிப்படை மாதிரிகள், பயிற்சி உள்கட்டமைப்பு, செயல்படுத்தும் தளங்கள் மற்றும் இறுதி பயனர் பயன்பாடுகள் என முழுமையான ஏஐ கட்டமைப்பை உருவாக்கும் “முழு அடுக்கு ஏஐ” அணுகுமுறையை சர்வம் ஏஐ பின்பற்றி வருகிறது.
தற்போது சர்வம் ஏஐயின் அமைப்புகள் தினமும் 20 லட்சத்திற்கும் அதிகமான உரையாடல்களைக் கையாளுகின்றன. மேலும், நாள்தோறும் 1 கோடிக்கும் அதிகமான ஏபிஐ அழைப்புகளை செயலாக்குகின்றன. மாதந்தோறும் 3.5 கோடிக்கும் அதிகமான பக்கங்கள் டிஜிட்டல் வடிவமாக மாற்றப்படுவதுடன், 5 லட்சம் மணி நேரத்திற்கும் அதிகமான ஒலிப்பதிவுகள் எழுத்து வடிவமாக மாற்றப்படுகின்றன.
இந்திய வேளாண்மை அமைச்சகத்திற்காக 1.7 கோடி விவசாயிகளிடமிருந்து தகவல்களை சேகரித்தது மற்றும் ஏஐ அடிப்படையிலான குரல் அமைப்புகள் மூலம் 4.5 கோடி காப்பீட்டு பாலிசிதாரர்களை சென்றடைந்தது போன்ற பெரிய அளவிலான திட்டங்களை நிறுவனம் தனது வணிக வளர்ச்சிக்கான சான்றுகளாகக் குறிப்பிட்டுள்ளது.

இறையாண்மை ஏஐ-க்கான உந்துதல்
இந்த முதலீடு, ’இறையாண்மை ஏஐ’ (sovereign AI) என்ற கருத்தின் மீதான அதிகரித்து வரும் கவனத்தையும் பிரதிபலிக்கிறது. அதாவது, முக்கியமான ஏஐ தொழில்நுட்பங்கள், தரவுகள் மற்றும் கணினி உள்கட்டமைப்புகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களை முழுமையாக சார்ந்து இருக்காமல், ஒரு நாடு தனது சொந்த திறன்களை உருவாக்கி கட்டுப்படுத்தும் திறனாக இது கருதப்படுகிறது.
இந்த நோக்கத்தை அடைய இந்திய அரசு ’இந்தியாஏஐ’ (IndiaAI) இயக்கத்தின் மூலம் உள்நாட்டு ஏஐ ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் புதுமைகளை ஊக்குவித்து வருகிறது. சொந்த அடிப்படை ஏஐ மாதிரிகளை உருவாக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களில் சர்வம் ஏஐ-யும் இடம்பெற்றுள்ளது.
உலகளவில் ஏஐ துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலீடுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. OpenAI, Google, Anthropic மற்றும் Meta போன்ற நிறுவனங்கள் அதிக திறன் கொண்ட ஏஐ மாதிரிகளை உருவாக்க பெருமளவில் முதலீடு செய்து வருகின்றன. சீனாவின் DeepSeek போன்ற நிறுவனங்களும் குறைந்த செலவில் சக்திவாய்ந்த ஏஐ அமைப்புகளை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து உலக ஏஐ போட்டியில் முக்கிய வீரர்களாக உருவெடுத்துள்ளன.
சர்வம் ஏஐ-யின் வளர்ச்சி மிகவும் வேகமாக அமைந்துள்ளது. 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே, Lightspeed Venture Partners உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து 41 மில்லியன் டாலரை திரட்டிய நிறுவனம், மூன்று ஆண்டுகளுக்குள் 1.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டி இந்தியாவின் யூனிகார்ன் நிறுவனங்களின் வரிசையில் இணைந்துள்ளது.

