நேட்டிவ்லீட் பவுண்டேஷன் இடமிருந்து ரூ.50 லட்சம் நிதி பெற்ற நெல்லை ஸ்டார்ட் அப் ‘RuralBasket'
தமிழகத்தைச்சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ரூரல்பாஸ்கெட், தனக்கு கிடைத்திருக்கும் நிதி மூலம் விரிவாக்கத்தில் ஈடுபட்டு 10,000 கிராப்புற தொழில்முனைவோரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஆன்லைன் மளிகைப் பொருட்கள் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரூரல்பாஸ்கெட் (RuralBasket) நேட்டிவ்லீட்ஸ் பவுண்டேஷனிடம் இருந்து ரூ.5 மில்லியன் அதாவது 50 லட்சம் நிதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிதி மூலம், நிறுவனம் 2022ல் தனது விற்பனை நிலையங்களை 22 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்த லாப்சினா டெக்னாலஜிஸ் (Lapsina Technologies Pvt. Ltd.) ரூரல் பாஸ்கெட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறது. விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டவர்களுக்கு உதவும் வகையில், பாரம்பரிய மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை அளித்து வருகிறது.
நிறுவனம், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து, தர நிர்ணயத்துடன், வாடிக்கையாளர்களுக்கு ரூரல்பாஸ்கெட் விற்பனை நிலையம் மற்றும் ஆன்லைன் மூலம் வழங்குகிறது. ரசாயனம், பூச்சிக்கொல்லி இல்லாத இயற்கையான பொருட்களை நிறுவனம் வழங்குகிறது.
பாரம்பரிய ஸ்னேக்ஸ், அழகு சாதன பொருட்கள், செக்கு எண்ணெய், இல்லப் பொருட்கள் ஆகியவற்றை கிராமப்புற கைவினைக் கலைஞர்களிடம் இருந்து தருவித்து வழங்கி வருகிறது.
RuralBasket தற்போது, நேட்டிவ்லீட் நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்றுள்ளதன் மூலம், தமிழகம் தழுவிய அளவில் விரிவாக்கத்திற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மேடவாக்கத்தில் தனது மூன்றாவது விற்பனை நிலையத்தை அண்மையில் துவக்கியது ரூரல்பாஸ்கெட். தமிழக அமைச்சர் மாபா.பாண்டியராஜன், திருமதி பாண்டியராஜன், இந்த விற்பனை நிலையத்தை துவக்கி வைத்தனர்.
“வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகளை நெருக்கமாகக் கொண்டு வரும் வகையில் 2017ல் ரூரல்பாஸ்கெட்டை துவக்கினோம். வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் இருந்தாலும், இயற்கையான மற்றும் நீடித்த தன்மை கொண்ட பொருட்கள் தொடர்பான விவரங்கள் சொற்பமாகவே இருக்கின்றன. இடைத்தரகர்கள் இல்லாத வகையில் பொருட்களை ஒரே இடத்தில் வழங்கும் நிறுவனமாக, அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வழி செய்யும் நிறுவனமாக விளங்க விரும்புகிறோம்,” என நிகழ்ச்சியில் பேசிய ரூரல்பாஸ்கெட் சி.இ.ஓ பழனி ராஜன் கூறினார்.
“வாங்கக் கூடிய விலையில் எங்கள் பொருட்களை வழங்குவதன் மூலம், மக்கள் இவற்றை ஏற்கச்செய்வதை அதிகரிக்க விரும்புகிறோம். நேட்டிவ்லீட் பவுண்டேஷன் நிதி எங்கள் விரிவாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நேட்டிவ்லீட் பவுண்டேஷன் நிதி எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. இரண்டாம் கட்ட நகரங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு இது ஊக்கம் அளிப்பதாக அமைகிறது. எங்கள் பொருட்கள் மற்றும் விநியோகத்தை அதிகரிக்க இது உதவும். நாங்கள் நெருங்கி செயல்பட்டு வரும் விவசாயிகளுக்கு இது உதவுவதோடு, எதிர்காலத்தில் 10,000 கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்க விரும்பும் இலக்கை அடைய உதவும்,” என்று நிறுவன சி.ஓ.ஓ. ஐசக் தேவராஜ் தெரிவித்தார்.
”தமிழகத்தில் ரூரல்பாஸ்கெட்டின் மூன்றாவது விற்பனை நிலையத்தை துவக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இளம் தொழில்முனைவோர் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுவது பெருமிதமாக உள்ளது,” என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
ரூரல்பாஸ்கெட் இணையதளம்: www.ruralbasket.com