இந்திய உணவு ஆர்டர்களில் மக்களின் விருப்பத்தேர்வு ’சிக்கன் பிரியாணி’
கடந்த ஆண்டு சொமாட்டோ செயலி வாயிலாக அதிகளவில் ஆர்டர் செய்து பயனர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள உணவு வகை சிக்கன் பிரியாணி என்று இந்நிறுவனத்தின் 2018-ம் ஆண்டின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலானோர் நினைப்பதுபோல் இந்தியர்கள் அலுவலகத்தில் இருக்கும் நேரத்தில் அதிகளவில் உணவு ஆர்டர் செய்வதில்லை. சொமாட்டோ பயனர்கள் அலுவகத்தைக் காட்டிலும் சராசரியாக ஐந்து மடங்கு அதிகமாக வீட்டிலிருந்தே உணவை ஆர்டர் செய்வதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
நாம் பணி நேரத்தில் உணவு டெலிவரி செயலி வாயிலாக ஆர்டர் செய்ய எத்தனை முறை க்ளிக் செய்கிறோம் என்பதைப் பார்க்கையில் ஆச்சரியமாக உள்ள நிலையில் கட்டணம் செலுத்துவதற்காக தேர்வு செய்ய விரும்பப்படும் முறையும் ஆச்சரியத்தையே அளிக்கிறது. சொமாட்டோ சேவையை பெறும் பெரும்பாலானவர்கள் பணமில்லா கட்டணமுறையையே பின்பற்றுகின்றனர். வெறும் 28 சதவீத பயனர்கள் மட்டுமே சிஓடி முறையை தேர்வு செய்கின்றனர்.
இந்தியாவில் உணவு ஆர்டர் செய்யப்படும் வழக்கத்தையும் கடந்த ஆண்டின் போக்கையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ள இந்தத் தகவல்களை eat-o-meter என்கிற விளக்கப்பட வடிவில் வெளியிட்டது உணவு தொழில்நுட்ப யூனிகார்ன் நிறுவனமான சொமாட்டோ. இந்தத் தகவல்களும் விளக்கப்படமும் 2018-ம் ஆண்டு இந்தியாவின் 118 நகரங்களில் சொமாட்டோ பயனர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகும்.
”ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு பயனர் செய்த ஆர்டர் மிகப்பெரிய ஆர்டர் மதிப்பு கொண்டதாகும். இந்த ஆர்டரின் மதிப்பு 1,84,760 ரூபாய். இது 415 பெட்டிகளில் டெலிவர் செய்யப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த மற்றொரு பயனர் ஆண்டு முழுவதும் மிக அதிக எண்ணிக்கையிலான (1,804) ஆர்டர்களைச் செய்துள்ளார்.
உணவு ஆர்டர் செய்யப்படும் போக்கு குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்கள் கவனிக்கப்பட்டது. அதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான ஆர்டர்கள் செய்யப்படும் பகுதியில் அஹமதாபாத் முன்னணியில் உள்ளது. முதல் நிலை நகரங்களைப் பொறுத்தவரை டெல்லி/என்சிஆர் முன்னணியில் உள்ளது. சொமாட்டோ சமீபத்தில் தனது செயல்பாடுகளைத் துவங்கிய பகுதியான விசாகப்பட்டினத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் போக்கினை அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதேபோல் நள்ளிரவில் ஆர்டர் செய்யும் பயனர்கள் மும்பையைக் காட்டிலும் இந்தூரில் அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது.
சொமாட்டோ நிறுவனம் 2018-ம் ஆண்டில் தனது சேவையை சிறப்பாக விரிவடையச் செய்து தற்போது 118 நகரங்களில் உணவுத் தொழில்நுட்பப் பிரிவில் செயல்பட்டு வருகிறது. ஜூலை மாதம் இந்நிறுவனம் பிக்கிபேக் லாயல்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி பயனர்கள் தங்களது ஆர்டர்களில் 176 மில்லியன் ரூபாய் சேமிக்க உதவியுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டமானது அக்ஷயபாத்ரா அறக்கட்டளைக்காக 22 லட்சம் பேருக்கான உணவின் மதிப்பிற்கு இணையான நிதித்தொகையை உயர்த்த உதவியது.
இந்த உணவுத் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஸ்னீக்பீக் (SneakPeek) பகுதி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் வீடியோ வாயிலாக ரெஸ்டாரண்டுகளைப் பார்வையிட உதவும் இந்தப் பகுதி கிட்டத்தட்ட 5,94,71,997 வினாடிகள் (சுமார் இரண்டாடுகள்) பார்வையிடப்பட்டுள்ளது. 7,00,000 உறுப்பினர்களைக் கொண்ட இந்நிறுவனத்தின் வெற்றிக்கு சொமோட்டோ கோல்ட் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகிறது.
எளிமையாகச் சொல்லவேண்டுமானால் இந்த உணவுத்தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் ஓராண்டாக வெற்றியை சந்தித்து வருகிறது. நகர்புற பயனர்கள், பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த பயனர்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் போக்கினை வரவேற்கின்றனர். இந்தப் பகுதி வளர்ச்சியடைந்து வரும் நிலையில் மக்களுக்கு சிக்கன் பிரியாணி மீதிருக்கும் ஆர்வம் மட்டும் எப்போதும் குறைவதில்லை என்பதே உண்மை.
ஆம், கடந்த ஆண்டில் அதிகளவில் ஆர்டர் செய்து பயனர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள உணவு வகை சிக்கன் பிரியாணிதான்.
ஆங்கில கட்டுரையாளர் : சுத்ரிஷ்னா கோஷ் | தமிழில் : ஸ்ரீவித்யா