நீலகிரி பெண் கலைஞர்கள் உருவாக்கும் ‘நிலா’ பொம்மைகள் - ‘பார்பி’க்கு டஃப் கொடுக்கும் The Good Doll நிறுவனம்!
100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் இந்த நிறுவனம், ஒவ்வொரு மாதமும் 4,000 முதல் 5,000 பொம்மைகளை இயற்கையான பொருட்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த 2017-ல் சுனிதா சுஹாஸும், சுஹாஸ் ராமேகவுடாவும் தங்களது மொத்த பொருட்களையும் ஐந்து பைகளில் அடைத்துக் கொண்டு, தங்களது கார்ப்பரேட் வாழ்க்கையை நிரந்தரமாகக் கைவிட்டு பெங்களூருவை விட்டு வெளியேறினர்.
நீண்ட நாட்களாக நீடித்த இந்த வாழ்வியல் கேள்விகள் அவர்களை நீலகிரிக்கு அழைத்துச் சென்றன. அங்கு அவர்கள் ‘தி குட் டால்’ (The Good Doll) என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் முதன்மைப் பொம்மையான ‘நிலா’வை உருவாக்கினர். இன்று, இந்த நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.
உள்ளூர் கைவினைத் திறன், கலாச்சாரம் மற்றும் நோக்கத்தில் வேரூன்றிய பார்பி பொம்மைக்கான இந்தியாவின் பதிலாக இதை உருவாக்க வேண்டும் என்று ‘நிலா’ நிறுவனர்கள் நம்புகிறார்கள்.
“எங்கள் வாழ்க்கையிலோ அல்லது பொருள் சார்ந்த விஷயங்களிலோ எது செய்தாலும், எங்களால் தற்காலிகமாக மட்டுமே மகிழ்ச்சியை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்தோம். அதன் பிறகு, நாங்கள் வேறு எதையாவது செய்ய வேண்டியிருந்தது: அடுத்த வார இறுதிப் பயணம், அடுத்த பதவி உயர்வு. எல்லாமே தற்காலிகமானதாக இருந்தது,” என்று சுஹாஸ் நினைவுகூர்கிறார்.
மேலும், தங்களது ஒன்பது வயது மகன் தங்களைப் போன்ற அதே தேடல் கட்டத்தையோ அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையையோ கடந்து செல்லக் கூடாது என்றும் அவர்கள் விரும்பினர். எனவே, பாடத்திட்டமோ அல்லது நிலையான பாடத்திட்ட அமைப்போ இல்லாமல் அவனை ‘அன்-ஸ்கூலிங்’ செய்தனர், அவன் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவனே முடிவு செய்ய அனுமதித்தனர்.

பயணமும் பெற்றதும்
2016-ஆம் ஆண்டில், இந்தத் தம்பதியினர் தங்களது மகனுடன் சேர்ந்து இரண்டு மாதங்களில், 14 இந்திய மாநிலங்கள் வழியாக 10,000 கிலோமீட்டர் சாலைப் பயணம் மேற்கொண்டனர். தங்களது நேரத்தின் 85% விழுக்காட்டை கிராமப்புற இந்தியாவில் செலவிட்டு, கிராமங்களில் உள்ள முன்பின் தெரியாத மனிதர்களுடன் வசித்தனர்.
“மகிழ்ச்சியாக இருக்க நமக்கு உண்மையில் அதிகப் பொருட்கள் தேவையில்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். அது, புறத்தை விட அகம் சார்ந்தது,” என்கிறார் சுஹாஸ்.
2017-ஆம் ஆண்டின் மத்தியில், அவர்கள் தங்களது வேலையைத் துறந்து, தமிழ்நாட்டின் குன்னூரில் உள்ள வனப்பகுதியில் இருந்த ஒரு சிறிய வீட்டுக்கு மாறினர். மூன்றாவது மாதத்தில், கோத்தகிரியின் புறநகர் பகுதியில், அருகிலுள்ள கிராமத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில், காடுகளால் சூழப்பட்ட ஒரு நிலத்தைக் கண்டறிந்தனர்.
சமூகக் கட்டமைப்புகளில் இருந்து விலகி, சுயசார்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால், மக்கள் வாழைப்பழம், கீரைகள், பூசணிக்காய் அல்லது முட்டைகளை எடுத்துக் கொண்டு அவர்களிடம் வந்தவண்ணம் இருந்தனர். அவர்கள் உணர்வதற்கு முன்பே, அந்த சமூகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டனர். மேலும் நிலத்தில் வேலை செய்ய அவர்களுக்கு உதவத் தொடங்கினர்.
இரண்டு ஆண்டுகளில், சுனிதா மற்றும் சுஹாஸுக்குள் ஏதோ ஒன்று மாறியது.
“நாங்கள் நல்ல உணவைச் சமைத்து சாப்பிட விரும்பினோம். பலாக்காயைப் பெற்று பலாக்காய் பிரியாணி செய்வோம். ஆனால் ஒரு கட்டத்தில், நல்ல உணவை முழுமையாக ரசிப்பதை நாங்கள் நிறுத்திக் கொண்டோம். ஏனென்றால் எங்களைச் சுற்றியுள்ள குடும்பங்கள் அதே வாய்ப்பைப் பெறாததை எங்களால் பார்க்க முடிந்தது.

சுனிதா மற்றும் சுஹாஸ்
நாங்கள் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருந்தோம், ஒரே மாதிரியான உணவை உண்டோம்; எங்கள் நாட்கள் ஒரே மாதிரியாகத் தெரிந்தன. ஆனால், நாங்கள் அந்த வாழ்க்கையை அனுபவித்த விதம் அவர்கள் அனுபவித்த விதத்தில் இருந்து மிகவும் மாறுபட்டதாக இருந்தது. எங்களுக்கு அது பேரின்பமாக இருந்தது. அவர்களுக்கு அது பல நேரங்களில் சுமையாக இருந்தது, என்று அவர் விவரிக்கிறார்.
வர்த்தகப் புரிதல்கள்
ஓர் உரையாடலின்போது, இவர்களுடன் நட்பான ஒரு மாவட்ட வன அதிகாரி, சமூக மேம்பாட்டிற்கான திறமைகள் அவர்களிடம் இருப்பதாகப் பரிந்துரைத்தார். இந்தத் தம்பதியினர் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டதே இல்லை. சமூக தொழில்முனைவோரைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. மேலும் தங்களை ஏதேனும் அடையாளங்களுக்குள் அடைத்துக் கொள்ள விரும்புபவர்களாகவும் இருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில், அவர்கள் தங்களது நோக்கத்தைக் கண்டறிந்தனர்.
இவர்கள் எதைச் செய்தாலும் அதில் வர்த்தகம் இருக்க வேண்டும் என்று இயல்பறிவு அவர்களுக்கு உணர்த்தியது, ஏனெனில், அந்தச் சமூகத்தினர் தயாராகும்போது இந்த முயற்சியை இறுதியில் அவர்களே நடத்த வேண்டும்.
கிராமங்களில் உள்ள ஆண்கள் ஏற்கெனவே தினசரி கூலி வேலைகளைப் பெற்றிருந்ததால், அவர்கள் பெண்களுடன் பணியாற்றத் தேர்ந்தெடுத்தனர்.
சுனிதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே புதிய கைவினைப் பொருட்களைக் கற்றுக்கொள்ளும் திறன் இருந்தது. பெரும்பாலும் யூடியூபில் இருந்தே கற்றுக்கொண்டு, அந்த கைவினைப் பொருளைப் பயன்படுத்தக்கூடிய, விற்கக்கூடிய அல்லது செயல்படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றினார். அந்தத் திறன்களை மற்றவர்களுக்குக் கற்றுத் தரும் ஆற்றலும் அவருக்கு இருந்தது.
2019-ஆம் ஆண்டில், அவர் தனது வரவேற்பறையில் ஐந்து பெண்களுக்கு Patchwork quilting கற்பிக்கத் தொடங்கினார். மேலும், அந்த மெத்தைகளை ஆன்லைனில் விற்றார். ஒரு வருடத்தில், அவர்கள் 30 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டினர்.
கொரோனா காலத்தில், மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, மெத்தை தைத்து எஞ்சிய துணிகளைப் பயன்படுத்தி மூன்று அடுக்கு முகக்கவசங்களைத் தயாரித்து, நாடு முழுவதும் விநியோகித்தனர். மக்கள் விரும்புவதைச் செய்வதற்கும், மக்களுக்கு தேவைப்படுவதைச் செய்வதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அவர்கள் புரிந்து கொண்டனர்.

‘இந்திய பார்பி’ உதயம்
கொரோனாவுக்கு பிறகு, அவர்கள் macramé, crochet மற்றும் எம்பிராய்டரி ஆகியவற்றைப் பரிசோதித்தனர். இந்த முயற்சி ஐந்து பெண்களில் இருந்து 21 பெண்களாக வளர்ந்ததால், அவர்கள் 2021-இல் ‘தி மேக்ரமே டெக்கோர் கிராஃப்ட் லிமிடெட்’ நிறுவனத்தைப் பதிவு செய்தனர், மேலும் ஒரு பெரிய அளவிலான தொழிலைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள NSRCEL மற்றும் அன்லிமிடெட் போன்ற ஸ்டார்ட்அப் காப்பகங்களில் சேர்ந்தனர்.
2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஜெரோதா இணை நிறுவனர் நித்தின் காமத்தின் முதலீட்டுப் பிரிவான ரெயின்மேட்டர் அவர்களின் முதல் முதலீட்டாளராக மாறியது. வழியில், புதிய தயாரிப்புகளை உருவாக்க முயலும் அதே வேளையில், தங்களது பயிற்சி அமைப்புகளையும் சமூக வலைப்பின்னல்களையும் வலுப்படுத்தினர்.
குழந்தைகளுக்கான மெத்தையை வடிவமைக்கும்போது, அதற்குத் துணையாக ஒரு தயாரிப்பை சுனிதா தேடினார். ஒரு காலத்தில் இந்தியப் பாட்டிகள் தூக்கி எறியப்பட்ட துணிகளில் இருந்து தைத்த கையால் செய்யப்பட்ட துணி பொம்மைகளால் ஈர்க்கப்பட்டு ஒரு துணி பொம்மையை உருவாக்கினார்.
அந்த மெத்தைக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கவில்லை. ஆனால் பொம்மை மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
“ஒரு மாதத்திற்குள் மக்கள் அதை ‘இந்திய பார்பி’ என்று அழைக்கத் தொடங்கினர். நாங்கள் செய்து கொண்டிருந்த மற்ற எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, பொம்மையில் மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்த முடிவு செய்தோம்.”
சுனிதா பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள பாப்-அப் சந்தைகளுக்குப் பயணம் செய்து, பெற்றோரிடம் நேரடியாகப் பேசி, வெவ்வேறு அளவுகள் மற்றும் வடிவமைப்புகளைப் பரிசோதித்தார்.
2023-ஆம் ஆண்டின் மத்தியில், அவர்களின் இந்திய பொம்மைகளுக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். தேவை அதிகரித்து, நிறுவனம் 21-லிருந்து 55 பெண் கைவினைஞர்களாக விரிவடைந்தது. ஆனால் வணிக ரீதியான வெற்றி இருந்தபோதிலும், ஏதோ ஒன்று விடுபட்டது.
பிறந்தது நிலா...
ஒன்றரை ஆண்டுகளாக, நிறுவனத்தின் செய்திகள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் வாழ்வாதாரங்களைச் சுற்றியே சுழன்றன. குழந்தைகளுக்கான கதையாடல் அதில் இல்லை.
“நாங்கள் யதேச்சையாகவே பொம்மை வணிகத்திற்கு வந்தோம், ஆனால், நாங்கள் கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களைக் கேட்டபோது, பொம்மைத் துறையில் இந்தியக் கலாச்சாரப் பிரதிநிதித்துவம் இல்லாத இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்பதை அறிந்தோம்.”
அப்படித்தான் நாங்கள் ஆரம்ப பொம்மையை வடிவமைத்தோம்: உடல் - நேர்மறை, அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது மற்றும் இந்தியராக இருப்பதைக் கொண்டாடுவது. அடுத்த திருப்புமுனை என்னவென்றால், ஒரு பிரபஞ்சத்தை நிலைநிறுத்த ஒரு கதாபாத்திரம் தேவை என்பதை நாங்கள் உணர்ந்தபோதுதான், என்கிறார் சுனிதா.
அந்தப் புரிதல்தான் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ‘நிலா’வின் பிறப்பிற்கு வழிவகுத்தது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீலக்குறிஞ்சி மலர்கள் பூக்கும்போது பிரகாசமான நீல நிறமாக மாறும் நீல மலைகளின் பெயரால் இக்கதாபாத்திரத்திற்குப் பெயரிடப்பட்டது. நிலாவின் பின்னணிக் கதை, குறிஞ்சி பூத்த ஆண்டில் பிறந்த ஒரு குழந்தையாக அவளைக் கற்பனை செய்தது.
இன்று, ‘நிலா’ நீலகிரியில் உள்ள ஒரு காட்டின் ஓரத்தில் உள்ள ‘நீலகும்பை’ என்ற கற்பனை கிராமத்தில், ஒரு பெரிய குடும்பம், பண்ணை மற்றும் காட்டு விலங்குகள் சூழ வாழ்கிறாள். காலப்போக்கில், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுடான தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் அவளது உலகம் உருவாகியுள்ளது.
“அவள் ஒரு கிராமத்துப் மலைப் பெண்ணாகத் தொடங்கினாள். ஆனால் அவள் பெங்களூரு அல்லது டெல்லியில் உள்ள ஒரு குழந்தையுடனும் தொடர்புபடுத்தக் கூடியவளாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். எனவே, அவளுடைய வீடு நீலகிரியில் வேரூன்றியுள்ளது, ஆனால் அதன் உட்புறங்கள் ஒரு நவீன இந்தியக் குடும்பத்தைப் பிரதிபலிக்கின்றன,” என்கிறார் சுஹாஸ்.
பிராண்டின் Raising Nilah கதையாடல் தொடர் மூலம், இந்தக் கதாபாத்திரம் உணர்வுகள், சலிப்பு மற்றும் ஆர்வம் போன்ற தலைப்புகளை ஆராய்கிறது.
மிகைப்படுத்தப்பட்ட புன்னகையைக் கொண்ட பெரும்பாலான பொம்மைகளைப் போலல்லாமல், ‘நிலா’ புள்ளி கண்கள், எளிமையான மூக்கு மற்றும் நுட்பமான புன்னகையைக் கொண்டுள்ளாள்.
“இது Waldorf கல்வியால் ஈர்க்கப்பட்டது. ஒரு குறைந்தபட்ச வெளிப்பாடு, அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாளா, சோகமாக இருக்கிறாளா அல்லது சிந்தனையில் இருக்கிறாளா என்பதை குழந்தைகள் தீர்மானிக்க அனுமதிக்கிறது. இது அவர்களின் கற்பனைக்கு இடத்தை அளிக்கிறது,” என்கிறார் சுஹாஸ்.
தயாரிக்கப்படுவது எப்படி?
ஊட்டியில் உள்ள அதன் முதன்மை அமைப்பில் சுமார் 40 கைவினைஞர்கள் பணியாற்றுகின்றனர். அதே நேரத்தில், நீலகிரி முழுவதும் உள்ள கிராமப்புற உற்பத்தியாளர் குழுக்களிலிருந்து மேலும் 60 பெண்கள் பாகங்களைத் தைக்கிறார்கள். வெவ்வேறு துண்டுகள் பின்னர் அசெம்பிள் செய்யப்பட்டு முடிக்கப்படுகின்றன.

“ஒவ்வொரு பொம்மையும் கையால் செய்யப்படுகிறது. தையல் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு பொம்மையும் முடிவதற்குள் ஐந்து அல்லது ஆறு பேரின் கைகளை கடந்து செல்கிறது,” என்கிறார் சுஹாஸ்.
பயன்படுத்தப்படும் துணியில் 60-70% பெரிய ஜவுளி நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட கழிவுகள், அதிகப்படியான அல்லது வெட்டப்பட்ட துணிகளிலிருந்து மறுசுழற்சி செய்யப்படுகிறது.
நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 4,000 முதல் 5,000 பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. ஒரு நிலா பொம்மையின் விலை ரூ.1,250 முதல் தொடங்குகிறது. மேலும் பாகங்களைப் பொறுத்து விலைகள் மாறுபடும்.
‘தி குட் டால்’ இப்போது மூன்று வழிகளில் விற்பனை செய்கிறது. நேரடியாக நுகர்வோருக்கு (D2C), சில்லறை விற்பனை மற்றும் B2B. இதில் D2C அதன் வருவாயில் பாதியை வகிக்கிறது. இதன் தயாரிப்புகள் பிளிங்கிட், அமேசான் மற்றும் ஃபர்ஸ்ட்க்ரை ஆகியவற்றிலும் கிடைக்கின்றன.
மேலும், விமான நிலையக் கடைகள், புத்தகக் கடைகள் மற்றும் லைஃப்ஸ்டைல் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட சுமார் 90 சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ஹில்டன், ஹையாட் மற்றும் தாஜ் போன்ற விருந்தோம்பல் பிராண்டுகளுடனான பார்ட்னர்ஷிப் மூலம் இதன் B2B வணிகமும் சீராக வளர்ந்துள்ளது, அவர்களுக்காக இது பிரத்யேகப் பொம்மைகள் மற்றும் கையால் செய்யப்பட்ட அழகிய பொருட்களை உருவாக்குகிறது.
ஒவ்வொரு கைவினைஞரும் தரம் குறித்து எந்த சமரசமும் செய்யாத சுனிதாவின் கீழ் இரண்டு மாத தீவிரப் பயிற்சிக்கு உட்படுகிறார்கள்.
“சில பெண்கள் 15 வருட தையல் அனுபவத்துடன் வருகிறார்கள். ஆனால் அவர்களால் ஒரு நேர்கோட்டைத் தைக்க முடிவதில்லை. முதல் இரண்டு வாரங்களுக்கு, அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அவர்கள் அதை விரக்தியாக உணர்கிறார்கள், ஆனால் இறுதியில் அது இயல்பான ஒன்றாக மாறுகிறது,” என்கிறார் சுஹாஸ்.
அவர்கள் தன்னம்பிக்கையைப் பெறும்போது, பலர் உற்பத்தியைத் தாண்டி தலைமை பொறுப்புகளுக்கு நகர்கிறார்கள். இன்று, அவர்களில் பலர் பயிற்சியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தரக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாகப் பணியாற்றுகிறார்கள்.
“பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் இப்போது தங்களது குடும்ப வருமானத்திற்குப் கணிசமாகப் பங்களிக்கிறார்கள். சிலர் தங்களது கணவர்களை விட அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். கூடுதல் வருமானம் பல பெண்களுக்கு ஸ்கூட்டர்களை வாங்கவும், வீடுகளைக் கட்டவும், தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பவும், குடும்பங்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும் உதவியுள்ளது.”
‘தி குட் டால்’ கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் வென்ச்சர் ஃபண்டிலிருந்து 1 கோடி ரூபாய் நிதி திரட்டியது, இது D2C நிலைக்கு மாற உதவியது. இந்த ஆண்டு, மேலும் 3 கோடி ரூபாய் முதலீட்டுடன், இது சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் விகிதத்தை எட்ட உதவும். இது டெக்னோசர்வ்வின் கிரீன்ஆர் ஆக்ஸிலரேட்டர் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது சரியான நிறுவன அமைப்பை உருவாக்கவும் முக்கிய தொழில்முறை திறமைகளை ஆட்சேர்ப்பு செய்யவும் நிறுவனர்களுக்கு உதவியது.
சமூகம் சார்ந்த பெண் கைவினைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும் என்றாலும், சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் வடிவமைப்பு போன்ற செயல்பாடுகளுக்கு ஒரு தொழில்முறை குழுவை உருவாக்குவது மிகவும் சவாலாக இருந்தது.
“ஆரம்பத்தில், சுனிதாவும் நானும் மட்டுமே ஒவ்வொரு வேலையையும் செய்து வந்தோம். இன்று எங்களிடம் 10 பேர் கொண்ட தொழில்முறை குழு உள்ளது, ஆனால் இளம் திறமையாளர்களை நீலகிரிக்கு வந்து ஒரு வாழ்க்கையை உருவாக்குமாறு ஒப்புக்கொள்ள வைப்பது இன்னும் கடினமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
சவாலும் சக்ஸஸும்
நிறுவனம் ஒரு புதிய சந்தையை உருவாக்கும் சவாலையும் எதிர்கொள்கிறது.
“நாங்கள் ஒரு பொம்மையை மட்டும் விற்கவில்லை. நாங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் குழந்தைப் பருவத்திற்கான மிகவும் சிந்தனைமிக்க அணுகுமுறையை விற்கிறோம். அதற்கு நுகர்வோருக்குக் கற்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, நாங்கள் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களைத் தாண்டி இந்திய நடுத்தர வர்க்கத்திற்காக உருவாக்க விரும்பினோம்.”
நிலாவை மக்கள் முதலில் ‘இந்திய பார்பி’ என்று அழைத்தபோது, சுஹாஸும் சுனிதாவும் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தனர். ஆனால் ஓர் உலகளாவிய பிராண்டாக பார்பியின் வெற்றியிலிருந்து தங்களால் கற்றுக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்தனர்.
நிலாவைத் தாண்டி, நிறுவனர்கள் தளவாடங்கள், ஆடைகள் மற்றும் DIY கிட்கள் முதல் அவளது உலகத்திற்கு உயிர் கொடுக்கும் கதைப் புத்தகங்கள் வரை ஒரு முழு உலகத்தையும் உருவாக்கி வருகிறார்கள்.
குழந்தைகள் நிலாவின் உலகத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு முன் அதனுடன் பழகக்கூடிய அனுபவ இடங்கள் மூலம் தனது சில்லறை விற்பனையை விரிவுபடுத்தவும் இது திட்டமிட்டுள்ளது.
“எங்கள் நோக்கம் எளிதானது. நாங்கள் உருவாக்கும் அனைத்தும் விளையாட்டை அதிகரிக்க வேண்டும், அந்த விளையாட்டு கற்பனையால் இயக்கப்பட வேண்டும்,” என்று அவர் முடிக்கிறார்.
மூலம்: ரேகா பாலகிருஷ்ணன், தமிழில்: ஜெய்
Edited by Induja Raghunathan

