ரூ.1,000 கோடி முதலீடு; 1,000 பேருக்கு தொழில்நுட்ப வேலைவாய்ப்பு - அரசுடன் ஹிட்டாச்சி நிறுவனம் ஓப்பந்தம்!
ஹிட்டாச்சி குழுமத்தின் இரண்டு முக்கிய விரிவாக்கத் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் நிறுவனங்கள் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத் திட்டங்கள் மூலம் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 1,000 பேருக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் ஏற்படும்.
ஹிட்டாச்சி குழுமத்தின் இரண்டு முக்கிய விரிவாக்கத் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் நிறுவனங்கள் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. இந்தத் திட்டங்கள் மூலம் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டு, 1,000 பேருக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, சென்னை போரூரில் செயல்பட்டு வரும் ஹிட்டாச்சி குழுமத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கும், செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்தும் திட்டத்திற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை, உலகின் முன்னணி ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனங்களாகும்.
இந்த முதலீட்டின் மூலம் செயற்கை நுண்ணறிவு, மின்சக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பொறியியல் துறைகளில் 1,000 உயர்தர தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் டாக்டர் மு. சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ச. விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வேணு நுகரி, தலைமை வளர்ச்சி அலுவலர் கார்த்திக் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஒப்பந்தம், தமிழ்நாட்டை உயர்தர தொழில்நுட்ப முதலீடுகளுக்கான முக்கிய மையமாக மேலும் வலுப்படுத்தும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

