புகையை ஊட்டமாக மாற்றும் வித்தை: ஜார்க்கண்ட் நிறுவனத்தின் ‘கார்பன்-டு-வேல்யூ’ புரட்சி!
கடந்த 2025-ஆம் ஆண்டில், ஓர் அனல் மின்ச் நிலையத்தில் வெற்றிகரமான ஒரு புரூஃப் ஆஃப் கான்செப்ட் சோதனையை இன்ட்ரின்சிக் நிறுவனம் நிறைவு செய்தது.
கனரகத் தொழிற்சாலைகளை பல ஆண்டுகளாக திணறடித்து வரும் ஒரு முக்கியக் கேள்விக்கு, ஜார்க்கண்டை சேர்ந்த ஒரு டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனம் தற்போது விடையளிக்கத் தொடங்கியுள்ளது.
தொழிற்சாலை புகைபோக்கிகளில் இருந்து வெளியேறும் கார்பன், பூமிக்கு அடியில் புதைக்கப்பட வேண்டிய ஒரு கழிவு அல்ல. மாறாக, அது சந்தையில் விற்கப்பட வேண்டிய ஒரு பிரீமியம் மூலப்பொருள் என்றால் நம்ப முடிகிறதா?
‘கார்பன்-டு-வேல்யூ’ பயோ-மேனுஃபேக்ச்சரிங் துறையில் தடம்பதித்துள்ள ‘இன்ட்ரின்சிக் ஃபவுண்ட்ரீஸ்’ (Intrinsic Foundries) நிறுவனம், ‘டிரான்ஸிஷன் விசி’ (Transition VC) தலைமையிலான சீட் ஃபண்டிங் சுற்றில் 12 கோடி ரூபாய் நிதியைத் திரட்டியுள்ளது. Microalgae அடிப்படையிலான தங்களது கார்பன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தை, சோதனை நிலையிலிருந்து வணிக ரீதியான பிரம்மாண்ட அளவுக்கு அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல இந்நிறுவனம் இந்த மூலதனத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
காலநிலை மாற்றத்திற்கான தீர்வுப் பிரிவில் இந்த நிதி முதலீடு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், கார்பன் உமிழ்வைக் குறைப்பது என்பது நிறுவனங்களின் லாபத்தைக் கரைக்கும் ஒரு சுமையாக இல்லாமல், அதுவே அவர்களுக்கான வருவாயை ஈட்டித் தரும் ஒரு புதிய வழியை உருவாக்கியுள்ளது.

பிரச்சினையும் தடையும்
2070-ஆம் ஆண்டிற்குள் இந்தியா நெட் ஜீரோ என்ற பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை எட்ட உறுதிபூண்டுள்ளது. இந்த நீண்ட பயணத்தில் மிகவும் கடினமான பகுதி, கார்பன் உமிழ்வை எளிதில் குறைக்க முடியாத எஃகு, சிமென்ட், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ரசாயனத் தொழில்கள் போன்ற கனரகத் துறைகளில்தான் உள்ளது. இத்தகைய தொழில்துறைகளுக்கு, கார்பன் கேப்ச்சர், பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) தொழில்நுட்பம் மட்டுமே தற்போதைய ஒரே யதார்த்தமான தீர்வாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இதில் எப்போதும் இருக்கும் ஒரு பெரிய முட்டுக்கட்டை பணம்தான்.
பாரம்பரிய கார்பன் கேப்ச்சர் முறைகள், உமிழ்வை வெறும் கழிவாக மட்டுமே கருதி, அதனைப் பல மில்லியன் டாலர்கள் செலவழித்து பூமிக்கு அடியில் சேமித்து வைக்கின்றன.
இந்த அணுகுமுறைக்கு அதிக மூலதனம் தேவைப்படுவதோடு, அதில் எவ்வித லாபமும் கிடைப்பதில்லை.
இதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் சமீபத்திய பட்ஜெட்டில், ஐந்து ஆண்டுகளில் கார்பன் கேப்ச்சர், பயன்பாடு மற்றும் சேமிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான ஆதரவு உறுதியாகியுள்ள போதிலும், இதற்கான பொருளாதாரக் கணக்குகள் இன்னும் சவாலாகவே நீடிக்கின்றன.
ஓர் உயிரியல் பாதை...
2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘இன்ட்ரின்சிக் ஃபவுண்ட்ரீஸ்’ நிறுவனம், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் உமிழ்வுகள், கழிவுகள் மற்றும் எச்சங்களை, தங்களது பிரத்யேக நுண்ணுயிர் பயோ-ரெஃபைனரி அமைப்புகள், Modular photobioreactors மற்றும் ஒருங்கிணைந்த ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் மூலம் பிரீமியம் பயோகெமிக்கல்களாக மாற்றுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் முற்றிலும் ஓர் உயிரியல் பாதையைப் பின்பற்றுகிறது. பிடிபட்ட கார்பனை, கட்டுப்படுத்தப்பட்ட தொட்டிகளுக்குள் வளர்க்கப்படும் மைக்ரோஆல்கேக்களுக்கு உணவாக இது வழங்குகிறது. இதனுடன் ஃபேக்டரி 4.0 எனப்படும் நவீன ஆட்டோமேஷன் தொழில்நுட்பமும் இணையாகச் செயல்படுகிறது. இந்த நுண்ணுயிரிகள் கார்பனைத் தங்களது உணவாக உட்கொண்டு, அதற்குப் பதிலாகப் பல்வேறு தொழில்துறைகளில் விற்கக்கூடிய மதிப்புமிக்க சேர்மங்களை உற்பத்தி செய்கின்றன.
இதன் மூலம், ஒரு எஃகு ஆலையோ அல்லது சுத்திகரிப்பு நிலையமோ, மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சப்ளிமென்ட்ஸ் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கான மூலப்பொருட்களை வழங்கும் ஒரு சப்ளையராக அசாத்திய மாற்றம் பெறுகிறது.
தற்போது இந்நிறுவனம் சிமெண்ட், எஃகு, மருந்துகள், நியூட்ராசூட்டிகல்ஸ் மற்றும் உணவு அமைப்புகள் சார்ந்த முன்னணி தொழில் குழுமங்களுடன் வணிக ரீதியான கூட்டுறவை ஏற்படுத்தி, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
தங்களது இந்த ஐடியா வெறும் காகிதத்தில் மட்டும் இருக்கும் ஒன்றல்ல என்பதை இந்த ஸ்டார்ட்அப் ஏற்கெனவே நிரூபித்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில், ஓர் அனல் மின்ச் நிலையத்தில் வெற்றிகரமான ஒரு புரூஃப் ஆஃப் கான்செப்ட் சோதனையை இன்ட்ரின்சிக் நிறுவனம் நிறைவு செய்தது. இதன் மூலம், நிலையான கார்பன் கேப்ச்சர் மற்றும் நம்பகமான செயல்பாட்டுத் திறனை அது வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டியுள்ளது.
தற்போது நுண்பாசிகளை தனது முதல் கவனமாகக் கொண்டுள்ள இந்நிறுவனம், ஈஸ்ட் அடிப்படையிலான அமைப்புகள் உட்படப் பிற நுண்ணுயிர் பயோ-ரெஃபைனரிகளையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
அடுத்த 12 முதல் 24 மாதங்களுக்குள், பல தொழில்துறை முன்னோடித் திட்டங்களை இயக்கவும், தங்களது முதலாவது ஒரு நாளைக்கு ஒரு டன் திறன் கொண்ட வணிக ரீதியான உற்பத்தி ஆலையைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இப்போது கிடைத்துள்ள புதிய மூலதனத்தின் ஒரு பகுதி, இந்தத் தொழில்துறை சோதனைகளைச் செயல்படுத்துவதற்கும், ஆராய்ச்சிகளை விரிவுபடுத்துவதற்கும், புதிய காப்புரிமைகளை தாக்கல் செய்வதற்கும் பயன்படுத்தப்படும். மேலும், உலகளாவிய சந்தை வளர்ச்சியை ஆதரிப்பதற்காக அமெரிக்காவில் தங்களது ஒரு புதிய பிரிவை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தனித்துவம் என்ன?
பிட்ஸ் பிலானி மற்றும் கார்னெல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரேயான்ஸ் ஜெயின் இந்த வாய்ப்பை மிகவும் வெளிப்படையாக விவரிக்கிறார்.
“கார்பன் என்பது ஒரு கழிவு அல்ல. அது மாற்றத்திற்காகக் காத்திருக்கும் ஒரு மாபெரும் வளம்,” என்கிறார் அவர்.
முதலீட்டாளர்களும் இதே கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பலவீனமான பொருளாதாரக் கணக்குகள் மற்றும் அதிக மூலதனச் செலவுகள் ஆகியவற்றை, வருவாயை ஈட்டித் தரும் இத்தகைய ஒரு புதிய வணிக மாதிரியால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த அசாத்திய முயற்சிக்குத் தேசிய அளவிலான அங்கீகாரமும் கிடைத்துள்ளது. IIOT இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட்'என்ற பெயரில் நுழைந்த இந்த நிறுவனம், பெங்களூருவை தளமாகக் கொண்டு இயங்கும் சி-கேம்ப் நடத்திய தேசிய பயோ தொழில்முனைவோர் போட்டி 2025 நிகழ்வில் சிறந்த வெற்றியாளர்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மைக்ரோஆல்கே என்பது தாவரங்களைப் போலவே கார்பன் டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியை உணவாகக் கொண்டு மிக வேகமாக வளரக்கூடிய நுணுக்கமான உயிரினங்களாகும். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை, கட்டுப்படுத்தப்பட்ட ஒரு போட்டோபயோரியாக்டருக்குள் செலுத்தப்படும் போது, அங்குள்ள பாசிகள் கார்பனை உறிஞ்சி அசுர வேகத்தில் பெருகுகின்றன.
பின்னர், அந்தப் பாசித் திரள் செயலாக்கப்பட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் மற்றும் நிறமிகள் போன்ற சேர்மங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இவைதான் ஏற்கெனவே சந்தையில் உள்ள ஊட்டச்சத்து சப்ளிமென்ட்ஸ், உணவுகள் மற்றும் தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஒட்டுமொத்த கடினமான வேலையையும் பாசிகளே செய்துவிடுவதால், பாரம்பரிய கார்பன் கேப்ச்சர் முறைகளில் தேவைப்படும் அதிக ஆற்றல் நுகர்வு மற்றும் செலவு மிகுந்த ரசாயன செயல்முறைகள் இந்த அமைப்பில் முற்றிலும் தவிர்க்கப்படுகின்றன.
இறுதித் தயாரிப்புகள் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும்போது, கார்பனைக் கைப்பற்றுவதற்கான ஒட்டுமொத்த செலவும், அதன் மூலம் கிடைக்கும் தயாரிப்புகளின் மதிப்பின் மூலமாகவே ஈடுகட்டப்பட்டுவிடுகிறது. இது சுற்றுச்சூழலுக்கான ஒரு பெரும் செலவினத்தை, லாபம் தரும் ஒரு சாத்தியமான வணிகப் பாதையாக மாற்றுகிறது.
இருப்பினும், இந்த அசாத்திய வாக்குறுதி பெரிய அளவிலான வணிக உற்பத்தியிலும் நீடிக்குமா என்பதுதான் தற்போதைய முக்கியக் கேள்வியாகும். ஒரு ஒற்றை புரூஃப் ஆஃப் கான்செப்ட் சோதனையிலிருந்து, தினசரி ஒரு டன் உற்பத்தி செய்யும் ஆலைக்கு மாறுவது, அதன் பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த தொழில்துறை உமிழ்வைக் கணிசமாகக் குறைக்கும் அளவிற்குப் பிரம்மாண்ட உற்பத்தியை எட்டுவது என்பது பல காலநிலை ஸ்டார்ட்அப்கள் தடுமாறிய ஒரு செங்குத்தான பாதையாகும்.
இருந்தபோதிலும், உலகளவில் நிலையான இயற்கை மூலப்பொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதும், கார்பன் கேப்ச்சர் தொழில்நுட்பங்களை நோக்கிப் பொது நிதி பாய்ந்து வருவதும் இந்த ஸ்டார்ட்அப்பிற்கு சாதகமான அம்சங்களாக உள்ளன.
அடுத்த இரண்டு ஆண்டுகள், இவர்களது முன்னோடித் திட்டங்கள் இதன் பொருளாதார வெற்றியை நிரூபிக்குமா அல்லது தகர்க்குமா என்பதைக் காட்டிவிடும். இதன் மூலம், தூய்மையான காற்றுக்காகத் தங்களது சொந்தச் செலவிலேயே வழியைக் கண்டறியும் இத்தகைய தொழிற்சாலைகள், ஆய்வகங்களில் இருந்து விடுபட்டு முதன்மைச் சந்தைக்குள் நுழைய முடியுமா என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.
Edited by Induja Raghunathan

