ஓசூரில் 2-வது உற்பத்தி ஆலை; 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு - மின்வாகன உற்பத்தி நிறுவனம் Ultraviolette அறிவிப்பு!
ஓசூரில் ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான Ultraviolette, தமிழ்நாட்டின் ஓசூரில் ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘BIGGA’ (Big Global Ambition) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உற்பத்தி ஆலை, இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையான உற்பத்தித் திறன் மற்றும் உள்கட்டமைப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. ஷூலாகிரி பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் இந்த ஆலையை அமைப்பதற்குத் தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும், என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆலையில் அல்ட்ராவயலெட் நிறுவனத்தின் Tesseract மின்சார ஸ்கூட்டர் உள்பட ஸ்போர்ட்ஸ், க்ராஸ் ஓவர், க்ரூய்சர், ஸ்ட்ரீட் மற்றும் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் வகையில் தொடங்கப்படும் இந்த ஆலையை, எதிர்காலத்தில் 5 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவுபடுத்த முடியும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து அல்ட்ராவயலெட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான நாராயண் சுப்ரமணியம் கூறுகையில்,
“எங்கள் நிறுவனத்தின் பயணத்தில் தற்போது முக்கியமான திருப்புமுனையை எட்டியுள்ளோம். கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் தயாரிப்பு புதுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எங்கள் நிறுவனத்துக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம். அடுத்தகட்டமாக, அந்த அடித்தளத்தை மேலும் விரிவுபடுத்துவதற்குத் தேவையான உற்பத்தி அளவை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
“கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள எங்களது தற்போதைய உற்பத்தி ஆலை தொடர்ந்து வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்ளும். அதனுடன் BIGGA ஆலையும் செயல்படுவதன் மூலம் இந்தியாவில் எங்களது நீண்டகால உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் தடத்தை மேலும் வலுப்படுத்த முடியும்,” என்றார்.
BIGGA ஆலை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற நவீன உற்பத்தி சூழலைக் கொண்டதாக உருவாக்கப்பட உள்ளது. மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், தானியங்கி உற்பத்தி அமைப்புகள் மற்றும் தரப் பொறியியல் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் உற்பத்தியை அதிக அளவில் மேற்கொள்வதுடன், தேவைக்கேற்ப உற்பத்தி முறைகளை விரைவாக மாற்றியமைக்கும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
உற்பத்தி நடவடிக்கைகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் வகையில் Manufacturing Execution System என்ற தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் உற்பத்திப் பொருட்களின் நிலை மற்றும் நகர்வை நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும். டிஜிட்டல் முறையிலான Lean Manufacturing மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் ஆலையில் இடம்பெறும்.
அல்ட்ராவயலெட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியுமான நிராஜ் ராஜ்மோகன் கூறுகையில்,
“BIGGA ஆலை எங்களது புதுமை திறனை மேலும் வலுப்படுத்துவதுடன், மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுப்பதற்கும் எங்களது பங்களிப்பை அதிகரிக்கும்,” என்றார்.
உலகளாவிய சந்தையில் போட்டியிடக்கூடிய இந்திய மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன்களை உருவாக்குவதே அல்ட்ராவயலெட்டின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்படும் உலகத் தரத்திலான மின்சார வாகனங்களை சர்வதேச சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதையும் நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது.
நாராயண் சுப்ரமணியம் மற்றும் நிராஜ் ராஜ்மோகன் ஆகியோரால் 2016-ல் தொடங்கப்பட்ட அல்ட்ராவயலெட் நிறுவனத்தில் Lingotto, TDK Ventures, Qualcomm Ventures, Zoho Corporation, TVS Motors மற்றும் Speciale Invest உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் தற்போது 19 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

