தடுப்பூசிகளை ட்ரோன் மூலம் வழங்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு டென்டர் அறிவிப்பு!
ட்ரோன் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு!
கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக மாநிலங்களுக்கு வழங்கப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தடுப்பூசி அனுப்பும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்த ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.
அதனொரு பகுதியாக நாட்டின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் தடுப்பூசி சென்றுசேரும் வகையில், ஒவ்வொரு கடைசி மைல் தூரப் பகுதிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வழங்க ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சியை எடுத்துள்ளது.
அதற்காக ட்ரோன் நிறுவனங்களுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
“இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஐ.ஐ.டி கான்பூருடன் இணைந்து வெற்றிகரமான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டது. அதன்படி, ஆளில்லா வான்வழி வாகனங்களை (யுஏவி) பயன்படுத்தி தடுப்பூசிகளை வழங்குவதற்கான நிலையான நெறிமுறையை உருவாக்கியுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.எம்.ஆர் சார்பாக, HLL இன்ஃப்ரா டெக் சர்வீசஸ் லிமிடெட் (கொள்முதல் ஆதரவு நிறுவனம்) ட்ரோன்களால் மருத்துவப் பொருட்கள் (தடுப்பூசிகள் / மருந்துகள்) வழங்குவதற்காக அனுபவம் வாய்ந்த இந்திய நிறுவனங்களிலிருந்து மத்திய பொது கொள்முதல் போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதில் விடுக்கப்பட்டுள்ள டெண்டர் அளவுகோல்களின்படி இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மருத்துவப் பொருட்களை வழங்கக்கூடிய ட்ரோன் ஆபரேட்டர்களை ஐ.சி.எம்.ஆர் ஈடுபடுத்தும்.
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
“சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கடினமான நிலப்பரப்பில் கடைசி மைல் பகுதிகளையும் அடைய ட்ரோன் மூலம் தடுப்பூசி வழங்குவதற்கான ஒரு மாதிரியை உருவாக்க ஐசிஎம்ஆர் ஆர்வமாக உள்ளது. இந்தப் பணியின் முக்கிய நோக்கம், இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உள்ள தொலைதூர அணுக முடியாத பகுதிகளில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் மருத்துவப் பொருட்கள் விநியோக மாதிரியையும், களப் பயிற்சி பகுதியில் அதன் சாத்தியத்தையும் உருவாக்குவதாகும்," என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் காலகட்டம் 90 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ட்ரோன் ஆபரேட்டரின் செயல்திறன் மற்றும் திட்டத்தின் தேவையைப் பொறுத்து மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி: பிடிஐ | தொகுப்பு: மலையரசு