‘வாணி ஜெயராம்’ நமக்கு விட்டுச் சென்றது 10,000 பாடல்களை மட்டும் அல்ல..!
19 மொழிகள், 10,000 பாடல்கள்... இந்தியத் திரைத் துறையில் இது அசாத்தியம். ஆம், தமிழ்த் திரையுலகின் தனித்துவமான பின்னணிப் பாடகர் வாணி ஜெயராம் பதிவு செய்த தடங்கள் மலைக்கத்தக்கது. அவர் தனது திரைப் பயணம் மூலம் நமக்குத் தந்துவிட்டுப் போனது ஏராளம்.
திரைத் துறையினராலும் ரசிகர்களாலும் ‘வாணி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் வாணி ஜெயராமின் திரைப் பயணத்தையும் சாதனைகளையும் எளிதில் சுருக்கமாக எழுதிவிட முடியாது. அந்த அளவுக்கு தனது திறமையால் முத்திரைப் பதித்தவரை தேச அளவில் கெளரவிக்கும் நோக்கில்தான் சமீபத்தில் அவருக்கு ‘பத்ம பூஷண்’ விருது அறிவித்தது மத்திய அரசு.
ஆனால், அந்த விருதை அவரது விரல்கள் வருடுவதற்கு முன்பாகவே காற்றில் கலந்துவிட்டது அவரது மயக்கும் குரல்.
“இந்தியாவின் அனைத்து மொழிகளிலும், அந்தந்த மொழிகளின் தொனி தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஓர் ஆயுட்கால பாடகி.”
- கவியரசு கண்ணதாசன் பாராட்டிய வரிகள் இவை. இந்தப் பாராட்டுக்குப் பின்னால் மிகப் பெரிய பயணம் உள்ளது. அந்தப் பயணம் வாணி ஜெயராமின் 3 வயதில் ஆரம்பித்தது என்றுச் சொன்னால், கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை.

வேலூரில் துரைசாமி - பத்மாவதி தம்பதிக்கு 5வது குழந்தையாகப் பிறந்த வாணி ஜெயராமின் இயற்பெயர் கலைவாணி. அவரது வீடு முழுவதுமே இசையால் நிரம்பியது. வீணை இசைக் கலைஞராக இருந்த தாயார் பத்மாவதியிடம் இருந்து தனது 3 வயதில் இசை மீது நாட்டம் கொள்ள ஆரம்பித்தார். 5 வயதில் இருந்து முறைப்படி இசை கற்கத் தொடங்கினார். சென்னை குயின் மேரீஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர், எஸ்பிஐ வங்கியில் பணிபுரிந்தார்.
அதன்பின், மும்பை சென்ற வாணி ஜெயராமின் இசை ஆர்வத்தை ஊக்குவித்த கணவர் ஜெயராம், இந்துஸ்தானி இசைப் பயற்சி பெற உறுதுணை புரிந்தார். 20 ப்ளஸ் வயதில் ஹிந்துஸ்தானி இசையைப் பயிலத் தொடங்கி, அதில் சிறந்து விளங்குவது எளிதானது அல்ல. உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் பயிற்சி பெற்ற வாணி ஜெயராம், ஹிந்துஸ்தான் மட்டுமின்றி கஜல் இசையையும் கற்றுக்கொண்டு தன்னை இசைக் கலையில் மேம்படுத்திக் கொண்டு வெவ்வேறு பரிமாணங்களில் பயணிக்கத் தொடங்கினார்.

முழு நேர இசைக் கலைஞராக மேடையேற ஆரம்பித்தவர், 1971ல் பாலிவுட் படமான ‘Guddi’-யில் இடம்பெற்ற ‘போலே ரே பப்பி ஹரா...’ என்ற பாடல் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். அதன்பின், தமிழிலும் தடம் பதித்கத் தொடங்கியவரை தமிழ் ரசிகர்களால் அதிகம் கவனிக்க வைத்தது, ‘தீர்க்க சுமங்கலி’ படத்தில் பாடிய 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடல்.
இந்தியாவின் 19 மொழிகளில் 10,000 ப்ளஸ் பாடல்களைப் பாடிய வாணி ஜெயராம், எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன், சங்கர்-கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியவர். சிறந்த பாடகர் (பெண்) பிரிவில் மூன்று முறை தேசிய விருதுகளையும், பல மாநிலங்களின் மாநில அரசு விருதுகளைக் குவித்த வாணி ஜெயராமுக்கு சமீபத்தில்தான் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
எந்த மொழியில் பாடினாலும், அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் பாடும் உணர்வைத் தரும் துல்லியத் தன்மைதான் வாணி அம்மாவின் தனிச் சிறப்பு. தமிழில் அவர் பாடிய ஏராளமான பாடல்களில் கவனத்துக்குரிய பாடல்களின் சிறு பட்டியல் இது...
- மல்லிகை என் மன்னன் மயங்கும்... - தீர்க்க சுமங்கலி
- ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்... - அபூர்வ ராகங்கள்
- என்னுள்ளில் எங்கோ, ஏங்கும் கீதம்... - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
- தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்... - உல்லாசப் பறவைகள்
- இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே... - வைதேகி காத்திருந்தாள்
- நானே நானா யாரோ தானா... - அழகே உன்னை ஆராதிக்கிறேன்
- மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்... - புனித அந்தோனியார்
- நினைவாலே சிலை செய்து... - அந்தமான் காதலி
- நான் பாடிக்கொண்டே இருப்பேன்... - சிறை
- கட்டிக் கரும்பே கண்ணா... - சம்சாரம் அது மின்சாரம்
- ஒரே நாள் உனை நான்... - இளமை ஊஞ்சலாடுகிறது
இத்தகைய பல்லாயிரக்கணக்கான பாடல்களை நமக்காகப் பாடிய குரல் தனது 78-வது வயதில் ஓய்வெடுத்துக் கொண்டது. ஆம், வாணி ஜெயராம் இப்போது நம்மிடையே இல்லை. கடந்த 2018-ல் வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம் உடல் நலக்குறைவால் காலமானார்.
அதன்பிற்கு, சென்னை - நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த வாணி ஜெயராம் காலமாகிவிட்டார்.

ஆனால், அவரது குரல் காலங்களைக் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது. வாழும் என்பது உறுதி. கரியர் ரீதியில் நமக்கு 10,000 ப்ளஸ் பாடல்களைத் தந்தவர் அர்ப்பணிப்பு, ஈடுபாடு, தனித்துவங்கள் முதலானவற்றைத் தாண்டி மனித வாழ்க்கையில் இரண்டு முக்கியமான செய்திகளையும் தந்துச் சென்றிருக்கிறார் வாணி ஜெயராம்.
அதில், ஒன்று: ‘முதுமையில் தனிமை கொடுமையானது’ என்பது. இன்னொன்று மிக முக்கியமானது. அது...
“மனிதநேயத்தோடு வாழ்வதே மிகவும் உன்னதமானது.”
சொன்னதுபோல் வாழ்ந்து காட்டி விடைபெற்ற வாணி ஜெயராம் என்றும் தன் குரல் வழியில் நம்மிடையே வாழ்வார்!
Edited by Induja Raghunathan

