வேலைவாய்ப்பு அளிக்கும் 8 திட்டங்களுக்கு இன்று முதலமைச்சர் விஜய் அடிக்கல்!
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின், 350 கோடி ரூபாய் செலவிலான டிஷ்யூ காகிதம் வணிக உற்பத்தி மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின், 250 கோடி ரூபாய் செலவிலான ஏரோஹப் வளாகம் ஆகியவற்றை முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின், 350 கோடி ரூபாய் செலவிலான டிஷ்யூ காகிதம் வணிக உற்பத்தி மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின், 250 கோடி ரூபாய் செலவிலான ஏரோஹப் வளாகம் ஆகியவற்றை முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைத்தார்.
மேலும், சிப்காட் தொழிற்பூங்காவில் 122.08 கோடி ரூபாய் செலவிலான 11 புதிய கட்டடங்களும், தமிழ்நாடு தொழில் துறை வீட்டு வளர்ச்சி பிரைவேட் லிமிடெட் சார்பாக 55.66 கோடி ரூபாய் செலவிலான 2 புதிய கட்டடங்கள் உள்ளிட்ட மொத்தம் 777.74 கோடி ரூபாய் செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் சார்பில் திருச்சி மாவட்டம், மொண்டிப்பட்டியில் 350 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டிஷ்யூ காகிதம் வணிக உற்பத்திக்கான உற்பத்தித் திட்டம், தென்னிந்தியாவில் முதன்முறையாக டிஷ்யூ காகித உற்பத்திக்கான வணிகத்தைத் தொடங்குவதால், உலகளாவிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'லூமியா' என்ற பிராண்டின் கீழ் ஃபேஷியல், நாப்கின், டவல் மற்றும் கழிவறைப் பயன்பாட்டிற்கென நான்கு வகைகளில் உயர்தர டிஷ்யூ காகிதங்கள் வணிகப்படுத்தப்படும். இதனால் இப்பகுதியின் தொழில் வளர்ச்சியும் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகல் தொழிற்பூங்காவில் உலகத்தரத்திலான ஏரோஹப் வளாகத்தினை 250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில், வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையின் முக்கிய செயல்பாடுகளான பொறியியல் வடிவமைப்பு, ஏவியோனிக்ஸ் உற்பத்தி மற்றும் பழுதுபார்ப்பு, மேம்பட்ட முன்மாதிரி உருவாக்கம் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை மேற்கொள்ளப்படும்.
சிப்காட் நிறுவனத்தின் சார்பாக, 26 கோடி ரூபாய் செலவில் 1,00,320 சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்களுடன் கூடிய நிர்வாக அலுவலகக் கட்டடம்; 51.8 கோடி ரூபாய் செலவில் 2,36,504 சதுர அடி பரப்பளவில் இரண்டு பிளக் & பிளே கட்டிடங்கள்; 8.60 கோடி ரூபாய் செலவில் 22,519 சதுர அடி பரப்பளவில் உணவகத்துடன் கூடிய கூட்டரங்கம்; பணிபுரியும் தாய்மார்களின் நலன் கருதி 2.60 கோடி ரூபாய் செலவில் 6,563 சதுர அடி பரப்பளவில் குழந்தைகள் காப்பகக் கட்டிடம்; 2.50 கோடி ரூபாய் செலவில் 6,049 சதுர அடி பரப்பளவில் மருத்துவ மையக் கட்டடம்; 90 இலட்சம் ரூபாய் செலவில் 1,442 சதுர அடி பரப்பளவில் சுங்க அலுவலகம் மற்றும் பாதுகாவலர் அறை; 2.45 கோடி ரூபாய் செலவில் எழில்மிகு நுழைவுவாயில் ஆகிய 11 புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
மேலும், 1.65 கோடி ரூபாய் செலவில் மதுரை கோவைபுதூர் அரசு தொழில் பயிற்சி வளாகத்தில் திறன் மேம்பாட்டு மையக் கட்டடமும், 19 கோடி ரூபாய் செலவில் காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகலில் பணியாளர்கள் பயன்பாட்டிற்கென உணவுக்கூட கட்டடமும் திறந்து வைக்கப்பட்டன.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் தங்கும் வசதியைப் பூர்த்திசெய்யும் வகையில், 6.58 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடியில் பெண் பணியாளர்களுக்கான மகளிர் தங்கும் விடுதிக் கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.
சிப்காட் மற்றும் TNIFMC இணைந்து தமிழ்நாடு தொழில்துறை வீட்டு வளர்ச்சி பிரைவேட் லிமிடெட் (TNIHPL) மூலம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் 15.77 கோடி ரூபாய் செலவில் 441 நபர்கள் தங்குவதற்கான ஆண்கள் தங்கும் விடுதியும், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் 39.89 கோடி ரூபாய் செலவில் மூன்று தளங்களுடன் நவீன வசதிகளுடன் 870 பெண் பணியாளர்கள் தங்குவதற்கான மகளிர் தங்கும் விடுதியும் திறந்து வைக்கப்பட்டன.
செல்பயோஸ், பேட்டர், ZF, HD சப்ளை, க்ரீன் சிக்னல், HL மேண்டோ, டைம்லர், வேல்முருகன் ஹெவி இன்ஜினீயரிங் மற்றும் ஜீப்ரானிக்ஸ் ஆகிய 9 தொழில் நிறுவனங்களில், பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 20 நபர்களுக்கு தமிழ்நாடு முதல்வரால் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. விஜயகுமார், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் குமார் ஜெயந்த், டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தா. கார்த்திகேயன், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Edited by Induja Raghunathan

