WhatsApp பயனர்பெயர் சர்ச்சை: பிரபலங்களின் பெயர்களை வேறு யாரும் முன்பதிவு செய்ய முடியாது - Meta விளக்கம்
பிரபலமான நபர்களின் பெயர்கள் அல்லது அறியப்பட்ட பொதுப் பிரமுகர்களின் பயனர்பெயர்களை வேறு யாரும் முன்பதிவு செய்து வைத்திருக்க முடியாது என்றும், அத்தகைய பெயர்களை உரிய கணக்கு உரிமையாளர்கள் மட்டுமே பெற முடியும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வாட்ஸ்அப்பின் புதிய பயனர்பெயர் (Username) அம்சம் தொடர்பாக, மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த செயலி முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
பிரபலமான நபர்களின் பெயர்கள் அல்லது அறியப்பட்ட பொதுப் பிரமுகர்களின் பயனர்பெயர்களை வேறு யாரும் முன்பதிவு செய்து வைத்திருக்க முடியாது என்றும், அத்தகைய பெயர்களை உரிய கணக்கு உரிமையாளர்கள் மட்டுமே பெற முடியும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
இந்த அம்சம் குறித்து வெளியிடப்பட்ட கேள்வி-பதில் (FAQ) ஆவணத்தில்,
“பிரபலமான அல்லது நன்கு அறியப்பட்ட பயனர் பெயர்களை மக்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள் என்ற கூற்றுகள் தவறானவை. பொதுப் பிரமுகர்களின் பெயர்களை அவர்களது உண்மையான கணக்கு உரிமையாளர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்,” என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது.

இதற்கிடையில், இந்த புதிய பயனர்பெயர் அம்சம் மோசடி, பிஷிங், போலி அடையாளம் உருவாக்குதல் மற்றும் ‘டிஜிட்டல் கைது’ போன்ற இணைய குற்றங்களை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தின் பேரில், இந்திய மத்திய அரசு மெட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசுடன் நடைபெறும் ஆலோசனைகள் திருப்திகரமாக நிறைவடையும் வரை இந்த அம்சத்தை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா வாட்ஸ்அப்'பின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். நாட்டில் 50 கோடிக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பயனர்பெயர் முன்பதிவு தொடங்கிய நிலையில், பல முக்கிய நபர்கள் தங்களது பெயர்களின் பல்வேறு வடிவங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சமூக வலைதளமான X-இல் கவலை தெரிவித்தனர்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மற்றும் டெல்லி முன்னாள் துணை முதல்வரான மணீஷ் சிசோடியா,
“எனது பெயரின் கிட்டத்தட்ட அனைத்து வடிவங்களும், எனது கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் பெயர் தொடர்பான பயனர்பெயர்களும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது,” என்று பதிவிட்டிருந்தார்.
அதேபோல், பிபின் பிரீத் சிங் கூட தனது பெயருக்கு நெருக்கமான பல பயனர்பெயர்கள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த புதிய அம்சம் போலி கணக்குகள் மூலம் ஆள்மாறாட்டம், நிதி மோசடி மற்றும் இணையத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என இணையப் பாதுகாப்பு நிபுணர்களும் சில பயனர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசின் நோட்டீசில், “வாட்ஸ்அப் பயனர்பெயர் அம்சம் இணைய மோசடிகள், பிஷிங் தாக்குதல்கள், டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்ட சம்பவங்களை கணிசமாக அதிகரிக்கக்கூடும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அம்சம் தொடர்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடாததற்கான காரணத்தை விளக்குமாறும் மெட்டாவிடம் அரசு கேட்டுள்ளது.
அதேநேரத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் ‘முக்கிய சமூக ஊடக இடைநிலையர்’ (Significant Social Media Intermediary) என்ற வகையில் வாட்ஸ்அப் தேவையான பொறுப்புகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய கடமை கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு நினைவூட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்த வாட்ஸ்அப், இந்த அம்சத்தில் ஏற்கனவே பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
“பயனர்பெயர் வசதி இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டு பின்னர் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். ஆள்மாறாட்டத்தைத் தடுக்க, பொதுப் பிரமுகர்கள், அரசு அமைப்புகள், பிரபலங்கள் மற்றும் மெட்டாவில் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுடன் தொடர்புடைய முக்கியமான பெயர்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவற்றை உரிய உரிமையாளர்கள் மட்டுமே பெற முடியும். அதேபோல், அவற்றைப் போன்ற தோற்றமளிக்கும் பெயர்களும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன,” என்றார்.
மேலும், “வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதற்கு தொலைபேசி எண் அவசியம். பயனர்பெயர் மூலம் ஒருவருக்கு செய்தி அனுப்ப வேண்டுமெனில், அவர்களின் சரியான பயனர்பெயர் தெரிந்திருக்க வேண்டும். புதிய கணக்குகள் எத்தனை பேரை தொடர்புகொள்ளலாம் என்பதற்கு வரம்புகள் இருக்கும். ஒருவரின் பயனர்பெயரை மீண்டும் மீண்டும் ஊகித்து முயற்சிப்பதையும் தடுக்கப்படும். ஆள்மாறாட்டம் மற்றும் தவறான பயன்பாட்டைக் கண்டறிந்து நீக்கும் அமைப்புகளும் செயல்படும்,” என்று அவர் விளக்கினார்.
மேலும், பயனர்பெயர் வழியாக முதன்முறையாக ஒருவர் செய்தி அனுப்பும்போது, அந்த நபர் புதிய கணக்கா, ஏற்கனவே தொடர்புகளில் உள்ளவரா, பொதுவான குழுக்களில் இருக்கிறாரா, அல்லது வேறு நாட்டைச் சேர்ந்தவரா என்பதையும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு காட்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இணையதள சுதந்திர அறக்கட்டளை (Internet Freedom Foundation-IFF) மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளது.
“வாட்ஸ்அப்’புக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸுக்கு தெளிவான சட்ட அடிப்படை எதுவும் இல்லை. ஒரு நிறுவனம் எந்த தயாரிப்பு அம்சத்தை உருவாக்க வேண்டும் அல்லது வெளியிட வேண்டும் என்பதை நிர்வாக அமைப்பு தீர்மானிக்க முயற்சிப்பது போன்றதாக இது தெரிகிறது. அதற்கு எந்தச் சட்டமும் அனுமதி வழங்கவில்லை,” என்று IFF தெரிவித்துள்ளது.
மேலும், “சட்டபூர்வமான ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்துவதை தவறாகக் கருதி, அதற்கான நியாயத்தை நிறுவனம் விளக்க வேண்டும் என்று நோட்டீஸ் கோருகிறது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் ஒரு தயாரிப்பு அம்சத்தை வெளியீட்டுக்கு முன் அனுமதிக்க அல்லது தடை செய்ய அதிகாரம் பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டவில்லை. ஏனெனில் அத்தகைய அதிகாரம் தற்போதைய சட்டங்களில் இல்லை,” என்றும் IFF தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளது.

