பயனர்பெயர் (Username) விவகாரம்: பதிலளிக்க வாட்ஸ்அப்'க்கு கூடுதல் அவகாசம்!
கடந்த வாரம் மத்திய அரசு, வாட்ஸ்அப்'ன் திட்டமிடப்பட்ட பயனர்பெயர் அம்சம் குறித்து விளக்கம் கேட்டு மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. அரசின் திருப்திகரமான ஆலோசனைகள் நிறைவடையும் வரை இந்த அம்சத்தை நிறுத்தி வைக்குமாறும் அதில் வலியுறுத்தப்பட்டது.
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் (WhatsApp) அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள சர்ச்சைக்குரிய ‘பயனர்பெயர்’ (Username) அம்சம் தொடர்பாக மத்திய அரசின் நோட்டீஸுக்கு பதிலளிக்க மேலும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அரசுடன் நடைபெறும் ஆலோசனைகள் நிறைவடையும் வரை இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்களது தொலைபேசி எண்ணை பகிராமல் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியும். ஆனால், இது இணைய மோசடி, பிஷிங் தாக்குதல், ‘டிஜிட்டல் கைது’ மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்ட குற்றங்களை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் மத்திய அரசு, வாட்ஸ்அப்பின் திட்டமிடப்பட்ட பயனர்பெயர் அம்சம் குறித்து விளக்கம் கேட்டு மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. அரசின் திருப்திகரமான ஆலோசனைகள் நிறைவடையும் வரை இந்த அம்சத்தை நிறுத்தி வைக்குமாறும் அதில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை மெட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளை சந்தித்து விவாதித்தனர். முதலில் அளிக்கப்பட்ட பதில் சமர்ப்பிக்கும் காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று மேலும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வாட்ஸ்அப் முன்பு வெளியிட்ட விளக்கத்தில், பயனர்பெயர் வசதி இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது. ஆள்மாறாட்டத்தைத் தடுக்க உயர்மட்ட பொதுப் பிரமுகர்கள், அரசு அமைப்புகள், பிரபலங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட மெட்டா கணக்குகளுக்கான பெயர்கள் முன்கூட்டியே பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியது.
மேலும், வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கு தொலைபேசி எண் கட்டாயமாகவே இருக்கும் என்றும், மோசடிகளைத் தடுக்கும் பல்வேறு பாதுகாப்பு அடுக்குகள் இந்த அம்சத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கியது. புதிய பயனர்களுக்கு செய்தி அனுப்புவதில் வரம்புகள் விதிக்கப்படுவது, பயனர் பெயர்களை ஊகித்து கண்டுபிடிக்கும் முயற்சிகளைத் தடுப்பது மற்றும் ஆள்மாறாட்ட நடவடிக்கைகளை கண்டறிந்து அகற்றும் அமைப்புகள் செயல்படுத்தப்படுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் இடம்பெறும், என தெரிவித்துள்ளது.
அத்துடன், முதன்முறையாக யாரேனும் பயனர்பெயர் மூலம் தொடர்புகொள்ளும்போது, அந்த நபர் புதிய கணக்கா, தொடர்பு பட்டியலில் உள்ளவரா, பொதுவான குழுக்களில் உள்ளவரா அல்லது வேறு நாட்டைச் சேர்ந்தவரா என்பதைக் காட்டும் வசதியும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்'க்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, மத்திய அரசு Telegram மற்றும் Signal ஆகிய செயலிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி, அவற்றில் ஏற்கனவே உள்ள பயனர்பெயர் அம்சம் தொடர்பாக மோசடி மற்றும் ஆள்மாறாட்ட அபாயங்களை எவ்வாறு கையாளுகின்றன என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளது.
இதற்கிடையில், Meta Platforms நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் விளம்பரங்களில் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் தொடர்பாகவும், டெலிகிராம் தளத்தில் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி உள்ளடக்கங்களின் சட்டவிரோத பரவல் தொடர்பாகவும் மத்திய அரசு தனித்தனியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

