நுண்ணறிவு நாயகிகள் 4 - இயந்திர கற்றல் முன்னோடி 'கேத்லீன் பூத்'
செயற்கை நுண்ணறிவுக்கான அடித்தளமாக அமையும் ஆய்வுகளில் ஈடுபட்ட முன்னோடிகளில் ஒருவராக கேத்லீன் பூத் விளங்குகிறார். அந்த காலத்திலேயே இயந்திர மொழி பெயர்ப்பு, நியூரால் நெட்வொர்க் போன்றவற்றில் கவனம் செலுத்தினார்.
ஏஐ சேவைகள் வியக்க வைக்கும் ஆற்றலை இப்போது பெற்றிருந்தாலும், இவற்றுக்கெல்லாம் அடிப்படையான ஆய்வு முயற்சிகள் பல ஆண்டுகளுக்கு முன்னே துவங்கிவிட்டன. இவ்வளவு ஏன், ஏஐ எனும் பெயர் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படுவதற்கு முன்னரே, பின்னாளில் ஏஐ நுட்பத்திற்கான அடிப்படையாக அமையக்கூடிய ஆய்வுகளில் பல முன்னோடிகள் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் ஒருவரான கேத்லீன் பூத் (KATHLEEN BOOTH) பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளிலும் ஆய்வு பணிகளை மேற்கொண்ட கேத்லீன் பூத்தின் ஒரு வரி அறிமுகமே வியக்க வைப்பதாக இருக்கிறது:
கம்ப்யூட்டர்களுக்கான முதல் தொகுப்பு மொழியை (assembly language) எழுதியவர், புரோகிராமிங் தொடர்பான முதல் புத்தகங்களில் ஒன்றின் இணை எழுத்தாளர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் என்பதாக அவரது சுருக்கமான அறிமுகம் அமைகிறது. அது மட்டும் அல்ல, இன்றளவும் பிரசாஸர்களில் பயன்படுத்தப்பட்டு வரும் அல்காரிதம் உருவாக்கத்திலும் அவர் பங்களித்திருக்கிறார்.

இயந்திர கற்றல்
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இயந்திர கற்றல் துறைக்கான ஆரம்ப விதையை விதைத்தவர்களிலும் ஒருவராக கருதப்படுகிறார். ஏஐ உலகில் இன்று ஆணிவேராக கருதப்படும் நியூரால் நெட்வொர்க் துறையிலும் அவருக்கு முக்கிய பங்கிருக்கிறது. இயந்திர மொழிபெயர்பு தொடர்பான முன்னோடி ஆய்விலும் ஈடுபட்டவராக அறியப்படுகிறார்.
கேத்லீன் பூத்தின் கணவர் ஆண்ட்ரூ பூத்தும் ஒரு முன்னோடி கம்ப்யூட்டர் விஞ்ஞானி. இருவருமாக இணைந்தும், தனித்தனியாவும் கம்ப்யூட்டர் ஆய்வில் சிறந்து விளங்கினர். மென்பொருள் துறையில் மட்டும் அல்லாது, ஆரம்ப காலத்தில் ஹார்ட்வேர் எனப்படும் வன்பொருள் துறையிலும் அவர்கள் ஆய்வு அமைந்திருந்தது.
இங்கிலாந்தின் வார்செஷயரில் 1922ல் பிறந்த கேத்லீன் பிரெட்டன் லண்டன் பல்கலையில் இருந்து கணிதத்தில் பட்டம் பெற்று பின்னர் மேம்பட்ட கணிதத்தில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். அதன் பிறகு, 1944 முதல் 1946 வரை ராணுவ விமான ஆய்வு அமைப்பில் பணியாற்றினார்.
1946ல் அவர் லண்டன் பல்கலையின் பிர்க்பெக் கல்லூரியில் ஆய்வாளராக சேர்ந்து, பின்னர் அங்கேயே பேராசிரியராக பணியாற்றினார். இந்த கால கட்டத்தில் தான் அவரது மண வாழ்க்கையும் துவங்கியது, கம்ப்யூட்டர் ஆய்வு வாழ்க்கையும் துவங்கியது. ஆய்வாளராக இருந்த போது தான், அங்கு பணியாற்றிய கம்ப்யூட்டர் பொறியாளர் ஆண்ட்ரூ பூத்தை (Andrew Donald Booth) சந்தித்தார். இருவரும் பின்னர் மண வாழ்க்கையில் இணைந்தனர். தொழில்முறை வாழ்கையிலும் தான்!
1940-களின் பிற்பகுதி என்பது நவீன கம்ப்யூட்டர் துறையின் பிள்ளை பருவ ஆண்டுகள். எனியாக் (ENIAC) போன்ற முன்னோடி கம்ப்யூட்டர்கள் தனி வடிவங்களாக உருவாக்கப்பட்டு வந்த காலம். ஏற்கனவே எக்ஸ் கதிர்கள் தொடர்பான இயந்திர உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த ஆண்ட்ரூ பூத், இந்த பணியை மேலும் எளிதாக்குவதற்கான கணக்கிடல் இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஏஆர்சி என குறிப்பிடப்பட்ட ஆட்டமேட்டிக் ரிலே கம்ப்யூட்டர் (ARC- Automatic Relay Computer ) என்பதாக அந்த இயந்திரம் அமைந்திருந்தது. இது கால்குலேட்டர் என்றும் குறிப்பிடப்பட்டது.

ரிலே இயந்திரம்
ஆரம்ப கால மின் இயந்திர கம்ப்யூட்டர் என கருதப்படும் இந்த இயந்திரம் நவீன டிரான்சிஸ்டர்களுக்கான முன்னோடியாகவும் கருதப்படுகின்றன. உண்மையில் இவை தர்கம் சார்ந்த கணக்குகளை மேற்கொள்ள உதவிய மின் விசைகளாக அமைந்திருந்தன. இதற்கான பணியில் கேத்லீன் மற்றும் செனியா ஸ்வீட்டிங் என்பவரும் ஈடுட்டிருந்தனர். இதன் வடிவமைப்பில் 600 ரிலே மற்றும் 100 ஸ்விட்சகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இதற்கான குறிப்புகளை எழுதிய கேத்லீன் வன்பொருள் உருவாக்கத்திலும் திறன் பெற்றிருந்தார்.
இதனிடையே, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலையில் இருந்து சிறப்பு அழைப்பின் பேரில் கேத்லீனும், ஆண்ட்ரூவும் அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றனர். இந்த பயணத்தின் போது, நவீன கம்ப்யூட்டர்களின் கருத்தாக்க முன்னோடிகளில் ஒருவராக கொண்டாடப்படும் ஜான் வான் நியூமேனை (John Von Neumann.) சந்தித்து பேசும் வாய்ப்பும் கிடைத்தது. நியூமன் சந்திப்பு மூலம் கிடைத்த அனுபவத்தை தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் ஏஆர்சி 2 தவிர மேலும் இரண்டு கம்ப்யூட்டர்களை உருவாக்கினர்.
இதில் இரண்டாவது கம்ப்யூட்டர் APE(X)C அனைத்து பயன்பாட்டிற்கான தன்மை கொண்டிருந்தது. இந்த கம்ப்யூட்டர்களின் வன்பொருளுக்கு ஆண்ட்ரூவும், மென்பொருளுக்கு கேத்லீனும் பொறுப்பேற்றுக்கொண்டனர். நினைவுத்திறன் கொண்ட முதல் கம்ப்யூட்டர்களில் ஒன்றாகவும் அமைந்திருந்தது.
கேத்லீன் மற்றும் ஆண்ட்ரூ பூத் 1947 ல் ஏஆர்சி 2 தொடர்பான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டனர். நியூமன் கம்ப்யூட்டர் கட்டுமானத்திற்கான தேவையை விளக்கியிருந்ததோடு பலவலை நினைவுத்திறன் அம்சங்களையும் இந்த கட்டுரை விவரித்தது. மேலும், தொகுப்பு மொழிக்கான முன்னோட்டமாக, பூஜ்ஜியம், ஒன்று எனும் விதமாக மட்டும் அல்லாமல், வேறு விதமாக புரோகிராம் செய்வதற்கான அரூப சிந்தனை முறையையும் இதில் கேத்லீன் விவரித்திருந்தார்.
ஒரே நேரத்திலான மற்றும் வெவ்வேறு நேரத்திலான (Synchronous vs asynchronous operations) செயல்பாடுகள் சாத்தியத்தையும் அவர் விவரித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக முதல் தொகுப்பு மொழியையும், முதல் அசெம்பளர் என கருதக்கூடிய புரோகிராமையும் உருவாக்கினார். (முதல் அசெம்பளரை உருவாக்கியவர் என டேவிட் வீலர் அதிகாரப்பூர்வமாக கருப்படுவது வேறு விஷயம்.)
அபெக்ஸ் கம்ப்யூட்டரை புரோகிராம் செய்ய வழிகாட்டும் புத்தகம் ஒன்றை 1958ல் கேத்லீன் பூத் எழுதினார். இந்த பிரிவில் முதல் புத்தகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆய்வு பணிகளுக்கு இடையே கம்ப்யூட்டர் புரோகிராம் வகுப்புகளையும் எடுத்துக்கொண்டிருந்தார். கம்ப்யூட்டர் துறையின் ஆரம்ப கால முன்னோடிகளில் ஒருவராக கேத்லீனை கருத இந்த சாதனைகளே போதும் என்றாலும், அந்த காலத்திலேயே இயந்திர கற்றல் தொடர்பான முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தது தான் இன்னும் வியக்க வைப்பதாக அமைகிறது.
கேத்லீன் தனது கணவருடன் இணைந்து, தானியங்கி டிஜிட்டல் கால்குலேட்டர்கள் (Automatic Digital Calculators) எனும் புத்தகத்தை வெளியிட்டிருந்தார். கம்ப்யூட்டர் இயந்திரத்திற்கான அறிமுகம், மின்னணு உத்திகள், கம்ப்யூட்டர் வடிவமைப்பு உள்ளிட்ட அத்தியாயங்கள் கொண்டிருந்த இந்த புத்தகத்தின் 18 வது அத்தியாயம் குறிப்பாக கவனத்திற்கு உரியது. இந்த அத்தியாயத்தில் கம்ப்யூட்டர் செயல்திறன் கொண்டு சாத்தியமாக கூடிய பல விஷயங்களை விவரித்திருந்தார். எல்லாமே காலத்தை முந்தியவை.

கம்ப்யூட்டரின் ஆற்றல்கள்
எக்ஸ் கதிர்கள் கிரிஸ்டால்லகத்திற்கு கம்ப்யூட்டர் பயன்படும் என குறிப்பிட்டிருந்தவர், கம்ப்யூட்டரும், மொழியியலும் பற்றி விரிவாக குறிப்பிட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர் திறன் என்பது வெறும் கணக்கிடல்கள் சார்ந்ததாக மட்டும் கருதப்பட்ட நிலையில், கம்ப்யூட்டரையும், மொழியையையும் இணைத்து பேசியது பெரும் பாய்ச்சல் என்று தான் சொல்ல வேண்டும். இதுவே பார்வையற்றவர்களுக்கான மொழியில் வெளிப்பாட்டை உருவாக்கும் ஆய்வுக்கட்டுரை உள்ளிட்டவற்றுக்கு வித்திட்டது. கம்ப்யூட்டர்களில் கேம்கள் விளையாடுவதற்கான வழிமுறைகளையும் தனியே விவரித்திருந்தனர்.
புத்தகத்தின் கடைசி புத்தகத்தில், இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன. மனித அறிவாற்றல் செயல்பாடுகளை அப்படியே நகலெடுப்பதில் கம்ப்யூட்டர்களுக்கு உள்ள வரம்புகளையும் விவாதித்திருந்தார். புத்தகத்தின் மூன்றாம் பதிப்பு முன்னுரையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான குறிப்புகள் கவனத்தை ஈர்க்கின்றன.
நியூரால் நெட்வொர்க்
பின்னர், அவர் கனடா நாட்டில் பேராசியராக பணியாற்றிய போது ஆங்கிலத்தில் இருந்து பிரெஞ்சு மொழிபெயர்ப்பு தொடர்பான இயந்திர முயற்சி ஆய்வு குறித்த கட்டுரைகளை கணவருடன் இணைந்து வெளியிட்டார். 1958 ம் ஆண்டு வாக்கில் வெளியிட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில், மனித நியூரான்களுக்கு நிகரான கம்ப்யூட்டர் நியூரான் அமைப்பு சார்ந்த மென்பொருள் செயல்பாடுகள் பற்றியும் விளக்கியிருந்தார். இன்றைய நியூரால் நெட்வொர்கின் ஆதார கருத்தாக்க அம்சங்களை இது கொண்டிருந்தது. பின்னர் இதே முறையில் செயல்படக்கூடிய மென்பொருள் ஒன்றையும் உருவாக்கினார். எழுத்துக்களை கண்டறியக்கூடியதாக இருந்தது.
1960 களில் இங்கிலாந்து பல்கலை பணியில் இருந்து விலகி கனடாவுக்கு குடிபெயர்ந்தவர், கற்பித்தல் மற்றும் ஆய்வு பணிகளை தொடர்ந்தார். 1978 ல் ஓய்வு பெற்றவர், அதன் பின் 1983 ல் மகன் ஜே.எம்.பூத்துடன் இணைந்து நியூரால் நெட்வொர்க் செயல்பாடு தொடர்பான ஆய்வு கட்டுரையையும் வெளியிட்டார். விலங்குகள் தரவுகளை அடிப்படையாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டது.
இப்போது திரும்பி பார்க்கையில், கேத்லீனின் ஆர்வமும், ஆய்வும் நவீன ஏஐ நுட்பத்தில் அடிப்படை கீற்றுகளை கொண்டிருப்பதை உணரலாம். கணவர் 91 வயதில் இறந்த நிலையில், கேத்ரீன் தனது 100 வது வயதில் மறைந்தார்.
Edited by Induja Raghunathan

