செய்யறிவு நாயகிகள் 5 - ஏஐ ஆய்வில் புதிய மாற்றம் கொண்டு வந்த ரோசலின் பிகர்டு!
செயற்கை நுண்ணறிவு தொடர்பான போதாமைகளை மறுபரிசீலனை செய்ய வைத்து, ஏஐ ஆய்வு சென்று கொண்டிருக்கும் பாதையிலேயே மாற்றம் தேவை என அறைகூவல் விடுத்து, அதன் எதிர்கால பயணத்தில் முக்கிய வழிகாட்டியாக ரோசலின் பிகர்டு (Rosalind Picard) விளங்குகிறார்.
செயற்கை நுண்ணறிவின் வரலாற்றிலும், வளர்ச்சியிலும் அடித்தளமாக அமையும் வகையிலான பங்களிப்பை செலுத்திய முன்னோடி பெண் ஆய்வாளர்களை இதுவரை பார்த்தோம். செயற்கை நுண்ணறிவு தொடர்பான போதாமைகளை மறுபரிசீலனை செய்ய வைத்து, ஏஐ ஆய்வு சென்று கொண்டிருக்கும் பாதையிலேயே மாற்றம் தேவை என அறைகூவல் விடுத்து, அதன் எதிர்கால பயணத்தில் முக்கிய வழிகாட்டியாக விளங்கும் ரோசலின் பிகர்டு (Rosalind Picard) பற்றி இப்போது பார்க்கலாம்.
1950-களில் துவங்கி, இயந்திர கற்றல், ஆழ்கற்றல், நியூரால் நெட்வொர்க் என்றெல்லாம் சென்று கொண்டிருந்த ஏஐ பாதையில், இதுவரை இல்லாத புதிய கிளை ஒன்றை அறிமுகம் செய்த முன்னோடியாக ரோசலின் பிகார்டு அமைகிறார். ஏஐ பரப்பில் அவர் உண்டாக்கிய அபெக்டிவ் கம்ப்யூட்டிங் (affective computing) எனும் புதிய பிரிவு, செயற்கை நுண்ணறிவு தொடர்பான புரிதலிலும் புதிய பார்வையை கொண்டு வந்துள்ளது.
ரோசலின் முன்வைத்த புதிய ஏஐ பிரிவை உணர்வு நிலை சார்ந்த கம்ப்யூட்டிங் நுட்பம் என புரிந்து கொள்ளலாம். அதாவது, நுண்ணறிவு திறன் கொண்ட கம்ப்யூட்டர்களை உருவாக்க வேண்டும் என்றால், அவை மனித உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்பது இதன் அடிப்படையாக அமைகிறது.

ஏஐ பாதை
செயற்கை நுண்ணறிவு என்று மட்டுமே பேசிக்கொண்டிருந்த ஆய்வாளர்கள் மத்தியில் உணர்வு சார்ந்த நுண்ணறிவும் மிகவும் முக்கியம், உணர்வு திறனில் கவனம் செலுத்தாமல் செயற்கை நுண்ணறிவின் போதாமைகளை கடக்க முடியாது என வலியுறுத்துவதாகவும் இது அமைகிறது.
உணர்வு திறன் கொண்ட கம்ப்யூட்டர் என்பது இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக்கமாக மாறி, இத்தகைய நுட்பம் செயற்கை நுண்ணறிவின் நடைமுறை பலனை அதிகரிக்கும் எனும் நம்பிக்கையும் வலுப்பெற்றிருந்தாலும், 1990 களின் பிறபகுதியில் ரோசலின் இதற்கான கருத்தாக்கத்தை முன்வைத்த போது, கேலியும், கிண்டலும் கலந்த எதிர்ப்புக்கும் நிராகரிப்புக்கும் இலக்கானார்.
அறிவார்ந்த ஆய்வில் உணர்வு நிலைக்கு தேவையும் இல்லை, இடமும் இல்லை என சக ஆய்வாளர்களே எள்ளி நகையாடினர். அவர் கிறுக்குத்தனமான யோசனையை சொல்கிறார் என விமர்சிக்கப்பட்டதோடு, இது அவரது எதிர்காலத்திற்கும் ஏற்றது அல்ல சக ஆய்வாளர்களால் எச்சரிக்கப்பட்டார்.
கம்ப்யூட்டர்கள் என்றாலே பைனரி இலக்கங்களும், தர்கமும் கணிதவியலும் தான் என கருதப்பட்டு வந்த நிலையில், உணர்வு நிலை என்பது எதிர்ப்புக்கு உள்ளானதில் வியப்பில்லை. அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வில் தரவுகளும், அவற்றை இயக்கும் அல்காரிதம்களும் முக்கியமாக அமைந்திருந்த நிலையில், இது தொடர்பான ஆய்வில் உணர்வுக்கு இடமில்லை எனும் கருத்து அசைக்க முடியாததாக இருந்தது.
உணர்வு நிலை
இந்த பின்னணியில் தான், அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்.ஐ.டி பல்கலை பேராசிரியராகவும், ஆய்வாளராகவும் இருந்த ரோசலின் பிகார்டு, உணர்வு சார்ந்த கம்ப்யூட்டர் ஆய்வு தொடர்பான தேவையை முன்வைத்தார். இதனால் எதிர்ப்புக்கும், ஏளனத்திற்கும் உள்ளாக நேர்ந்ததை நினைத்து அவர் அதிர்ச்சி அடையவும் இல்லை, பின் வாங்கவும் இல்லை. ஏனெனில், இந்த மாற்றம் தேவை என்பதில் உறுதியாக இருந்தார்.
கம்ப்யூட்டர் ஆய்வையும், உணர்வுகளையும் ஒன்றிணைக்கும் எண்ணம் தனக்கு தோன்றியதை ரோசலினே கூட எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மற்ற ஆய்வாளர்கள் போல அவரும் நுண்ணறிவு சார்ந்த ஆய்வில் தர்கமும், தரவுகளுமே முக்கியம் என நினைத்தார். அதோடு, அறிவியலின் பலனை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்பத் துறையில் உணர்வுகளுக்கு எந்த இடமும் இல்லை என்றும் நம்பினார்.
உணர்வுகள் சார்ந்த விளக்கமளிக்கும் புத்தகம் எழுதுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை என்றே, உணர்வு நிலை சார்ந்த கம்ப்யூட்டர் திறனை வலியுறுத்தும் புத்தகத்தின் துவக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது கல்வி, அறிவியல் மற்றும் பொறியியலின் ஆதிக்கம் கொண்டதாக இருந்தது என்றும், கணித கோட்பாடுகள், சட்டங்கள், சமன்பாடுகள், அறிவார்ந்த சிந்தனைகளே முக்கியமாக இருந்தன என்றும், உணர்வுகளை தள்ளி வைக்கும் மனநிலையே கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
அது மட்டும் அல்லாமல், ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய பொறியியல் துறை ஆய்வில் பெண்கள் பொருந்தாதவர்கள் எனும் கருத்தை வலுவாக்கலாம் என்பதாலும் உணர்வு நிலை வாதத்தை தவிர்த்தார்.
ஆனால், அவரே எதிர்பார்க்காத வகையில் நுண்ணறிவு சார்ந்த ஆய்வு அவரை உணர்வு நிலைக்கு நகர்த்தியது. மனிதர்கள், புகைப்படம் போன்றவற்றில் இருப்பதை எப்படி உள்வாங்கி கொள்கின்றனர் என்பது தொடர்பாக அவரது ஆய்வு அமைந்திருந்தது. இதற்கான தீர்வாக கம்ப்யூட்டர் பார்வை, இயந்திர கற்றல் போன்ற நுட்பங்களையே நாடினார்.
(ரோசலின் தீவிர கிறிஸ்துவ மத நம்பிக்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தகக்து. வளரும் பருவத்தில் கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லை என்றாலும் பின்னர் மாறியதாக குறிப்பிட்டுள்ளார். அவரது ஏஐ ஆய்வில் மத நம்பிக்கை சார்ந்த பார்வையும் தாக்கம் செலுத்துகிறது).
இந்த பின்னணியில் தான், மனித மூளை பார்வையை உள்வாங்கி கொள்ளும் விதத்தில் உணர்வுகள் முக்கிய பங்காற்றுவதை புரிந்து கொண்டதாக குறிப்பிடுகிறார். இது அவருடைய ஆய்விலும், சிந்தனை முறையிலும் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.

நுண்ணறிவின் போதாமை
பொதுவாக கருதப்பட்டது போல நுண்ணறிவு தொடர்பான புரிதலில் உணர்வுகளை விலக்கி வைக்க முடியாது, என அவர் கருதினார். உணர்வுகள் என்பது நுண்கலை, பொழுதுபோக்கு, சமூக உறவுகளுக்கானது மட்டும் அல்ல, அறிவார்ந்த புரிதலில் அதற்கு பங்கிருக்கிறது என்றும் நினைத்தார்.
உணர்ச்சி வசப்படாமல் முடிவெடுக்கும் திறன் பற்றி பேசப்படுவது வழக்கமாக இருந்தாலும், உணர்வு நிலை சார்ந்த நுண்ணறிவும் அறிவியல் பார்வை மூலம் விளங்கி கொள்ள கூடியதே என கருதினார். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான், 1995 ல் கம்ப்யூட்டர் ஆய்வு மற்றும் உணர்வுகள் தொடர்பாக சகாக்களிடம் பேசத்துவங்கினார். ஆனால், அதில் யாரும் ஆர்வம் காட்டாததோடு, ஏன் இந்த வேலை என்றும் விமர்சித்துள்ளனர். எனவே, இது தொடர்பான ஆய்வுக்கட்டுரையை தானே எழுதினார். இதற்கும் வலுவான எதிர்ப்பு வந்ததை மீறி, தனது புரிதலை வலியுறுத்தி 1997 ல், அபெக்டிவ் கம்ப்யூட்டிங் புத்தகத்தை எழுதினார்.
இந்த புத்தகத்தில் தான், உணர்வுகள் சார்ந்த திறனை முன்வைத்து, இதற்காக புதிய துறை தேவை என்றும் வலியுறுத்தி, அபெக்டிவ் கம்ப்யூட்டிங் எனும் பெயரில் அதை அறிமுகம் செய்தார். செயற்கை நுண்ணறிவு தொடர்பாக 50 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், உள் உணர்வு கொண்ட கம்ப்யூட்டர் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் இருந்த போதாமைகளை சுட்டிக்காட்டியவர், கம்ப்யூட்டர் ஆய்வில் உணர்வுகளை கருத்தில் கொள்ளாததே இதற்கான மூலக்காரணம் என்றார்.
மனித மூளை செயல்படும் விதம் தொடர்பாக அவர் படித்த புத்தகமும் அவர் சிந்தனையில் தாக்கம் செலுத்தியது. உள்ளுணர்வு தொடர்பான மூளையின் பகுதியில் அவர் தனி கவனம் செலுத்தினார்.
உணர்வுகளின் தாக்கம்
மனிதர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உணர்வுகளை புரிந்து கொண்டு, அவற்றை கண்டறியும் திறன் கொண்ட மற்றும் சில தருணங்கள் அத்தகைய உணர்வும் கொண்ட நுட்பம் என்று அபெக்டிவ் கம்ப்யூட்டிங்கிற்கு விளக்கம் அளித்தார். புத்தகத்தின் துவக்கத்தில் இதை ஒரு முழக்கமாகவே அறிவித்தார். இதற்கான கோட்பாடுகளையும், வழிமுறைகளையும் புத்தகத்தில் விரிவாக விளக்கியிருந்தார்.
உணர்வுகளுக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை இல்லாவிட்டாலும், உணர்வு நோக்கிலான ஆய்வின் அவசியம் மற்றும் அடிப்படைகளையும் விவரித்திருந்தார். தான் முன்வைக்கும் புதிய வகை கம்ப்யூட்டிங், வழக்கமான உணர்வு கோட்பாடுகளில் இருந்து வேறுபட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். உணர்வு திறனை உள்ளடக்கியதோடு, மனித உணர்வுகளை கண்டறிந்து வெளிப்படுத்துவதோடு, மனித உணர்வுகளுக்கு எதிர் வினை ஆற்றும் திறனையும் கம்ப்யூட்டர்களுக்கு அளிப்பது முக்கியம் என தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு என்பது உள்ளுணர்வு சார்ந்த நுண்ணறிவை உருவாக்கும் இலக்கு கொண்டது என்பதற்கு மாறாக, கம்பயூட்டர்கள் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் பெற்றிருப்பது அவசியம் என வலியுறுத்தினார்.
இதற்கான தேவையையும் அவர் சுவாரஸ்யமான முறையில் விளக்கியிருந்தார். கம்ப்யூட்டருடனான தொடர்பில் மனிதர்களுக்கு ஏற்படும் ஏமாற்றம் மற்றும் கோபத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். கம்ப்யூட்டர்கள் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாததே இதற்கான காரணமாக சுட்டிக்காட்டினார்.

கிளிப்பி பாடம்
உதாரணத்திற்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம் எழுதுவதற்கான வேர்டு செயலியில், தானாக செயல்படும் கிளிப்பி எனும் அனிமேஷன் வடிவிலான சேவையை குறிப்பிட்டிருந்தார். அறிமுகமான காலத்தில் குறிப்பிடத்தக்க ஏஐ நுட்பம் சார்ந்ததாக இருந்ததை மீறி பயனாளிகள் இந்த சேவையை இடையூறாக நினைத்து எரிச்சலடைய காரணம், கிளிப்பி மனிதர்கள் நினைப்பதை புரிந்து கொள்ள முடியாததே காரணம் என விளக்கினார்.
பயனாளிகள் என்ன நினைக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளும் திறன் இருந்திருந்தால் கிளிப்பி சேவை பயனுள்ளதாக உணரப்பட்டிருக்கும் என்றார். இதே அடிப்படையில் பயனாளிகள் சோகமாக இருப்பதை அல்லது கோபமாக இருப்பதை கம்ப்யூட்டர்கள் புரிந்து கொள்ளும் திறன் பெற்றிருப்பது அவசியம் என்றார்.
மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் போது அவர்கள் உணர்வுகளை அறிந்திருக்கும் கம்ப்யூட்டர் தேவை என்றும் வலியுறுத்தினார். இப்படி மனித உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய கம்ப்யூட்டர் அமைப்புகளை உருவாக்குவதன் மூலம், நுண்ணறிவின் பலனை விரிவாக்கலாம் என்றார்.
மனித உணர்வுகள் சிக்கலானவை என்பதால், இவற்றை உணரும் திறனை கம்ப்யூட்டர்கள் பெற வைப்பதும் சவாலானவை என்றாலும் இந்த அம்சத்தையும் நுண்ணறிவு ஆய்வு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். பயனாளி மகிழ்ச்சியாக இருக்கிறார் அல்லது சோகமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய கம்ப்யூட்டர்களின் நடைமுறை பயன்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய பாதை
இந்த புத்தகம் வெளியான பிறகு, உணர்வு நிலை சார்ந்த கம்ப்யூட்டர் திறனுக்கான தேவை பரவலாக உணரப்படு இது தொடர்பான ஆய்வுகளும் தீவிரமாகியுள்ளன. உணர்வுகளை உணரும் கம்ப்யூட்டர் திறன் மூலம் கற்றல் குறைபாடு தொடர்பான ஆய்வுகளிலும் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உணர்வு நிலை ஆய்வு சார்ந்த இரண்டு நிறுவனங்களை ரோசலின் உருவாக்கியிருக்கிறார். இத்துறைக்கான ஆய்வு கூடத்தையும் வழி நடத்துகிறார். உணர்வு நிலை சார்ந்த ஆய்வில், கம்ப்யூட்டர்கள் மனித உணர்வை பெற வைக்கும் முயற்சியில் உள்ள போதாமைகள் மனித உணர்வு தொடர்பான புரிதலை மேம்படுத்த உதவுவதாகவும் ரோசலின் கருதுகிறார்.
உணர்வு திறன் கொண்ட கம்ப்யூட்டர் ஆய்வில் கவனம் செலுத்தினாலும், உள் உணர்வு கொண்ட நுண்ணறிவு என்பது எட்டாக்கனி என ரோசலின் தீவிரமாக நம்புகிறார். உள் உணர்வை கம்ப்யூட்டர்களுக்கு அளிக்கும் முயற்சியில் எதிர்படும் போதாமைகள், மனித உள் உணர்வையே நாம் இன்னமும் முழுவதுமாக புரிந்து கொள்ளாததை உணர்த்துவதாகவும் கருதுகிறார்.
மனிதர்களை போலவே செயல்பட முயற்சிப்பதற்கு பதில் உணர்வு திறன் நோக்கில் கம்ப்யூட்டர்களை மேம்படுத்த வேண்டும் என கூறுபவர், சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட்கள் மனித தோழமையாக பார்க்கப்படுவது ஆபத்தானது என எச்சரிக்கிறார். வர்த்தக நோக்கிலான ஆய்வு முயற்சிகளே இத்தகைய குறுகிய நோக்கிலான செயல்பாடுகளுக்கு காரணம் என்றும் கடுமையாக விமர்சிக்கிறார்.
Edited by Induja Raghunathan

