மெட்ரோ ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பாக வீடு செல்ல பெண்கள் ஓட்டும் பைக்-டாக்சி அறிமுகம்!
பெண்கள் மெட்ரோ ரயிலில் மட்டுமல்ல, அவர்கள் வீடு வரை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் வகையில் அசத்தலான நடவடிக்கையை மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ளது.
பெண்கள் மெட்ரோ ரயிலில் மட்டுமல்ல, அவர்கள் வீடு வரை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் வகையில் அசத்தலான நடவடிக்கையை மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ளது.
பெண் பயணிகளின் பிரத்யேக பாதுகாப்பிற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்கள் இயக்கும் பைக் டாக்ஸி சேவையை மெட்ரோ நிர்வாகம் தொடங்கியுள்ளது.
மெட்ரோ நிர்வாகம் அதிரடி:
கூட்ட நெரிசல் இல்லை, காலதாமதம் இல்லை, செல்ல வெண்டிய இடத்திற்கு சிறப்பாக சென்று சேர உதவுவதால் மெட்ரோ ரயிலில் தினமும் 2.10 லட்சம் முதல் 2.50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதனால் மெட்ரோ நிர்வாகம் சென்னையில் வழித்தடங்களை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது.
சிசிடிவி கேமராக்கள் மூலமாக மெட்ரோ ரயில் நிலையங்களை தீவிரமாக கண்காணிப்பது, மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தப் பகுதிகளில் யாராவது தேவையின்றி நீண்ட நேரம் காத்திருப்பதை கண்டால் பாதுகாவலர்கள் மூலம் அவர்களை அப்புறப்படுத்துவது என பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

தற்போது பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை பாராட்டுக்களை குவித்து வருகிறது.
பெண்கள் மட்டுமே இயக்கும் பைக் டாக்சி:
மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பாக செல்லும் வகையில், பெண்களே இயக்கும் இணைப்பு வாகன வசதி தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக பைக்-டாக்சி சேவை வழங்கும் Rapido நிறுவனத்துடன் மெட்ரொ ரயில் நிர்வாகம் கைக்கோர்த்துள்ளது.
சென்னை மெட்ரோவின் இயக்குனர் (அமைப்புகள் மற்றும் செயல்பாடுகள்) ராஜேஷ் சதுர்வேதி நந்தனத்தில் சேவைகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சதீஷ் பிரபு, உதவி பொது மேலாளர் (ரோலிங் ஸ்டாக்), ரேபிடோ அதிகாரிகள், உயர் அதிகாரிகள் மற்றும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சென்னை மெட்ரோ மற்றும் ரேபிடோவின் முயற்சியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மொத்தம் ஐம்பது பெண்கள் பைக் டாக்ஸி சேவை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்குகள், தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை மற்றும் அரசு எஸ்டேட் ஆகியவை அடங்கும். இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில்,
“தேவைக்கு ஏற்ப அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் சேவைகள் விரிவுபடுத்தப்படும். இந்த முயற்சி மெட்ரோ ரைடர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு நம்பகமான போக்குவரத்து விருப்பத்தை வழங்கும் அதே வேளையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்,” எனத் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு வசதியான மற்றும் கடைசி நிறுத்தம் வரையிலான பாதுகாப்பான சேவையை வழங்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நிலையானது என்றும், பெண்களுக்கு ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Rapido பைக்-டாக்சி என்பது வாடிக்கையாளர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பைக்கில் அழத்துச்செல்வதாகும். இதில் தொலைவுக்கு ஏற்றபடி கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பைக்-டாக்சி சேவை பெரும்பாலும் ஆண்களால் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பெண்கள் ஓட்டும் பைக்குகளை மெட்ரோ ஸ்டேசன்களில் அறிமுகப்படுத்தி இருப்பது, பெண் பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.

