ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் ‘Zeiss புத்தாக்க மையம்’ தொடக்கம்!
ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட ZEISS, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் (IITMRP) பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஸ்டார்ட்-அப்’கள் மற்றும் தொழில்துறையினரை ஒன்றிணைத்து நீண்டகால ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டு மாற்றத்தை வேகப்படுத்த 'ZEISS Innovation Hub’-ஐ இன்று தொடங்கியது.
ஒளியியல் (Optics) மற்றும் ஒளியியல் மின்னணுவியல் (Optoelectronics) துறைகளில் சர்வதேச அளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட ZEISS, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் (IITMRP) தனது புதிய 'ZEISS Innovation Hub’-ஐ இன்று தொடங்கியது.
இந்த தொடக்க விழாவில் ZEISS நிறுவனம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவின் தலைமைக் குழுவினர் பங்கேற்றனர். குறிப்பாக, ZEISS குழுமத்தின் தலைவரும் முதன்மை செயல் அதிகாரியுமான ஆண்ட்ரியாஸ் பெச்சர், சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவின் குழும முதன்மை செயல் அதிகாரி நடராஜன் மலுபிள்ளை, ஆராய்ச்சிப் பூங்காவின் நிறுவனர் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா, கார்ப்பரேட் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் புதுமை மேலாண்மைத் தலைவர் முனைவர் மேக்ஸ் ரீடல், ZEISS இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மிகுயெல் கோன்சாலஸ் டயஸ், அந்நிறுவன முதன்மை நிதி அதிகாரி தவால் ரேடியா மற்றும் சென்னை ZEISS புதுமைப் படைப்பு மையத் தலைவர் முனைவர் ஓஷின் பெல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மையம், ZEISS நிறுவனத்தின் உலகளாவிய ஆராய்ச்சி வலைப்பின்னலுக்கும் சென்னை ஐஐடி சூழலமைப்பிற்கும் இடையிலான கூட்டுப் பங்களிப்பை வலுப்படுத்தும். பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஸ்டார்ட்-அப்’கள் மற்றும் தொழில்துறையினரை ஒன்றிணைத்து நீண்டகால ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டு மாற்றத்தை வேகப்படுத்தும் நோக்கில் இது செயல்படும்.
இந்த மையம், மேம்பட்ட குறைந்த செலவிலான பொறியியல் (Advanced Frugal Engineering), கடுமையான சூழல்களுக்கான ஒளியியல் (Harsh-Environment Optics), இயந்திரனியல் (Robotics) மற்றும் திரவ இயக்கவியல் (Fluid Dynamics) உள்ளிட்ட துறைகளில் முக்கிய கவனம் செலுத்தும்.
மேலும், நிஜ உலக தொழில்முறை பயன்பாடுகளை மையமாகக் கொண்ட பலதுறை கூட்டு ஆராய்ச்சியை (Interdisciplinary Research) இம்மையம் ஊக்குவிக்கும். ஆராய்ச்சியாளர்கள் பரிமாற்றம், முதுகலை ஆராய்ச்சி மற்றும் ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள், பட்டதாரிகளுடனான நெருக்கமான ஈடுபாட்டிற்கும் இது ஆதரவளிக்கும்.
தொடக்க விழாவில் Zeiss குழுமத்தின் தலைவரும் முதன்மை செயல் அதிகாரியுமான ஆண்ட்ரியாஸ் பெச்சர் பேசுகையில்,
“அறக்கட்டளைக்குச் சொந்தமான நிறுவனம் என்ற வகையில், ZEISS எப்போதும் புதுமைப் படைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு நீண்டகால அணுகுமுறையையே பின்பற்றி வருகிறது. இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் புதுமைச் சூழலமைப்பு மீதான எங்களது நம்பிக்கையையும், முக்கிய உத்திசார் சந்தையாக அதன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும் இந்தியாவில், சென்னையில் இந்த மையத்தை நிறுவியிருப்பது பிரதிபலிக்கிறது," என்றார்.
புரட்சிகரமான தொழில்நுட்பங்களை முன்னெடுப்பதிலும், எங்கள் வாடிக்கையாளர்கள், கூட்டாளிகள் மற்றும் ஆராய்ச்சி சமூகத்துடனான ஆழமான கூட்டுறவை வளர்ப்பதிலும், நிலையான மதிப்பை உருவாக்கும் புதுமைகளை வேகப்படுத்துவதிலும் நாங்கள் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளோம். சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் உள்ள துடிப்பான சூழலமைப்பு, எதிர்காலத் தேவைகளுக்கான தீர்வுகளை இணைந்து உருவாக்கவும், இந்தியா மற்றும் உலகிற்கான அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை வடிவமைக்கவும் சிறந்த தளத்தை வழங்கி உள்ளது, என்று தெரிவித்தார்.
”இன்றைய ஆராய்ச்சிகளை நாளைய பயன்பாடுகளாக மாற்றும் நோக்கத்துடன் Zeiss-இன் புதுமைப் படைப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிக திறனுடைய தொழில்நுட்பங்களை அடையாளம் காண்பது, அவற்றின் சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்துவது மற்றும் அடுத்த பத்து ஆண்டுகள் மற்றும் அதற்கு அப்பாலும் தொழில்துறைகளை வடிவமைக்கக்கூடிய புதுமைகளை வேகப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். புதிய மையம், Zeiss நிறுவனத்தின் உலகளாவிய ஆராய்ச்சித் தடத்தை மேலும் விரிவுபடுத்துவதோடு, ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவின் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சித் திறனாளர்கள் மற்றும் ஆழ் தொழில்நுட்பப் புதுமைச் சூழலமைப்புடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை உருவாக்கும்,” என்றார்..
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் அடைகாப்பக மையத்தின் (Incubation Cell) குழும முதன்மை செயல் அதிகாரி நடராஜன் மலுபிள்ளை இந்த புத்தாக்க மையம் பற்றி பேசுகையில்,
“ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் Zeiss புதுமைப் படைப்பு மையம் நிறுவப்படுவது எங்கள் இரு நிறுவனங்களுக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். துல்லிய ஒளியியல், நுண்நோக்கியியல் (Microscopy) மற்றும் மேம்பட்ட பொறியியல் துறைகளில் இந்நிறுவனம் 180 ஆண்டுகால இணையற்ற தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளது. அதேவேளையில், ஐஐடி ஆராய்ச்சிப் பூங்கா இந்தியாவின் மிகவும் துடிப்பான ஆழமான தொழில்நுட்பப் புதுமைச் சூழலமைப்புகளில் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த பரஸ்பர பலன்களை ஒன்றிணைப்பதன் மூலம் அதிநவீன எல்லைப்புற ஆராய்ச்சியை வேகப்படுத்தவும், சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், தொழிலத்துறை மற்றும் சமூகம் ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் தனித்துவமான புதுமைப் படைப்புச் சிறப்பை உருவாக்கவும் நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்றார்.

Zeiss நிறுவனம் இணைந்ததன் மூலம், ஆராய்ச்சி சார்ந்த கூட்டுப் பங்களிப்பை நாடும் சர்வதேச பெருநிறுவனங்களுக்கான இந்தியாவின் முக்கிய முகவரியாகத் தனது நிலையை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்கா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
இன்று இந்தச் சூழலமைப்பு, 250-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்கள், ஆய்வகங்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் சிறப்பு மையங்களை (Centres of Excellence) ஒன்றிணைத்துள்ளது. இது கூட்டு ஆராய்ச்சி, திறனாளர்கள் மேம்பாடு மற்றும் பல்வேறு ஆழ் தொழில்நுட்பத் துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

