மெர்ச்சன்ட் பேங்கிங் உரிமம் பெற Sebi-யிடம் Zerodha நிறுவனம் விண்ணப்பம்!
செபியின் பதிவுகளின்படி, Zeroda நிறுவனத்திற்கு முழுச் சொந்தமான (Zerodha Corporate Advisors Pvt Ltd) என்ற துணை நிறுவனம் மூலம் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது பரிசீலனையில் உள்ளது.
ஆன்லைன் பங்கு வர்த்தக நிறுவனமான ஜீரோதா (Zerodha), தனது நிதிச் சேவை சலுகைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மூலதன சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியிடம் (Sebi) மெர்சன்ட் பேங்கிங் (Merchant Banking) உரிமத்திற்காக விண்ணப்பித்துள்ளது.
செபியின் பதிவுகளின்படி, Zeroda நிறுவனத்திற்கு முழுச் சொந்தமான 'செரோதா கார்ப்பரேட் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட்' (Zerodha Corporate Advisors Pvt Ltd) என்ற துணை நிறுவனம் மூலம் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது பரிசீலனையில் உள்ளது.
இந்த உரிமம் கிடைத்தால், ஜீரோதா நிறுவனத்தால் புதிய பங்கு வெளியீடுகளை (IPOs) நிர்வகிக்கவும், நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது குறித்து ஆலோசனைகளை வழங்கவும் மற்றும் இதர மெர்சன்ட் பேங்கிங் சேவைகளை வழங்கவும் முடியும். தற்போதைய நிலையில், இந்த புரோக்கிங் நிறுவனம் 1.6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு, ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான ஆர்டர்களைக் கையாண்டு வருகிறது.
இது தவிர, 'ஜீரோதா ஏஎம்சி' (Zerodha AMC) மூலம் தனது சொந்த மியூச்சுவல் ஃபண்ட் செயல்பாடுகளையும் இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது. செபியின் இணையதளத் தரவுகளின்படி, இன்கிரெட் கேபிட்டல் ஃபைனான்சியல் சர்வீசஸ், நியோ வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் சொசைட்டி ஜெனரல் செக்யூரிட்டீஸ் இந்தியா உள்ளிட்ட மேலும் 12 நிறுவனங்களும் மெர்சன்ட் பேங்கிங் உரிமத்திற்காக விண்ணப்பித்துள்ளன.
முன்னதாக, டிசம்பர் 2025ல், மெர்சன்ட் பேங்கர்களை நிர்வகிக்கும் விதிகளில் செபி திருத்தங்களை மேற்கொண்டது. இதன் மூலம் நிகர மதிப்பு மற்றும் திரவ நிகர மதிப்பு (liquid net worth) தேவைகளை மாற்றியமைத்ததோடு, தனித்தனி வணிகப் பிரிவுகள் மூலம் செயல்பாடுகளைப் பிரிப்பதற்கான ஒரு கட்டமைப்பையும் அறிமுகப்படுத்தியது.
இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் காரணமாக, கடந்த சில காலங்களாக புதிய பங்கு வெளியீட்டு (IPO) சந்தை மந்தமாகவே இருந்தது. இருப்பினும், இரு நாடுகளும் தற்போது ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், பங்குச் சந்தையில் மீண்டும் சில மறுமலர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு இந்திய ஸ்டார்ட்-அப் சூழலுக்கு ஓரளவு நல்ல ஆண்டாக அமைந்ததுடன், டஜனுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொதுப் பங்குகளை வெளியிட்டன. இந்த வேகம் 2026ஆம் ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய கிழக்கு பதற்றங்கள் இந்தத் திட்டங்களைத் தடம் புரளச் செய்தன.
இருப்பினும், பல இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. இதில், சுமார் ரூ. 8,000 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ள குவிக் காமர்ஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனமான 'ஜெப்டோ' (Zepto) மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இது தவிர, 'ஃபோன்பே' (PhonePe) நிறுவனமும் பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (IPO) திட்டங்களை வரிசைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: முத்துகுமார்
