அரிசி முதல் ஆடு வரை; பைக் முதல் டிராக்டர் வரை; பாத்திரக் கடையே சீர்வரிசை: கொரோனா பஞ்சத்தில் ஓர் பிரம்மாண்ட திருமணம்!
200 பவுன் நகை, கார், பைக், டிராக்டர், அண்டா, குண்டா, அரிசி மூடை, ஆடு என எக்கசக்க சீர்வரிசையுடன் நடந்த பிரம்மாண்ட திருமணம், இணையத்தில் டிரெண்டாகி பேசுபெருளாகியுள்ளது.
கொரோனா சூழலில் வறுமை அதிகரிப்பு ஒரு புறமிருக்க, வரதட்சணைக்கு எதிராக ஒரு போரை நடத்தும் சமுதாயத்தில், அதை ஊக்குவிக்கும் வகையில் மதுரையில் பிரம்மாண்ட சீர்வரிசைகளுடன் முன்னாள் எம்எல்ஏ மகள் திருமணம் நடந்திருப்பது விவாதம் ஆகியுள்ளது.
மதுரையில் உள்ள பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் கடந்த முறை மதுரை கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வாகவும், தற்போது மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆகவும், மதுரை மாவட்ட ஆவின் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் இவருடைய மகள் ஆர்த்தியுடைய திருமணத்தை வெகு விமர்சையாக நடத்தி முடித்துள்ளார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடந்த திருமணத்தில், மண்டபத்தில் பாதியை சீர்வரிசைகளால் நிரப்பி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கொடி மங்கலத்தை சேர்ந்த வைத்தியநாதன் என்பவருடைய மகன் வெற்றிவேலுக்கும், ஆர்த்திக்கும் கடந்த 4ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது.
திருமணத்தன்று பொண்ணுக்கு கொடுத்த சீர்வரிசைகளின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வெளியாகி டிரெண்டாகியது.
மாப்பிள்ளைக்கு ராயல் என்பீல்ட் பைக், பொண்ணுக்கு ஸ்கூட்டி, கார், டிராக்டர் ஆகிய வாகனங்கள் மண்டபத்தில் வெளியில் மாலையுடன் நின்று கொண்டிருக்க, பித்தளை, செம்பு, எவர் சில்வர் என ரகரகமான மெட்டலில் அண்டா, குண்டா, குடங்களை பெண்கள் தலையில் சுமந்து வரிசையாக நடந்துவரும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருந்தன.
கல்யாணம் மண்டபத்தில் அரிசி மூட்டைகள், பருப்பு, கோதுமை, சோப்பு, சீப்பு என வீட்டுக்குத் தேவையான பொருள்கள் ஒரு புறமாக நிரம்பி கிடக்க, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்களான ப்ரிட்ஜ், வாசிங் மெஷின், ஏசி, பேன், தொடங்கி அனைத்து மின்சாதன பொருட்களும், ஸ்பூன் தொடங்கி பெரிய அண்டா வரை அத்தனை வகையான சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்களும் லைன் கட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பு சீர்வரிசை வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. போதும், போதும், லிஸ்ட் ரொம்ப பெரிசா போகுதே என்ற வகையில் வழங்கப்பட்ட சீர்வரிசையில் பெண்ணுக்கு 200 பவுன் நகையும், ஆடுகளும் அடக்கம்.
ஒரு புறம் வரதட்சணை கொடுமையால் கடலூரில் பெண் ஒருவர் தற்கொலை செய்த நிலையில், வரதட்சணைக்கு எதிராக ஒரு போரை நடத்தும் சமுதாயத்தில் வரதட்சணை வழங்குவதை ஊக்குவிக்கும் விதத்தில் நடந்த திருமணம் குறித்து நெட்டிசன்கள் கருத்துகளை பதிவு செய்துவருகின்றனர். அதேபோல், கொரோனா காலத்தில் மக்கள் கஷ்டப்படும் வேளையில், முன்னாள் எம்எல்ஏ வீட்டில் நடந்துள்ள பிரம்மாண்ட கல்யாணம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வலுவான கருத்துகளுடன், வாய்விட்டு சிரிக்கும் வகையில்,
‘மகளையும் குடுத்து மாப்பிள்ளைக்கு ஒரு பாத்திரக் கடையும் வச்சு குடுத்து இருக்கிறார்.
‘இங்க என்னனா 90ஸ் கிட்ஸுகளுக்கு ஒரு பொண்ணு கூட தர மாட்றானுங்க',
‘ஒரு கிராம் கூட தங்கம் வேண்டாம், பெண்ணை மட்டும் கொடுங்கள் வாழ்க்கை முழுவதும் தங்கம் போல், இமைக்குள் வைத்து காத்து கொள்கிறேன்-இப்படிக்கு 90'ஸ் குழந்தைகள்' என்பன போன்ற கலாய் கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றன.