ஆடல், பாடல், பறந்து வந்த உணவு: ஆடம்பரமாய் நடந்து முடிந்த பில்லினியர் வீட்டு நிச்சயம்!
இந்தியாவே மூக்கில் விரல் வைக்குமாறு ஆடம்பரமாக நடந்து முடிந்துள்ள முகேஷ் அம்பானி வீட்டு நிச்சயதார்த்த விழாவின் சிறப்பம்சங்களை பார்ப்போம்...
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி-நீத்து அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரியின் மகளான ஸ்லோகாவிற்கும் கடந்த மாதம் 30ம் தேதி, மும்பையில் உள்ள ஆண்டலியா வீட்டில் மிகவும் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியே மெஹந்தி, சங்கீத், நிச்சயம் என்று மூன்று நாள் கொண்டாட்டமாக நடந்தேறியது. பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மணமகள் ஸ்லோகாவின் அப்பா ரஸ்ஸல் மேத்தா ஒரு வைரவியாபாரி. ஸ்லோகாவும், ஆகாஷூம் பள்ளிப் பருவத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். நட்பு காதலாகி, காதல் திருமணத்தில் முடிய இருக்கிறது.
மணமக்களின் ஆடையில் தொடங்கி, ஆபரணங்கள், பார்ட்டி, சாப்பாடு, கலை நிகழ்ச்சி என 100 கோடிக்கு மேல் செலவாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. மணமகனின் அப்பாவோ இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர், மணமகளின் அப்பாவோ பல மில்லியன் டாலர் சொத்துமதிப்பு கொண்ட வைர வியாபாரி, பின்னர் அவர்களது வீட்டு விழாவில் ஆடம்பரத்திற்கு என்ன பஞ்சம் இருக்கப் போகிறது.
ராஜா வீட்டுக் கல்யாணம் போல் நடந்து முடிந்த இந்த நிச்சயதார்த்தத்தைப் பார்த்தவர்கள், ‘இதுவே இப்படியென்றால் திருமணம் இன்னும் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்’ என டிசம்பரில் நடைபெற உள்ள இவர்களது திருமணத்தை மிகவும் ஆர்வமாக இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.
தங்க எழுத்துக்களால் ஆன அழைப்பிதழ்:
முன்னதாக இந்த நிச்சயதார்த்த விழாவிற்காக உருவாக்கப்பட்ட அழைப்பிதழே, இந்த விழா எப்படி கோலாகலமாக நடைபெறப் போகிறது என்பதைச் சொல்லும் முன்னோட்டமாக அமைந்திருந்தது. அழகிய பெட்டி போன்ற கோவில் வடிவில் உருவாக்கப்பட்ட இந்த அழைப்பிதழில் மணமக்களின் பெயர்கள் தங்கத்தால் ஆன எழுத்துக்களால் உருவாக்கப்பட்டிருந்தது. அழகிய இசையோடு பிள்ளையார் சிலை ஒன்றும் அதனுடன் இணைந்திருந்தது. ஒரு அழைப்பிதழின் மதிப்பு மட்டும் ஒரு லட்ச ரூபாய்க்கு அதிகம் எனச் சொல்லப்பட்டது. அந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகவும் பரவியது.
மிஸஸ் அம்பானியின் அமர்க்களமான நடனம்:
ஆகாஷின் நிச்சயதார்த்த விழாவில் அனைவரையும் ‘ஆஹா’ சொல்ல வைத்த மற்றொரு விஷயம், நீத்து அம்பானியின் அமர்க்களமான நடனம். பிரபல நடனக் கலைஞரான அவர், தனது மகனின் நிச்சயதார்த்த விழாவில் இரண்டு நடனம் ஆடி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பணக்கார வீட்டு விஷேசங்களில் நடன நிகழ்ச்சிகள் வைப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், மணமகனின் தாயாரே இப்படி கண்களுக்கு நடன விருந்து வைப்பார் என நிச்சயம் ஆகாஷின் நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
குவிந்த பிரபலங்கள்:
திரைவிழாவா என சந்தேகம் எழும் வகையில், இந்த நிச்சயதார்த்த விழாவில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் தங்களது மகளோடு வந்திருந்தனர். நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதலர் நிக்குடன் இந்த விழாவில் கலந்து கொண்டார். இவர்கள் தவிர, வித்யா பாலன், கஜோல், ஷாரூக்கான், ஷாகீத் கபூர் என பாலிவுட் திரைபிரபலங்கள் அனைவரும் இதில் கலந்துக் கொண்டனர். கிரிக்கெட் துறையில் சச்சின், ஹர்பஜன் சிங், ஜகீர் கான் என பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சச்சின், ஷாருக்கானுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் எடுத்த செல்பி இன்ஸ்டாகிராமில் லட்ச லட்சமாக லைக்குகளை அள்ளி வருகிறது.
பறந்து வந்த உணவுகள்:
இந்த நிச்சயதார்த்தத்திற்கு உணவுப்பொருட்கள் French luxury bakery Laduree - யில் தயாரிக்கப்பட்டது. மேக்கரோன்ஸ், ஐசிங் சுகர், ஆல்மண்ட் போன்றவவை இங்கு பிரபலமானவை. International gourmet brands லண்டன் மற்றும் நியூயோர்க்கில் இருந்து வரவழைக்கப்பட்டன. நிச்சயதார்த்த விழாவில் இத்தாலி, குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி என மூன்று கவுண்டர்களில் விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டன. ஆங்காங்கே குடைகளில் சாக்லெட்டுகளைக் கட்டித் தொங்க விட்டிருந்தனர். விருந்தினர்கள் விரும்பிய உணவு அவரவர் இருக்கைக்கே வந்து தரையிறங்கியது. ஆம் சர்வர்கள் இங்கு உணவு பறிமாறவில்லை, சிறிய பலூன் மூலம் கேட்ட உணவு பறந்து வந்து டேபிளுக்கு இறங்கியதை அனைவரும் ஆச்சர்யத்தில் அனுபவித்தனர்.
ஆடம்பர அலங்காரம்:
மலர்த் தோட்டத்திற்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்தும் வகையில் விதவிதமான அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மணமக்கள் நிற்கும் மேடை உட்பட விழா நடந்த இடம் முழுவதும் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்து. இது விருந்தினர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.