நாம் தட்டிக்கழிப்பது மற்றவர் தட்டிற்கு: 'நோ ஃபூட் வேஸ்ட்' பத்மநாபன்
பத்மநாபனின் தந்தை அவரிடம் பேசுவது இல்லை. தாய் அவருக்கு துணையாக நின்றாலும், அவருக்கும் மனதில் கவலை உண்டு. ஏன் என்றால்,பொறியியல் கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு மாணவனின் பெற்றோருக்கும் அவர்களின் பிள்ளை, ஒரு நல்ல நிறுவனத்தில் வேலையில் சேர, "பிலேஸ்மெண்ட்" என்ற தடையை தாண்ட வேண்டும் என்ற கனவு இருக்கும். அது தற்போது சமூகக் கடமை போல் ஆகிவிட்டது. அப்படி இருக்க இந்திய அளவில் 10 நபர்களில் ஒருவராக தேர்வான பத்மநாபன் அந்த வேலையை வேண்டாம் என்று உதறியது அவரின் பெற்றோரை அதிர்ச்சியில் தள்ளியதோடு பெருங்கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சரி அவர் வேறு என்ன செய்கிறார்? விணாக குப்பைக்கு செல்லும் உணவுகளை சேகரித்து, இல்லாதவர்களுக்கு அளிக்கின்றார். அவரது தன்னார்வ தொண்டு அமைப்பான "நோஃபூட் வேஸ்ட்" (No Food Waste) பற்றி இப்படி ஒரு வரியில் கூற இயலும், ஆனால் 24 வயதில் அவர் சாதித்துள்ள விஷயங்கள் கணக்கில் அடங்கா.
2014 ஆம் ஆண்டு கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அனைவருக்கும் பிடித்த மாணவனாக, மேலும் மாணவர் தலைவனாக பத்மநாபன், உற்பத்தித் துறையில் படிப்பை முடித்து தனது கனவினை நோக்கி பயணிக்க துவங்கினார். இரண்டாம் ஆண்டு முதலே, அவரது சிந்தனை மற்றும் செயல், தனித்தன்மை வாய்ந்ததாக இருந்துள்ளது.
1000 மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ஒரு காகிதம் கூட வீணடிக்காமல், 24000 காகிதங்களை இவரும், இவரது துறை மாணவர்களும் சேமித்துள்ளனர்.
தன்னுடைய இலக்கு, மாறுபட்ட சிந்தனை உருவாகிய கதையை தமிழ் யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்து கொண்டார் பத்மநாபன்.
ஸ்பைஸ்(S.P.I.C.E):
"ஸ்பைஸ்" என்ற அவர் ஆரம்பித்த நிறுவனம் மூலம், மாற்றுக் கல்வியை, ஒரு நாள் கட்டணம்-ஒரு மாணவனுக்கு-ஒரு ருபாய் என்ற முறையில், பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு பள்ளிகளில் கிடைக்கும் செயல்முறைக் கல்வியை, அரசு பள்ளிகளில் உள்ள பிள்ளைகளுக்கும் கொண்டு சேர்க்கும் பணியை துவங்கினார். அப்படி ஒவ்வொரு பள்ளியாக சென்ற போதுதான் "நோ ஃபூட் வேஸ்ட்" டிற்கான விதையும் விழுந்தது.
“பள்ளிகளில், பிள்ளைகளோடு உணவு உண்கையில், அவர்கள் உணவை வீணாக்குவதை கண்டேன். ஒரு பள்ளியில், ஒரு நேரத்திற்கு மட்டும் 12 – 16 கிலோ வரை உணவு வீணாகிறது என்று எடைபார்க்கையில் தெரிந்தது. பள்ளிகளில் இப்படி என்றால், திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்களில் வீணாவது இன்னும் அதிகம் என்று உணர்ந்தேன்" என்கிறார் பத்மநாபன்.
அதே நேரத்தில் நாளிதழில், பெங்களுருவில் 6 மாத இடைவெளியில் 84000 திருமணங்கள் நடந்தது என்றும், அதில் 9.47 லச்சம் கிலோ , நல்ல தரமான உணவு வீணாகியது என்றும் ஒரு கட்டுரை படித்தேன். அதன் மதிப்பு 400 மில்லியன் ஆகும்.
கோவையில் உள்ள , திருமண மண்டபங்களில், ஒவ்வொரு திருமணத்தின் போதும், 75 முதல் 80 நபர்கள் உண்ணும் உணவு வீணாகிறது என்று தெரிய வந்தது. அதை, அவர்கள் அரைக்கும் எந்திரத்தில் அரைத்து, கூழாக மாற்றி, சாக்கடையில் கொட்டுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார் பத்மநாபன்.
சீனாவோடு அனைத்து விஷயங்களிலும் போட்டி போடும் இந்தியா, உணவை விணாக்குவது பற்றிய ஐநா சபையின் அறிக்கைப்படி பல நாடுகளை விட மிஞ்சி நிற்கின்றது.
"வருடத்திற்கு 870 மில்லியன் மக்கள் உணவின்றி தவிக்கையில் நாம் 1.3 பில்லியன் டன் உணவை வீணாக்குவது தவறு என்று என் மனம் உறுத்தியது அன்று” என்கிறார் பத்மநாபன்.
துவக்கம்
உணவை வீணாக்கக் கூடாது என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்த ஒன்று. எனவே அதே கருத்தை மீண்டும் நாம் வலியுறுத்தினால், மனதில் பதியாது என்று, அந்த கருத்தை ஆய்வுகள் மூலம் பலமாக மனதில் பதிய வைக்க பத்மநாபன் முடிவெடுத்தார். எனவே முதலில் 100 பள்ளிகளை தேர்வு செய்து, அந்த பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மதிய உணவு வீணாவதை கணக்கேடுப்பது எப்படி என கற்றுக்கொடுத்து, அவர்களை அவர்கள் பள்ளிகளில் ஆய்வு செய்ய வைத்துள்ளார். பின்பு அவர்களை வைத்தே அவர்கள் பள்ளி மாணவர்களிடம் பேச வைத்துள்ளார்.
இதற்கு பலனாக, உணவு வீணாகும் அளவு குறைவது, மற்றும் வீணாக்குபவர்கள் அதை உணர்வது என்ற இரண்டு விஷயங்கள் நடந்துள்ளது. அப்போது தான் அவர் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு கேள்வியை, ஒரு சிறுமி பத்மநாபனிடம் கேட்டாள்.
துவக்கப்பொறி
பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் மழலையர் பள்ளியில் உணவு வீணாவதை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பத்மநாபனிடம் வந்த ஒரு சிறுமி, "நாங்க டைனிங் அறைக்கு சாப்பிட போறதுக்கு முன்னாடியே இலையில எல்லா சாப்பாட்டையும் வெக்கறாங்க, அப்பறம் எப்படி அங்கிள் நாங்க வேஸ்ட் ஆக்காம இருக்கறது ??"
இதை'கேட்ட பின்பு, சமூகத்திற்கு தற்போது தேவைப்படுவது செயல்வீரர்கள் தான் என்பது அவருக்கு புரிந்துள்ளது.
எனவே உடனடியாக , உணவு வீணாவதை தடுக்க ஒரு அவசர அலைபேசி எண்: 9087790877 துவக்கியுள்ளர் பத்நாபன்
அடுத்து கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தன்னோடு விடுதியில் தங்கி இருந்த சுதாகர் மற்றும் தினேஷிடம் இதை பற்றி கூறியுள்ளார். அடுத்த நாளே சுதாகர் தனது சொந்த ஊர் நாமக்கலில் இருந்து தனது இருசக்கர வாகனத்தோடு கோவை வந்துவிட்டார். "ஃபூடிவா" (foodivaa) என பெயர் வைத்து வீணான உணவை சேகரித்து இல்லாதவர்களுக்கு அளிக்கும் சேவையை இருவரும் சேர்ந்து செய்யத் துவங்கியுள்ளனர்.
"முதலில் இரவு பனிரெண்டு மணிக்கெல்லாம் அழைப்பு வரும். 50 நபர்களுக்கான உணவு உள்ளது, 60 நபர்களுக்கான உணவு உள்ளது என்று கூறுவார்கள். அதை பெற்று இல்லாதவர்களிடம் சேர்ப்பது என்பது எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை தந்தது" என்கிறார் பத்மநாபன்.
மேலும் உணவை கொண்டு செல்வதோடு சவால்கள் முடிந்துவிடவில்லை. அதை தேவையானவர்களிடம் சேர்ப்பது என்பது அதை விடவும் மிகபெரிய சவாலாகும். சேரிகளில் உள்ள மக்களிடம் சென்று கொடுத்தால் அவர்கள் மனது அதை பெற அனுமதிக்காது என்பதை உணர்ந்த பத்மநாபன், அவர்களில் ஒருவரை வைத்தே அந்த உணவை அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வைத்துள்ளார். இப்படி எங்கெல்லாம் உணவு தேவைப்படுகின்றதோ அங்கெல்லாம் ஒருவரை தேர்ந்தெடுத்து பகிர்ந்து கொடுக்க நியமித்துள்ளார். முதலில் கோவையில் மட்டும் இருந்த இவர்களது சேவை, தற்போது தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் விரிவடைந்துள்ளது.
மறக்க முடியாத அனுபவம்
இதை செய்யவே இறைவன் என்னை படைத்தான் என்று தான் உணர்ந்த தருணமாக ஒரு நிகழ்வை பத்மநாபன் கூறினார். "இரவு 9 மணி, மதுக்கரையில் உணவு உள்ளது என்று அலைபேசி எண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது. வண்டியின் சாவியை சுதாகர் தனது ஊருக்கு தெரியாமல் கொண்டு செல்ல, கையில் வெறும் 11 ரூபாயோடு மதுக்கரை சென்றுள்ளார் பத்மநாபன். அங்கிருந்து உணவை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டு, அரசு மருத்துவமனை அருகில் வீட்டிற்கு செல்ல பணம் இன்றி தவித்துள்ளார்.
சிறிது நேரம் செய்வதறியாது தவித்தபோது, முன்னொரு நேரத்தில் பத்மநாபன் தன் முயற்சியை பற்றி வேறொரு நண்பரிடம் விளக்கிக் கூறியிருக்க, அவர் அழைத்து, உணவு வீணாவதை பற்றி பேச வேண்டும் எங்கு உள்ளீர்கள் என கேட்டுள்ளார். பின் அவரே அரசு மருத்துவமனை அருகில் வந்து, இவரை அழைத்துகொண்டு போய் பத்மநாபனை இல்லத்திலும் விட்டுள்ளார். எனவே அந்த தருணம், “நான் என் நோக்கத்தை உணர்ந்த தருணம்” என நினைவு கூறுகிறார்.
தடுப்பது எப்படி
உணவுக்காக நாம் கடைகளில் சென்று பொருட்களை வாங்கும்பொழுதே கவனமாக இருக்க வேண்டும். என்ன தேவையோ அதை மட்டும் வாங்கினால் போதும் சமையல் அறையில் இருந்து சமைக்கப்படாமல் வீணாகும் உணவுப்பொருட்கள் தடுக்கப்படும்.
- பிர்ஸ்ட் இன் பிர்ஸ்ட் அவுட் (FIFO) என்ற முறையை கையாளவும். முதலில் வாங்கிய பொருட்களை முதலில் சமைத்து முடித்தலும், உணவு வீணாவதை தடுக்கும். மேலும் கையிருப்பு வைப்பதையும் கவனிக்க இயலும்.
- உணவகங்களில் உண்ணும் பொழுது வீணாகும் உணவை பொட்டலமாக கட்டி இல்லாதவர்களுக்கு நாமே அளிக்கலாம்.
- மேலும், மால்களிலும் திரை அரங்குகளிலும், ட்ரே(tray) உபயோகிப்பதை தவிர்க்கவும், ஏனென்றால், அதிக உணவை எடுக்க இயலாத போது வீணாவதும் குறையும்.
- இவை அனைத்திற்கும் முன்பு, சமைக்கும் பொழுதே தேவையான அளவு சமைத்தால் போதும். நோ ஃபூட் வேஸ்ட் வீட்டிலிருந்து துவங்கும்.
நோக்கம்
தன்னார்வ தொண்டு அமைப்பு நிறுவனங்கள் ஆரம்பிப்பவர்களுக்கு பல இடங்களில் கிளை பரப்பி, பல லட்சம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கும். ஆனால் பத்மநாபன் நோக்கம் "நோ ஃபூட் வேஸ்ட்" இயக்கத்தை மூடுவதே.
"எந்நாளில் உணவு வீணாவதில்லை, யாரும் பசியில் வாடவில்லை, பாரதி கூறியது போல தனியொரு மனிதனுக்கும் உணவு கிடைகிறது என்ற நிலை வருகின்றதோ அந்நாளில் இந்நிறுவனத்தை மூடிவிட்டு அடுத்த வேலை பார்க்க போய்விடுவேன்" என்கிறார் அவர். இதுவே என் கனவாகும்.
பின்புலம்
நல்ல காரியம் செய்யும் பொழு து போற்றுவோரை விடவும் தூற்றுவோர் அதிகம் இருப்பர். உன் ஒருவனால், பசி பட்டினி, உணவு வீணாவதை தவிர்க்க இயலாது என பலர் கூறினாலும், என்னால் இயன்றதை நான் செய்கின்றேன் என இன்றும் மனம் தளராது நாள் ஒன்றிற்கு 16 மணி நேரம் உழைத்து தன் இலக்கை நோக்கி இந்த இளைஞர் பயணிகின்றார். மேலும் spice நிறுவனம் மூலமும், சமூகத்திற்கு தேவையான யோசனைகளை வைத்து தொழில்முனைவோருக்கு மென் பொருளை மலிவு விலையில் வடிவமைத்து தந்தும், தன் தேவைகளை பத்மநாபன் பூர்த்தி செய்து கொள்கிறார்.
பேரணி
வேர்ல்ட் ஃபூட் டே (oct 16) அன்று, வழக்கமான பேரணியாக அல்லாமல், உணவு இன்றி தவிப்போரை வைத்து ஒரு பேரணியாக நடத்தியுள்ளார். யாருக்காக நாம் உணவு வீணாவதை தடுக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் அறிய வேண்டும். உணவு வீணாகும் அளவு குறைய வேண்டும் என்பதே இந்த பேரணியின் நோக்கம் என அவர் கூறுகிறார்.
தற்போது "ஜீரோ ஹங்கர் ஹவர்" என்ற தலைப்பில், உணவு இல்லாதவருக்கு உணவளிக்கும் ஒரு நிகழ்வையும் நடத்தினார். அதற்கு பல பிரபலங்களை, உணவு வீணாவதை பற்றி பேசவைத்து, அந்த பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பதிய வைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இவருக்கு ஆதரவாக, சென்னை, சேலம், ஈரோடு, பாண்டிச்சேரி, யுகே, மெல்பர்ன் ஆகிய இடங்களிலும், இதே ஜீரோ ஹங்கர் ஹவரை கடைபிடித்து, அந்நேரத்தில், பலருக்கு உணவளித்துள்ளனர்.
இந்த இளைஞனின் கனவு நனவாகும் நாளிற்காக நாமும், காத்திருப்போம். அது வரை உணவு வீணாக்குவதை முடிந்த அளவு குறைத்துக் கொள்வோம்.
இவரை தொடர: Padmanaban