உலகின் முதல் பெண் கடல் பைலட் சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா நிலோபர்!
சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா நிலோபர் கடல் பைலட்டாக அக்டோபர் மாதம் 30-ம் தேதி பதவி ஏற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரே இந்த பதவியை ஏற்கும் முதல் பெண்மனியாவார்.
கப்பலை கடலில் இருந்து துறைமுகத்திற்கு எடுத்துச் செல்வது மிகவும் சவாலான வேலை தான். கடலில் கப்பல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தனி தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும். அதிலும் இவர் 223 கிமீ தூரத்தை கடக்க உள்ளார், அதில் 148கிமீ ஹூக்லி வழி செல்லும் அதிக வளைவுகள் மற்றும் தடைகள் கொண்ட அபாயமான வழியாகும். இதற்காக ரேஷ்மா கொல்கத்தா துறைமுகத்தில் பயிற்சிபெற்று வருகிறார்.
“பள்ளி படிக்கும்போதே எனக்கு படிப்பை தாண்டி மற்ற விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். இது தான் ஆக வேண்டும் என்று எந்த இலக்கையும் நான் வைத்ததில்லை. மற்றவர்கள் போல் இல்லாமல் புதுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்,”
என்றார் ரேஷ்மா இன்போரோட்ஸ்-க்கு அளித்த பேட்டியில்
கடல் தொழில்நுட்பப் பொறியியல் படித்த ரேஷ்மா 2011-ல் கொல்கத்தா துறைமுகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அதில் இருந்து கடற்படை மாணவியாக ஒரு வருடம் பயிற்சிபெற்று முதல் மற்றும் இரண்டாம் நிலை தேர்ச்சி சான்றிதழை பெற்றுள்ளார். மேலும் கொல்கத்தா துறைமுகம் நடத்திய மூன்றாம் தரம் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆறு மாதத்தில் கடல் பைலட்டாக அமர பயிற்சிபெற்று வருகிறார்.
தற்பொழுது ரேஷ்மா சிறிய கப்பல்களை ஓட்டி அனுபவம் பெற்ற பிறகு அடுத்தகட்டமாக தரம் 1 மற்றும் 2-ல் உள்ள பெரிய கப்பல்களை வழி நடத்துவார்; அதாவது 70000 டன் எடை கொண்ட 300 மீட்டர் நீளம் கொண்ட கப்பல்கள் அவை.
“நான் எதோ படித்துவிட்டு ஐடி வேலையில் அமர விரும்பவில்லை, என் விருப்பத்திற்கு ஏற்றவாறு என் குடும்பமும் ஒத்துழைத்தது. நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை புரிந்துக் கொண்டால் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்” என்கிறார்.
சென்னை அண்ணா நகர் எஸ்பிஓஏ-வில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் பிர்லா தொழில்நுட்ப பல்கலைகழகத்துடன் இணைந்த சென்னை கானத்தூரை சேர்ந்த அமெட் பல்கலையில் பொறியியல் படிப்பை முடித்தவர்.