தடைகளைத் தாண்டி தடகள போட்டியில் பதக்கம் வென்ற தஞ்சை விவசாயின் மகன்!
தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி மகன் பிரவீன் சித்திரவேல் அயல் கடல் தாண்டி ப்யூனோஸ் எயர்ஸில் நடந்த யூத் ஒலிம்பிக் தடகள போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். 17 வயதான பிரவீன் கடந்த செவ்வாய் அன்று நடந்த ட்ரிப்பில் ஜம்ப் போட்டியில் வெண்கலம் பெற்று இந்திய தடகள நிகழ்வுக்கு இரண்டாவது பதக்கத்தை வென்று தந்துள்ளார்.
செவ்வாய் இரவு நடைப்பெற்ற ட்ரிப்பில் ஜம்ப் போட்டியின் இரண்டாவது நிலையில் 15.68மீ தூரத்தை பதிவு செய்து 5வது இடத்தில் முடித்தார் இவர். ஆனால் விளையாட்டின் 1வது நிலையில் 15.84மீ தாவி மூன்றாவது இடத்தை கைப்பற்றினார். இரு நிலைகளுக்கும் சேர்த்து 31.52மீ தாவி வெண்கல பதக்கத்தை வென்றார் பிரவீன்.
“பதக்கம் வென்றதை எண்ணி பிரவீன் மகிழ்ச்சி அடைந்தாலும் 2 வது நிலையில் சற்று தவரவிட்டத்தை நினைத்து வருந்துகிறார். ஆனால் பிரவீன் இந்த இடத்தை அடைந்ததை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்றார் பிரவீனின் பயிற்சியாளர் இந்திரா சுரேஷ் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்.
பிரவீன் தடகள போட்டியின் பல பிரிவுகளில் முயற்சி செய்த்தப்பின்னர் மார்ச் 2016ல் தான் இந்த பிரிவை தேர்வு செய்துள்ளார். தனது பயிற்சியாளரின் அறிவுரையைக் கேட்டு இதை தேர்ந்தெடுத்தப்பின் வேறு எதையும் பிரவீன் திரும்பி பார்க்கவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் கெலோ இந்தியா பள்ளி விளையாட்டில் தங்கம் வென்ற பிறகு இது தான் தன் பாதை என்று உறுதி செய்துக்கொன்டுள்ளார். இன்று இந்தியாவிற்காக பதக்கமும் வென்று தந்துள்ளர்.
இவரது வெற்றியை வரவேற்று நெடிசன்கள் பல பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர், பிரபலங்கள் உட்பட. நடிகர் கமல்ஹாசன் அவர்களும் பிரவீனை வாழ்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு,
“மும்முறை தாண்டும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற தஞ்சையைச் சேர்ந்த திரு.பிரவீன் சித்ரவேலிற்கு பாராட்டுக்கள். தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!”
இந்த வெற்றியை பிரவீன் சுலபமாக அடையவில்லை, கிராமத்தில் இருந்து வறுமையில் இருக்கும் இளைஞர்கள் தடகளத்தில் முன்னேறுவது இங்கு மிகவும் குறைவு. இந்த தடைகளை எல்லாம் தாண்டி பிரவீன் முன்னேறியதற்கு முக்கிய காரணம் அவரது பயிற்சியாளர்.
2012ல் மாநில அரசு சிறப்புத் திட்டத்தில் தேர்வாகி சென்னை வந்ததால் அவரது பயிற்சியாளருக்கு அறிமுகமானார் பிரவீன். அவருக்கு கிடைக்கும் உதவித்தொகைகளை வைத்து இந்திரா அவருக்கு பயிற்சி அளித்து , போட்டியில் கலந்துக்கொள்ள உதவி புரிகிறார். இவரது தடகள கனவுக்கு செலவு செய்யும் இடத்தில் இவரது குடும்பம் இல்லை.
“பிரவீனிற்கு தகுதியும் திறமையும் இருக்கு, மேலும் அவர் கடின உழைப்பாளி. இந்த நிலையில் நிச்சயம் அவர் ஆசிய விளையாட்டு, ஒலிம்பிக் மற்றும் காமன் வெல்த் விளையாட்டில் நுழய பிரவீனை மெருகேற்றுவேன்” என்கிறார் இந்திரா என் டி டி வி பேட்டியில்
தற்பொழுது மங்களூர், கர்நாடகாவில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பி.எ முதலாம் ஆண்டு படித்து வருகிறார் இவர்.
தகவல் உதவி: டைம்ஸ் ஆப் இந்தியா
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்