'Never Say Never' - நீச்சல் போட்டியில் தேசிய தொடர் சாதனை படைக்கும் நடிகர் மாதவன் மகன்!
48வது ஜீனியர் நேஷனர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தேசிய சாதனை படைத்துள்ள நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. வேதாந்த், 16:01.73 வினாடிகளில் இலக்கை அடைந்து, 2017ல் தனது மாநில சக போட்டியாளர் அத்வைத் 16:06.43 வினாடிகளின் உருவாக்கிய சாதனையை முறியடித்துள்ளார்.
அலைபாயுதே படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானவர் மாதவன். சாக்லேட் பாயாக, 90ஸ் இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த அவர், கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரங்களாகத் தேர்வு செய்ததால், இப்போதும் தொடர்ந்து திரை உலகில் நாயகனாகவே நீடித்து வருகிறார்.
இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, மாறா என சமீபத்திய இவரது படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகராக மட்டுமல்லாமல், 'ராக்கெட்ரி' படம் மூலம் இயக்குநராகவும் மாறினார் மாதவன். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் நம்பியாக இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
பெரும்பாலும் திரைத்துறையில் இருப்பவர்களின் வாரிசுகளும் அதே துறையிலேயே ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், ஒரு சிலரது பிள்ளைகள் இதற்கு விதிவிலக்கு. அப்படி விதிவிலக்கானவர் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்.
வேதாந்த் தேர்ந்தெடுத்தது நீச்சல்
16 வயதான வேதாந்த், தேசிய அளவில் நீச்சல் வீரர் ஆவார். சிறுவயதிலிருந்தே நீச்சல் மீது கொண்டிருந்த ஆர்வத்தால், மும்பையில் உள்ள கோரேகான் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்ந்து முறைப்படி நீச்சல் கற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக 2017ம் ஆண்டு மும்பையில் உள்ள கிளென்மார்க் அக்குவாடிக் பவுண்டேஷனில் சேர்ந்து தனது நீச்சல் திறமையை மேலும் மெருகேற்றிக் கொண்டார்.
தொடர்ந்து பயிற்சியாலும், முயற்சியாலும் தன் திறமையை பல்வேறு போட்டிகளில் நிரூபித்து வருகிறார் வேதாந்த். மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களைப் பெற்று வருகிறார்.
வேதாந்தின் நீச்சல் சாதனைகள்
- 2018ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த், 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியாவுக்காக வேதாந்த் வென்ற முதல் பதக்கம் அது.
- 2019ம் ஆண்டு ஜூனியர்களுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். தேசிய அளவில் வேதாந்த் தனியாக பதக்கம் வாங்கியது அதுவே முதல் முறை.
- கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் லத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார் வேதாந்த். இதில் வெண்கலப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார்.
- கடந்தாண்டு பெங்களூருவில் உள்ள பசவங்குடி நீச்சல் மையத்தில் நடைபெற்ற 47-வது ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில், மகாராஷ்டிரா சார்பில் வேதாந்த் மாதவன் பங்கேற்றார். பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற அவர், 4 வெள்ளிப் பதக்கங்களையும், 3 வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றினார்.
- கடந்த ஆண்டில் நடைபெற்ற லித்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்று வெண்கலம் வென்றார்.
- கடந்த ஏப்ரல் மாதம் டென்மார்க்கில் நடந்த சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 800 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த், பந்தய துாரத்தை 8 நிமிடம், 17.28 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். இந்தத் தங்கப் பதக்கத்தோடு, அதே போட்டியில், 1500 மீ., 'பிரீஸ்டைல்' போட்டியில் வெள்ளியும் வென்றார்.
- தற்போது இந்த வெற்றிப் பதக்கப் பட்டியலில் புதிதாக, ஒரு தங்கத்தைச் சேர்த்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். புவனேஸ்வர் கலிங்கா அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:01.73 விநாடிகளில் தூரத்தை கடந்து தங்கம் வென்றுள்ளார் வேதாந்த். இதற்கு முன்பு இதே போன்ற 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:06.43 என இருந்த தேசிய சாதனையை தற்போது அவர் முறியடித்துள்ளார்.
ஒவ்வொரு முறை வேதாந்த் நீச்சல் போட்டிகளில் வெற்றி பெறும் போதும், மாதவன் அதனை வாழ்த்த தவறியதில்லை. இப்போதும் அதே போல்,
“முடியாது என்று எப்போதும் கூறாதீர்கள்...” (Never say never) என பெருமிதத்துடன் குறிப்பிட்டு தனது மகன் நீச்சல் போட்டியில் சாதனை படைத்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் மாதவன்.
வேதாந்த்தின் இந்த சாதனைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் வேதாந்திற்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் வேதாந்த் பங்கேற்க உள்ளார். நிச்சயம் அப்போதும் இந்தியாவிற்கு பதக்கம் வென்று தருவார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அவர் மீது ஏற்படத் தொடங்கி விட்டது. மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தன் திறமையால் வெற்றிகளைக் குவித்து, பதக்க நாயகனாக மாறியுள்ளார் வேதாந்த்.
கொரோனா பிரச்சினையால் மும்பையில் மகன் நீச்சல் பயிற்சி பெற இயலவில்லை என துபாய்க்கு குடியேறினார் மாதவன். மகனின் வெற்றிக்காக தோள் கொடுக்கும் நல்ல தந்தையாக மாதவன் இருப்பதாக, அவரையும் அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.