எமர்ஜென்சி சமயத்தில் இதயத்துடிப்பை சீராக்கும் கருவி: அண்ணா பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
நின்றுப்போன இதயத்துடிப்பை சீராக்கும் சாமானியர்களும் பயன்படுத்தக்கூடிய வாய்ஸ் மூலம் இயங்கக் கூடிய கருவியை வடிவமைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
Automated external defibrillator (AED)- தானியங்கி வெளிப்புற டிஃபிப்ரிலேட்டர், அதாவது நின்றுப்போன இதயத்துடிப்பை சீராக்கும் கருவி இது. பல படங்களில் நாம் பார்த்ததுண்டு இந்தக் கருவியைப் பயன்படுத்தி நோயாளியின் இதயத்தில் வைத்து ஷாக் கொடுத்து இதயதுடிப்பை சீராக்க முயற்சி செய்வர். விபத்து போன்ற அவசர நேரங்களில் மருத்துவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் மிகச்சிறிய கருவி இது. இக்கருவியை இப்பொழுது வாய்ஸ் மூலமே பாமரர்களும் இயக்கும்படி அண்ணா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக இக்கருவியை மருத்துவப் பயிற்சி உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால் இப்பொழுது இவர்களின் கண்டுபிடிப்பால் சாதாரண மக்கள் கூட அவசரக் காலத்தில் பயன்படுத்தமுடியும்.
அதுவும் பேச்சின் மூலம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இதை இயக்கலாம். மக்கள் அதிகம் செல்லும் பொது இடங்களில் இதை வைத்தால் முதல் உதவியாக மக்கள் இதை தேவையானோருக்கு பயன்படுத்தலாம்.
இது குறித்து மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த பேராசிரியர் டி தியாகராஜன் மற்றும் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் TOIக்கு அளித்த பேட்டியில்,
“ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் இக்கருவியை மக்கள் பயன்பாட்டிற்கு வைத்தால் திடீர் நெஞ்சு வலியால் ஏற்படும் உயிரிழப்பைக் தவிர்க்கமுடியும். மேலும் இதில் GPS பொருத்தப்பட்டுள்ளதால் இடத்திற்கேற்ப மொழியை தானாகவே கண்டரிந்துக்கொள்ளும்,” என தெரிவிக்கிறார்.
இக்கருவியை ஆன் செய்த உடன் மொழியை தேர்வு செய்யச் சொல்லும், அதன் பின் கருவியின் பட்டைகளை பாதிக்கப்பட்டோரின் நெஞ்சின் மீது வைத்து அழுத்தச் சொல்லும், பின்னர் இதயத்துடிப்பை கணித்து இதயத்துடிப்பு சீராக இல்லை என்றால் அதற்கேற்ப ஷாக்கை தானே வெளியேற்றும்.
மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை முதன்மை ஆய்வாளர், சபிதா ராமகிருஷ்ணன் இது பற்றி கூறுகையில்,
“இக்கருவி இதயத்தில் மின்னதிர்ச்சியை ஏற்படுத்தி இதயத்துடிப்பை சீராக்கும். இதன் மூலம் சீரற்ற இதயத் துடிப்பு அல்லது இதயம் திடீரென்று நின்றுவிட்டால் மீண்டும் இதயத் துடிப்பையும் மீட்டெடுக்க முடியும்,” என்கிறார்.
பொதுவாக AED கருவியின் விலை ரூ 1.5 லட்சம் ஆகும், ஆனால் அண்ணா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இக்கருவியின் மாதிரி ரூ.50 ஆயிரம் மட்டுமே. குறைந்தது ஒரு வருடத்திற்குள் இக்கருவி விற்பனைக்கு வெளியிடப்படும்.
ஷாப்பிங் மால், விமான நிலையங்களில் இக்கருவியை பொறுத்திவிட்டால் மருத்துவர் உதவியின்றி இதைப் பயன்படுத்தி பலருக்கு முதலுதவி அளிக்கமுடியும்.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்